Home

Tuesday 27 October 2020

உப்பு - சிறுகதை

 முத்துக்கண்ணு விழுப்புரம் போகத் தொடங்கிவிட்டான். தரகுக்காரன் வீட்டுக்கும், வியாபாரி ரங்கசாமி வீட்டுக்கும் நடையாய் நடந்து மண்டியில் சேர்த்து விட்டாள் அம்மா.

முத்துக்கண்ணு கிளம்பும்போது குட்டிப்பாப்பா தூங்கிக் கொண்டிருந்தாள். எழுந்தபிறகு ஆடுவதற்குத் துணை இல்லாமல் அழுது ரகளை செய்தாள். ‘‘பெரியண்ணா எங்கம்மா, பெரியண்ணா எங்கம்மா’’ என்று அம்மாவைத் துளைத்தெடுத்தாள்.

குட்டிப்பாப்பாவுக்கு விளையாட்டுக் காட்ட முத்துக்கண்ணுவால்தான் முடியும். குட்டிப்பாப்பாவைச் சந்தோஷப்படுத்த புதுசுபுதுசாக விளையாட்டுகளைக் கண்டுபிடிப்பான் முத்துக்கண்ணு. சிரிக்கும்போது குட்டிப்பாப்பாவின் முகம் பூரித்துவிடும். பூ மாதிரியான அவள் கையை எடுத்து வைத்துக்கொண்டு ‘‘நண்டூறுது நரியூறுது’’ என்று விரல்களால் மெல்லமெல்லக் கையைத் தொடுவான். உடம்பெங்கும் கூச்சம் உண்டாகி அவள் சிரிக்கிற சிரிப்பில் வீடு குலுங்கும். கையைப் பிடுங்கிக்கொண்டு தப்பித்து ஓடுவாள் பாப்பா. பிடிப்பதற்காக பாசாங்கோடு துரத்துவான் முத்துக்கண்ணு. அகப்படாமல் சாமர்த்தியமாக வளைந்து வளைந்து சிரித்துக்கொண்டே ஓடுவாள் பாப்பா.

முத்து - சிறுகதை

 முத்தூ முத்தூஎன இரண்டு தரம் கூப்பிட்டுப் பதில் வராமல் போகவே எரிச்சலுடன் முனகியபடியே நாலு எட்டு நடந்து பின்கட்டு இறவாணத்தைப் பிடித்தவாறே சாணம் பிசைந்து கொண்டிருந்த ருக்குவிடம் எங்கடி போயி தொலைஞ்சிது ஒன் சிகாமணிஎன்றான் ராமசாமி?

அங்கதா ஆடிக்னிருந்தாம் பாரு!

அங்க அங்கன்னா அந்தரத்லியா தொங்கறான்! ஆவி போவ ஒரு மனுஷன் கத்திகினு இருக்கான். ஆளயே காணம்டின்னா கொஞ்சமாச்சும் அக்கறயோட பதில் சொல்றியா நீ?’’

வண்டிக்காரமூட்டுல பாட்டு கீட்டு கேட்டுணு ஒக்காந்திருப்பான்; பாத்து இழுத்தும் போறதவுட்டு சாணி தட்டறவகிட்ட சரத்து கட்டறியே?’

Wednesday 21 October 2020

உப்பு என்னும் ஆயுதம்

 

1930இல் நடைபெற்ற உப்புசத்தியாகிரகப் போராட்டம் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களில் மிகமிக முக்கியமானது. அதுவரை அரைகுறையாக எல்லோருடைய நெஞ்சங்களிலும் படர்ந்திருந்த அரசியல் உணர்வை இந்தப் போராட்டம் ஆழமாக வேரூன்றச் செய்து மரமாக வளர்த்தது. 12.03.1930 அன்று அதிகாலையில் சபர்மதி ஆசிரமத்திலிருந்து இந்தப் போராட்டத்துக்கான  தண்டி யாத்திரை தொடங்கியது. 79 சத்தியாகிரகிகளுடன் காந்தியடிகள் 23 நாட்கள் நடந்து 240 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து  05.04.30 அன்று தண்டி கடற்கரையை அடைந்தார். மறுநாள் காலையில் பிரார்த்தனைக்குப் பிறகு கடலோரத்தில் ஒரு பிடி உப்பை கையிலெடுத்து உயர்த்திஇது ஆங்கிலேய அரசின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் நடவடிக்கைஎன்று அறிவித்தார். தண்டியில் இருந்தபடியே அவர் தாராசனா போராட்டத் திட்டத்தை வகுத்தார்.

வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது” - கட்டுரை

 

 

தன்னைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை அடுத்தவர்களைப்பற்றி யோசிக்கத் தூண்டும் கூறுகளில் ஒன்று இலக்கியம். தன் வாழ்க்கை இல்லாத இன்னொரு புதிய வாழ்க்கையை இலக்கியம் மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறது. தனக்கு நேரும் அனுபவங்களையொட்டி சிரிக்கவும் அழவும் செய்கிற மனிதன் எழுத்துகளின் வழியாக உருப்பெற்று எழும் மனிதர்களின் செயல்பாடுகளைக் கண்டு சிரிக்கவும் அழவும் தூண்டப்படுகிறான். மானுட குலத்தின் துக்கத்துக்கும் ஆனந்தத்துக்கும் இலக்கியத்துக்கும் உள்ள நுட்பமான உறவை மனிதன் புரிந்துகொள்கிறான். ஒரு படைப்பை மனதார வாசித்த பிறகு மானுட குலத்தின் துக்கம் அவனுடைய துக்கமாகவும் மானுட குலத்தின் ஆனந்தம் அவனுடைய ஆனந்தமாகவும் மாறிவிடுகிறது. தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு வித்தை காட்டி பணம் சம்பாதிக்கும் சிறுவனொருவனைப்பற்ற்iய சிறுகதையைக் கார்க்கி எழுதியிருக்கிறார். பத்து வயதில் குடும்ப பாரத்தைத் தாங்குவதற்காக எங்கோ இருக்கும் கல்கத்தா நகருக்கு வீட்டுவேலை செய்வதற்காக ரயில்பயணம் செய்யும் சிறுமியின் கதையை தி.ஜானகிராமன் எழுதியிருக்கிறார். இரண்டு கதைகளையும் வாசிக்கும்போது நம் நெஞ்சம் கரைந்துவிடுகிறது. ஓர் இலக்கிய அனுபவம் நம்மீது செலுத்தும் ஆளுமைக்கு இந்த அடிப்படை உண்மைதான் அடையாளம். உலகம் முழுதும் இப்படிப்பட்ட எண்ணற்ற ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்துவதை ஒரு கடமையாகக் கொண்டு இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ஒரு வாசகனுடைய கோணத்தில் இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday 13 October 2020

கடைசி வரை - சிறுகதை

 


க்ளாரிநெட்டை உறையிலிருந்து எடுத்து கைக்குட்டையால் நான் துடைக்கத் தொடங்கியதுமேஒரு டீ குடிச்சிட்டு தொடங்கலாமாண்ணே?” என்று கேட்டான் ட்ரம்பட் கோவிந்தன். மெளனமாக அவன் பக்கமாக பார்வையைத் திருப்பிநாலு பாட்டு போவட்டும்டா, அப்பறமா பாத்துக்கலாம்என்று விரல்களால் சைகை காட்டினேன். உடனே அவனும் ட்ரம்பட்டை எடுத்துக்கொண்டான். உறையை மடித்து பெரிய ட்ரம் தனபாலிடம் இடது கையால் கொடுத்தான். நான் மடித்து வைத்திருந்த உறையை சின்ன ட்ரம் தேசிங்கு எடுத்துக்கொண்டு போனான்.

