இரண்டாம் உலகப்போருக்குப்
பின்னர் வதைமுகாமில் அனுபவித்த கொடுமைகளை பன்னிரண்டு வயதுச் சிறுமியின் நாட்குறிப்புகள்
வழியாகவும் வெவ்வேறு படைப்பாளிகளின் சுயசரிதைக்குறிப்புகள் வழியாகவும் அறிய நேரும்போது பதறாத நெஞ்சமே உலகில் இல்லை. வதைப்பவனும் மனிதன். வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றி கருணையில்லாமல் எதற்காக ஒருவன் இன்னொருவனை இப்படி வதைக்கவேண்டும்? ஒருவன் வதையில் இன்னொருவன் காணத்தக்க ஆனந்தம் என்ன? இந்தக் கேள்விகளால் அலைக்கழிக்கப்படாத மனமே இருக்கமுடியாது. இத்தகு வதைகளுக்காவது போர் என்னும் காரணம் இருக்கிறது. எந்தப் போர்ப்பின்னணியும் இல்லாமல் காலம் காலமாக சாதியின் காரணமாக வதையுறச் செய்யும் காரியங்களுக்கு என்ன காரணம் சொல்லமுடியும்? வெறியா? அகங்காரமா? வெறுப்பா? கசப்பா? ஆத்திரமா? சீற்றமா? எரிச்சலா? எது இவர்களைத் தூண்டுகிறது? எது இவர்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கிறது? ஒரு பிறப்பையே கேவலம் என்று ஏளனம் செய்யும் உரிமை மேல்சாதியினருக்கு
எப்படி வந்தது? சாதி என்னும் அடையாளத்துக்கு அந்த அளவுக்கு சக்தி எப்படி வந்தது? அதை வழங்கியது யார்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான விடைகளைத் தேடிச் செல்பவர்களால்மட்டுமே மானுட வரலாற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும்
புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.