சமீப காலத்தில் சிறுகதைகளை எழுதி
வருபவர்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக எழுதிவரும் முக்கியமான படைப்பாளி சாம்ராஜ்.
இதற்கு முன்பு தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வந்த அனுபவத்தில் அவருக்கு மிக இயல்பாகவே
படைப்புமொழி கைகூடி வந்திருக்கிறது. ஒரு படைப்பில் எந்த அம்சம் முன்வைக்கப்பட வேண்டும்,
எந்த அம்சத்தை மறைக்கவேண்டும், எது இலைமறை காயென இருக்கவேண்டும் என்னும் தெளிவையும்
அவர் அடைந்திருக்கிறார். பத்து சிறுகதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கும் அவருடைய முதல்
தொகுதி அவருடைய வரவை அழுத்தமாகப் பதிவு செய்யும் விதமாக அமைந்திருக்கிறது.
Monday, 30 January 2017
Tuesday, 17 January 2017
குழந்தைகளின் பொன்னுலகம் - தங்கப்பாவின் ‘பூம்பூம் மாட்டுக்காரன்’
தமிழ்ச்சூழலில் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும்
மேலாக மரபுப்பாவலராக ஊக்கமுடன் இயங்கிவரும் தங்கப்பா தொடக்கக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்கான
பாடல்களையும் எழுதி வருகிறார். எங்கள் வீட்டுச்
சேய்கள் அவருடைய தொடக்கக் காலத்தொகுதிகளில் மிகமுக்கியமானது. குழந்தையோடு குழந்தையாக
வாழ்ந்த அனுபவங்களை அத்தொகுதியில் நாம் காணலாம்.
இயற்கைக்காட்சிகளின் சொல்லோவியத் தொகுப்பு - தங்கப்பாவின் ‘காரும் கூதிரும்’
குறுந்தொகையைப்பற்றி நானும்
நண்பரொருவரும் ஒரு மாலையில் உரையாடிக்கொண்டிருந்தோம். பேச்சு நீண்டுநீண்டு குறுந்தொகையிலிருந்து
ஆளுக்கு சில வரிகளை நினைவிலிருந்து சொல்ல முயற்சி செய்வதில் வந்து முடிந்தது. கணநேர
யோசனைக்குப் பிறகு கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே, கன்றும் உண்ணாது கலத்திலும் படாது,
கையில் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் என நண்பர் வேகவேகமாக ஒரு பத்து வரிகளைச்
சொன்னார். என் பங்குக்கு நானும் சிறுகோட்டுப் பெரும்பழம், செம்புலப்பெயல்நீர், யாருமில்லை
தானே கள்வன், பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா நாருடை ஒசியல், நோக்கிநோக்கி வாள்
இழந்தனவே என சில வரிகளை முன்வைத்தேன். அப்படிச் சொல்ல முடிந்ததில் இருவரும் மகிழ்ச்சியுற்றோம்.
படித்து பல ஆண்டுகள் கடந்த பிறகும் எப்படி அந்த வரிகள் மனத்தில் தங்கியிருக்கின்றன
என்றொரு கேள்வி எழுந்தது. சொற்கள் அடுக்கப்பட்டிருந்த முறையும் சொன்ன விதமுமே மிகமுக்கியக்
காரணங்கள் என்பதை அக்கணத்தில் கண்டடைந்தோம்.
Labels:
காரும் கூதிரும்,
குறுந்தொகை,
தங்கப்பா,
பாவண்ணன்
Saturday, 31 December 2016
வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்
எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம்
விருது அறிவிக்கப்பட்டு எங்கெங்கும் அவரைப்பற்றிய உரையாடல்கள் பெருகிப் பரவிக்கொண்டிருக்கும்
இத்தருணத்தில் சாகித்ய அகாதெமி விருதும் அவரைத் தேடி வந்திருக்கிறது. அவருடைய ஒரு சிறு இசை என்னும் சிறுகதைத்தொகுதிக்காக
அவர் இவ்விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவருடைய பன்னிரண்டாவது
சிறுகதைத்தொகுதி. இதையடுத்து நாபிக்கமலம்
என்னும் தலைப்பில் ஒரு தொகுதியும் வந்துள்ளது. கலைக்கமுடியாத ஒப்பனைகள் தொடங்கி நாபிக்கமலம்
வரைக்கும் அனைத்துத் தொகுதிகளுமே தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை.
