எங்கள் தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர் கண்ணன். புத்தரின் வாழ்க்கையை ஒரு கதையைப்போல எங்களுக்கு அவரே முதன்முதலாகச் சொல்லிக் கொடுத்தவர். புத்தரை மட்டுமல்ல, ஏசு, காந்தி, வள்ளலார் போன்ற ஆளுமைகளைப்பற்றியெல்லாம் சின்னச்சின்ன கதைகள் வழியாக எங்களுக்கு அவரே அறிமுகப்படுத்தினார். அறியாத வயதில் நாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கெல்லாம் விரிவான வகையில் ஏராளமான எடுத்துக்காட்டுகளோடு பதிலைச் சொல்லிப் புரிய வைத்தவர். கொஞ்சம் கூட கோபத்தைக் காட்டாத குரல் அவருக்கிருந்தது.