1920இல் நாகர் கோவிலில் ஸ்காட் கிறித்துவ உயர்நிலைப்பள்ளியில் படித்துவந்த பதினாறு வயது நிரம்பிய ஒரு மாணவருக்கு பள்ளிக்கூட நூல்களுக்கு அப்பால் யங் இந்தியா பத்திரிகையைப் படிக்கும் பழக்கம் இருந்தது. அதில் தீண்டாமையை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தைப்பற்றி காந்தியடிகள் எழுதும் கட்டுரைக்குறிப்புகளை அந்த மாணவர் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்துவந்தார். திருவனந்தபுரத்தில் தேசியக்கல்வியைப் புகட்டும் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திவந்த அம்மாணவருடைய மாமாவான மார்த்தாண்டன் தம்பியின் நெருக்கத்தால் தீண்டாமை என்னும் சமூகத்தீமையைப்பற்றி ஏற்கனவே அவர் கொண்டிருந்த எண்ணம் காந்தியடிகளின் கட்டுரையைப் படித்ததைத் தொடர்ந்து ஆழமாக வேரூன்றியது.