Labels:
அரசமரம்,
ஒரு சிறு இசை,
நாபிக்கமலம்,
பாவண்ணன்,
வண்ணதாசன்
Sunday, 18 December 2016
இன்குலாபுக்கு அஞ்சலிகள்
1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை
கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன்.
அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான
புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை அந்த நூலகத்திலேயே கழித்தேன். அங்கிருந்த
எல்லாப் புத்தகங்களையும் படித்துமுடித்தேன். என் வாசிப்பைப் பார்த்த தொழிற்சங்க நண்பர்கள்
எனக்காகவே புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்கள். தம் வீட்டில் இருக்கும் புத்தகங்களையும்
கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்கள் நம்பிய கொள்கைகளுக்கு வெளியே உள்ள விஷயங்களிலும்
நான் ஆர்வமுள்ளவன் என்று தெரிந்தபோதும்கூட, அவர்கள் என் மீது எப்போதும் போலவே நட்புணர்வுடன் இருந்தார்கள். எனக்குப் புத்தகங்களைக்
கொண்டு வந்து கொடுப்பதை அவர்கள் ஒருபோதும் நிறுத்தியதே இல்லை. நான் புதுச்சேரியில்
இருந்தவரைக்கும் எனக்குத் தேவையான புதிய புத்தகங்களை அவர்கள் வழியாகவே பெற்றுப் படித்தேன்.
இடதுசாரிச் சார்புள்ள அஸ்வகோஷ் என்னும் ராஜேந்திர சோழன், தணிகைச்செல்வன், பா.ஜெயப்பிரகாசம்,
பூமணி என ஏராளமான படைப்பாளிகளின் புத்தகங்களை நான் அப்போது விரும்பிப் படித்தேன். அந்த
வரிசையில்தான் இன்குலாப் எழுதிய சூரியனைச் சுமப்பவர்கள்
என்னும் கவிதைத்தொகுதியைப் படித்தேன்.
Saturday, 10 December 2016
மானுடச் சித்திரங்கள் - (புத்தக அறிமுகம்)
நீலகண்டனின் “உறங்கா நகரம்”
ஒரு நகரம் வளரும் விதம் ஆச்சரியமானது. வாய்ப்புகளைத் தேடி
நகரத்தைநோக்கி மனிதர்கள் வந்தபடி இருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பு
நகரத்துக்குத் தேவைப்படுகிறது. பிறகு, உழைக்கும் மக்களுக்கான சிறுசிறு
குடியிருப்புகள் உருவாகின்றன. அப்புறம், அவர்களுடைய தேவையை ஒட்டி வணிகநிலையங்கள்
அமைக்கப்படுகின்றன. பொழுதுபோக்கு நிலையங்கள் உருப்பெறுகின்றன. கோயில், குளங்கள்
தோன்றுகின்றன. கல்விநிலையங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. சாலைகள் போடப்படுகின்றன.
மின்சாரம் வருகிறது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி புதியபுதிய தொழில்கள்
முளைக்கின்றன. நகரத்தின் எல்லாத் தமனிகளிலும் சிரைகளிலும் ரத்தம்
பாய்ந்தோடிக்கொண்டே இருக்கின்றது.
கலைநயமும் சொல்நயமும் - (புத்தக அறிமுகம்)
விட்டல்ராவின் ”நவீன கன்னட சினிமா”
எழுபதுகளில் வெளியான ‘சம்ஸ்காரா’ திரைப்படத்தோடு
புதிய அலைவீச்சைக் கொண்ட கன்னட மொழித் திரைப்படங்கள்
வெளிவரத் தொடங்கின என்பது ஒரு வரலாற்று உண்மை. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.
பல முக்கியமான ஆளுமைகளை நவீன கன்னடத் திரைப்பட உலகம் இந்தியாவுக்கு அளித்துள்ளது. கிரீஷ்
கார்னாட், எம்.எஸ்.சத்யு, ஜி.வி.ஐயர், நாக் சகோதரர்கள், பி.வி.காரந்த், பட்டாபி ராம
ரெட்டி, புட்டண்ண கனகல், கிரீஷ் காசரவள்ளி என சுருக்கமான ஒரு பட்டியலை நமக்கு வழங்குகிறார்
விட்டல்ராவ்.
Subscribe to:
Posts (Atom)