அருமாத்தபுரம் ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் பாண்டிச்சேரியைப் பார்க்கிற பச்சை வர்ண கட்டிடத்தில்தான் இருதயமேரி கான்வென்ட் இருக்கிறது. போகன்வில்லாவும் நந்தியாவட்டையும் வளர்ந்திருக்கிற வாசலுக்கு மேல் சின்ன பெயர்ப்பலகை. பஸ்ஸில் போகிற எந்தப் பிரயாணியும் படிக்கிறமாதிரி பளிச்சென்றுதான் எழுதி இருக்கிறது. ஆனால் பஸ்காரன் மாத்திரம் நிறுத்துவதில்லை. கெஞ்சிப் பார்த்தால்கூட ரொம்ப தூரம் தள்ளி சுல்தான்பேட்டையில்தான் நிற்கிறது. முனகியபடியே லூசி இறங்குகிறாள்.