கனகனேரியின்
கரைகள் உயர்த்தப்பட்ட பிறகு தினசரி நடைப்பயிற்சிக்குப் பொருத்தமான இடமாகிவிட்டது. நான்கு
சுற்று நடந்த பிறகு மரத்தடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.
Home
▼
Thursday, 27 December 2018
ஆதரவு - கட்டுரை
பார்வையாளர் நேரம் தொடங்குவதற்கு இன்னும் நேரமிருந்ததால் கண்போன போக்கில் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே ஒவ்வொரு கட்டடமாக வேடிக்கை பார்த்தபடி நடக்கத் தொடங்கி பிணக்கிடங்கு வரைக்கும் சென்றுவிட்டேன். அதுவரைக்கும் பார்க்காத இடமென்பதால் எல்லாமே புதுமையாக இருந்தன. மதிலையொட்டிய முட்புதருக்குப் பின்னால் தாழம்பூவின் மணம் கமழ்ந்தது. ஆறேழு வேப்பமரங்களும் ஒரு ஆலமரமும் இரண்டு வாதுமை மரங்களும் அந்த இடத்துக்கு ஒரு கிராமத்துச் சூழலைக் கொடுத்தன. அவற்றின் நிழலில் இரண்டு அமரர் ஊர்திகளும் ஏழெட்டு இருசக்கர வாகனங்களும் நின்றிருந்தன.
Sunday, 16 December 2018
கதவு திறந்தே இருக்கிறது – பொல்லாச் சூழ்ச்சியின் புற்றுகள்
சங்கப்பாடல்களை எடுத்துக்காட்டாகச் சொல்லி பேசாதவர்களோ, பெருமைப்படாதவர்களோ தமிழ்ச்சூழலில் இல்லை. அந்த அளவுக்கு அவற்றின் அறிமுகம் வேரூன்றியிருக்கிறது. அவை கருத்தாழம் கொண்டவை. காலத்தால் மிகவும் பழைமை வாய்ந்தவை. அப்பாடல்களில் அமைந்திருக்கும் நயங்களை எளிய வாசிப்புப்பழக்கம் கொண்டவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இதுவரை ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பல மேடைகளில் அவை மீண்டும் மீண்டும் முழங்கப்பட்டுள்ளன. பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். சங்ககாலத்தில் தாவரங்கள், சங்ககாலத்தில் விலங்குகள், சங்ககாலத்தில் போர்கள் என ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை சங்ககாலத்தைப் பின்னணியாகக் கொண்டு தமிழில் யாரும் ஒரு நாவலை எழுத முயற்சி செய்ததில்லை. ஜெயமோகன் எழுதிய கொற்றவை நாவல் சங்ககாலத்துக்கும் முந்தைய பண்பாட்டுக்கூறுகளை பல கோணங்களில் தொகுத்தளிக்கும் முயற்சியை முன்னெடுத்த முக்கியமான படைப்பு. இப்படிப்பட்ட சூழலில் மனோஜ் குரூர் என்னும் மலையாள நாவலாசிரியர் சங்ககாலத்தைக் களமாகக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நாவலை எழுதி வெளியிட்டார். அது
கேரளச்சூழலில்
உடனடியாக பரவலான கவனத்தைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அந்த நாவல் மலையாளத்திலிருந்து
தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்த்தவர் கே.வி.ஜெயஸ்ரீ. நாவலின் பெயர் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’
பச்சைக்கிளிகள் - சிறுகதை
ஆங்கில
வகுப்புக்கு பாடமெடுக்க அன்று
வரவேண்டியவர் சுந்தரராஜன் சார்.
அவர் விடுப்பில் இருந்ததால்
மாற்று ஏற்பாடாக ராமசாமி
சார் வந்தார். ‘குழலூதுபவனும்
எலிகளும்’ என்றொரு கதையை
எங்களுக்கு அவர் சொன்னபோது,
அவர் ஏதோ புதுமையாகச்
சொல்கிறார் என்றுதான் முதலில்
தோன்றியது. குழலோசை கேட்டதும்
கூட்டம்கூட்டமாக எலிகள்
குழலூதுபவனின் பின்னாலேயே செல்கின்றன.
அவற்றை தந்திரமாக ஆற்றுக்குள்
இறக்கி இறக்கும்படி செய்து
விடுகிறான் குழலூதுபவன். அவன்
எதிர்பார்த்த பரிசுத்தொகை மறுக்கப்படுகிறது. மனமுடைந்த பாடகன்
மறுநாள் அந்த நகரத்தின்
குழந்தைகளையெல்லாம் குழலோசையால்
கூட்டம்கூட்டமாக அழைத்துக்கொண்டு செல்கிறான். உடனே அரசன்
உரிய பரிசுத்தொகையைக் கொடுத்து
குழந்தைகளை மீட்டுக்கொள்கிறான். ராமசாமி
சாரின் கதைகூறும் திறமையால்
எங்கள் கண்முன்னால் அந்தக்
காட்சிகள் அப்படியே படம்படமாக
விரிந்தன. வகுப்பு முடியப்போகிற
சமயத்தில்தான் அந்தக் கதை
எங்கள் ஆங்கிலப்புத்தகத்தில் உள்ள
ஒரு பாடம் என்று
சொல்லிவிட்டுச் சென்றார்.
