அநேகமாய் எனக்கு விதிக்கப்போகிற தண்டனை அதிகபட்சமாய் இருக்கக்கூடும் என்றும், என்னை வேலையை விட்டே எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் என் சிநேகிதர்கள் சொன்னார்கள். அவர்கள் பேச்சில் முன்பு போல என்னுடன் ஒட்டுதல் வளர்க்கும் ஆர்வமோ, அன்யோன்யமோ இல்லை. எல்லாமே ஒரு கணத்தில் வடிந்துவிட்ட மாதிரி வறட்சியாகவும் பீதி ஏற்படுத்துவதாகவும் இருந்தன. என்னுடன் பேசுவதில் கூட கலவரம் கொண்டது போல் தோன்றியது. அவர்கள் முகங்களில் அழுத்தமான பய ரேகைகளைக் காணமுடிந்தது.