மாறிக்கொண்டிருக்கும் தளங்கள் - நூல் அறிமுகக்கட்டுரை

 


திருவிழாக் காலங்களில் வந்து சேரும் விருந்தினர்கள் வீட்டிலிருக்கும் ஒரு அக்காவையோ, அத்தையையோ, பெரியம்மாவையோ, கொழுந்தியையோ பார்த்துஅதே அரிசி, அதே மாவு, அதே வெல்லம். ஆனா நீ புடிக்கிற கொழுக்கட்டையில மட்டும் எப்படித்தான் இந்த இனிப்பு வந்து சேருதோஎன்று வியந்து பாராட்டி கண் மலர்வதைப் பார்க்காதவர்களே இருக்கமுடியாது. பல சமயங்களில் நாமே கூட அப்படி ஏதேனும் ஒரு வீட்டில் கண்மலர்ந்து நின்றிருப்போம். அதற்கு நிகராக வண்ணதாசன் சிறுகதைகள், அவற்றைப் படிக்கும் வாசகர்களை ஒவ்வொரு தருணத்திலும்  கண்மலர்ந்து நிற்கவைக்கின்றன. எல்லோரையும் சுற்றி நிற்கும் அதே மனிதர்களே வண்ணதாசனையும் சுற்றி நிற்கிறார்கள். அதே வாழ்க்கை. அதே வருத்தம். அதே மகிழ்ச்சி. ஆயினும் அவருடைய கதைத்தருணங்களிலிருந்து பாய்ந்தெழும் நொடிநேர அரைவட்டத்தின் வீச்சு அவருடைய சிறுகதைகளை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. மிகமிக நுட்பமாக நிகழும் இந்தத் தளமாற்றமே அவருடைய சிறுகதைகளின் சிறப்பம்சம். அவருடைய முதல் தொகுப்பான கலைக்கமுடியாத ஒப்பனைகள் முதல் எழுபத்தைந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வெளியீடாக பிரசுரமாகியுள்ள தீராநதி வரை அந்தச் சிறப்பம்சம் வைரமென ஒளிவீசுகிறது.

Wednesday 7 October 2020

கல்யாணராம ஐயர் - தியாகத்தின் இனிமை

 

1931ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கு வங்க மாகாணத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய கார்லிக் என்னும் ஆங்கிலேயர் கொல்லப்பட்டார். மேலும் பம்பாயில் கவர்னராகப் பணிபுரிந்துவந்த ஆங்கிலேய அதிகாரியைக் கொல்லவும் முயற்சி நடைபெற்றது. இத்தகு அரசியல் கொலைகளைக் கண்டித்து 06.08.1931 அன்று பம்பாயில் நடைபெற்ற அனைத்திந்திய காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மாநாட்டில் அத்தீர்மானங்களை முன்வைத்து அன்று காந்தியடிகள் உரையாற்றினார்.

ஆனந்த தீர்த்தர் : உரிமைப்போரின் பெருமிதம்

 

இன்று காலை நேரத்தில் நான் தங்கியிருந்த இடத்தில் யாரோ யாரையோ அழைக்கும் கூக்குரலைக் கேட்டேன். வயல்வெளிகளிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் உழைப்பாளிகள் வழக்கமாக இப்படி உரத்த குரலில் ஒருவரை ஒருவர் அழைப்பதையும் உரையாடிக்கொள்வதையும் நான் பார்த்திருக்கிறேன். அந்தக் குரலையும் நான் அப்படித்தான் முதலில் நினைத்துக்கொண்டேன். ஆனால் என்னுடன் தங்கியிருந்த இராஜாஜி அது கேரளத்தில் மட்டுமே வாழக்கூடிய நாயாடிகள் என்னும் பிரிவினர் பிச்சை கேட்டு எழுப்பும் சத்தமென்று சொன்னார். நான் உடனே வெளியே வந்து பார்த்தேன். சாலையில் எந்தப் பக்கத்திலும் அந்த மனிதரைப் பார்க்கமுடியவில்லை. தேடியபோது, தொலைவில் சாலைக்கு அப்பாலிருந்த ஒரு புதருக்குப் பின்பக்கத்தில் அவர் நின்றிருப்பதைப் பார்த்தேன். உடனே அவரை அருகில் வரும்படி நான் அழைத்தேன். தெருவில் நடக்கும் உரிமை தனக்கில்லை என்று சொல்லி அவர் மறுத்தார்.”