Thursday, 22 November 2018
படம் - சிறுகதை
பார்வையாளர்கள் நேரம் தொடங்குகிற நாலரை மணிக்கு வெளியே வருகிற
முத்துசாமி அண்ணனிடமிருந்து பொறுப்பை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஏற்பாடு. நான் அதற்கு முன்பாகவே மருத்துவமனைக்குப் போய்விட்டேன். ஷேர் ஆட்டோவைத் தவிர்த்துவிட்டு பஸ்ஸ்டாண்டிலிருந்து ஜி.எச்.வரைக்கும் நடந்தே வந்ததில் பத்து ரூபாய் செலவு மிச்சம். நேற்றும் இப்படித்தான் செய்தேன். ஆனால் ஜி.எச். வந்து சேர சற்றே தாமதமாகிவிட்டது. பஸ் பிடித்த நேரத்தில் ஏதோ தப்பு நடந்துவிட்டது. நான் எவ்வளவோ எடுத்துச் சொன்னபோதும் கூட வாசலில் கோபத்தோடு காத்திருந்த முத்துசாமி அண்ணனுக்கு நம்பிக்கை வரவில்லை. பொறுப்பில்லாமல் தாமதமாக வந்து நிற்பதாகவே குற்றம் சொன்னார்.
Tuesday, 20 November 2018
இளம்பருவத்துச் சித்திரங்கள் - எம்.டி.வாசுதேவன் நாயரின் தன்வரலாற்றிலிருந்து சில பகுதிகள்
நகரத்தில் விடுதியில் தங்கிப் படிக்கிறான் ஒரு கிராமத்து ஏழைச் சிறுவன். சில பணக்காரப்பிள்ளைகளும் அவனோடு சேர்ந்து படிக்கிறார்கள். அவர்களைப்போல புத்தாடைகள் உடுத்திக்கொண்டு நடப்பதையோ,
விடுதிக்கு வெளியே சென்று செலவு செய்து சாப்பிடுவதையோ அவனால் கற்பனைகூடச் செய்து பார்க்கமுடிவதில்லை. கிராமத்தில் அவனுடைய அம்மா மட்டும் வசிக்கிறார்.
அவனுடைய அப்பா சிலோனில் ஏதோ வேலை செய்கிறார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நெருக்கமான பேச்சுவார்த்தை எதுவும் கிடையாது. ஊருக்கு வரும் சமயங்களில் கூட அப்பா
வேறொரு வீட்டில் தங்கிக்கொள்கிறார்.
ஆனால் சிறுவனுடைய படிப்புச்செலவுக்கு அவர்தான் பணம் அனுப்புகிறார்.
அக்காலத்தில் சிலோனிலிருந்து பணம் அனுப்பவதற்கு ஏராளமான அரசுக்கட்டுப்பாடுகள் இருந்தன. ஒரு
மாதத்துக்கு அறுபது ரூபாய் மட்டும் அனுப்புவதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கிறது.
அதனால் சிறுவனுக்கு அறுபது ரூபாய்மட்டும் அனுப்பிவைக்கிறார்.
பள்ளிக்கட்டணம் நாற்பது ரூபாய். எஞ்சிய இருபது ரூபாயைக் கொண்டு அவன் மற்ற செலவுகளைச் சமாளித்துக்கொள்கிறான்.
Saturday, 10 November 2018
ரசனைக்குரிய ரசவாதம்
’இங்கா’
தொகுதியின் வழியாக சிறார் பாடல்களின் உலகத்தில் அழுத்தமாகத் தடம் பதித்த செந்தில் பாலாவின் இரண்டாவது தொகுதியாக ‘வவ்வவ்வ’ வந்திருக்கிறது. செந்தில்பாலாவின் மனமும் சொல்லும் சிறுவர்களுக்கு இணையாக இயங்குகின்றன என்பதற்கு இத்தொகுதி ஒரு நிரூபணம். சிறுவர்கள் வாய்ப்பேச்சிலும் விளையாட்டிலும் பயன்படுத்தி மகிழும் பல சொற்களை நல்ல தாளக்கட்டோடு தம் பாடல்களில் பயன்படுத்திக்கொள்கிறார் செந்தில்பாலா.
தங்கப்பா: சில பழைய நினைவுகள்
புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் நான் கணிதப்பிரிவில் படித்துக்கொண்டிருந்தபோது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் தங்கப்பா. அப்போது செய்யுள், உரைநடை, நவீன இலக்கியம், துணைப்பாடம், கட்டுரை என நாலைந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டு தனித்தனியாகப் பாடங்கள் நடந்தன. தங்கப்பா எங்களுக்குச் செய்யுள் பாடம் நடத்தினார். வகுப்பில் அறிமுகமாகி நன்கு பழகிய பின்னர் தமிழ்த்துறைக்குச் சென்று அடிக்கடி அவரைச் சந்தித்துப் பேசினேன். நான் அவ்வப்போது எழுதும் கவிதைகளை அவரிடம் காட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டேன். அவர் அவற்றைப்பற்றிக் கருத்துரைக்கவேண்டும் என விரும்பினேன். அவர் தன் எண்ணங்களைச் சொல்வதோடு மட்டுமன்றி, கவிதைகள் மேம்படும் விதத்தில் சில திருத்தங்களையும் சொன்னார். பெரும்பாலும் சந்தநயம் பிசகும் இடங்களுக்குப் பொருத்தமாக ஒரு சொல்லை மாற்றி இன்னொரு சொல்லை அமைத்துக் கொடுத்தார்.