Home

Sunday, 21 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 4

 

கடந்து செல்லும் கலை

கா.ஸ்ரீ.ஸ்ரீ. என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாசாசாரியார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிருந்தாவனத்தில் 1913இல் பிறந்தார். வேத பண்டிதரான அவருடைய தந்தையாரே அவருக்கு  சமஸ்கிருதம், இந்தி, வங்கம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்பித்தார். பணியின் நிமித்தமாக அவருடைய தந்தையார் பம்பாய்க்கு அருகில் கல்யாணுக்குக் குடியேறியபோது, அங்கிருந்த பள்ளியில் சேர்ந்து மராத்தியும் ஆங்கிலமும் கற்றார். ஏழாம் வகுப்பில் படிக்கும்போது காதில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு மருத்துவம் செய்துகொள்வதற்காக அவருடைய குடும்பம் சென்னைக்குக் குடிபெயரவேண்டிய நிலை ஏற்பட்டதால், சென்னையில் இருந்த பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.

ஆவணமாகும் நினைவுக்குறிப்புகள்

 

கல்கத்தாவில் 15.08.1872 அன்று பிறந்த அரவிந்தர் ஆங்கிலேயர் காலத்து ஐ.சி.எஸ். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் உதவித்தொகை பெற்று இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காகச் சென்றார். படிப்புக்காலத்தின் இறுதியில் நடைபெற்ற ஐ.சி.எஸ். தேர்வில் தேறியபோதும் குதிரையேற்றத் தேர்வில் பங்கேற்காமல் அவர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார்.

Thursday, 18 June 2026

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் : எல்லாம் செயல்கூடும்


இந்தி பிரச்சார சபையின் வெள்ளிவிழா சென்னையில் 25.01.1946 அன்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றுவதற்காக காந்தியடிகள் வந்திருந்தார். அன்றைய கூட்டத்தில் இந்தியா போன்ற பெரியதொரு நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் தாய்மொழிக்கல்வியிலும் இணைப்புமொழிக்கல்வியிலும் தேர்ச்சி பெறுவது மிகமுக்கியம் என்பதை காந்தியடிகள் வலியுறுத்திப் பேசினார். நான்கு நாட்கள் கழித்து அதே இடத்தில் நயி தலீம் பட்டமளிப்புவிழா நடைபெற்றது. ஆதாரக்கல்வித் திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சியை முடித்த இருபத்தாறு பேர்களுக்கு காந்தியடிகளே சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். அவருடைய உடல்நிலை அப்போது மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல்  தொடர்ந்து மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றிய காந்தியடிகள் 02.02.1946 அன்று மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

Wednesday, 17 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 3

 

அரிய மனிதர்கள்


பெரியசாமித் தூரன் என்கிற பெ.தூரன் மிகப்பெரிய தமிழறிஞர். பாரதி ஆய்வாளர்களில் முதன்மையானவர். தம் பாடல்கள் வழியாக தமிழிசை இயக்கம் வேரூன்றக் காரணமாக இருந்தவர். அதற்காக எண்ணற்ற இசைப்பாடல்களை அவர் இயற்றினார்.  ‘முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்’ என கோவில்தோறும் ஒலிக்கும் பாடலை எழுதியவர் அவர்தான்.

சிறுகதை வளர்ச்சியின் தடங்கள்

 

நவீன இலக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவரான சி.சு.செல்லப்பா மணிக்கொடி இதழின் இரண்டாவது காலகட்டத்தில் எழுதத் தொடங்கியவர். அவர் எழுதிய வாடிவாசல் நாவல் இன்றளவும் வாசகர்களால் விரும்பிப் படிக்கக்கூடிய படைப்பாக உள்ளது. அவர் எழுதிய  சிறுகதைகள் இதுவரை ஒன்பது தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஒரு படைப்பைப் பல கோணங்களிலிருந்து அணுகி ஆய்வு செய்யும் அலசல் விமர்சன மரபை அவரே தொடங்கிவைத்தார். தெளிவான கோட்பாட்டுப் புரிதலோடு எழுத்து என்னும் சிற்றிதழைத் தொடங்கி பல இன்னல்களுக்கிடையில் பல்லாண்டு காலம் தொடர்ந்து நடத்தி விமர்சனத்துக்கான ஒரு தளத்தை உருவாக்கினார். தமிழில் புதுக்கவிதை உருவாகி நிலைபெற்றதற்கு எழுத்து இதழ் நல்லதொரு தளமாக விளங்கியது.

Sunday, 7 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 2

 

வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

 

எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் முழுமையான பெயர் செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார். திருவண்ணாமலையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.  வழக்கு நிமித்தமாக ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களையும் சந்தித்து உரையாடிய அனுபவங்களே அவரை ஓர் எழுத்தாளராக வடிவமைத்தன.

கும்பகோணத்தின் சுவடுகள்

  

இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் நவீனத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு மணிக்கொடி இதழ் ஆற்றிய பங்கு மகத்தானது. 1933ஆம் ஆண்டு முதல் 1950 வரை மூன்று காலகட்டங்களிலாக வெளிவந்த  அவ்விதழில் இரு தலைமுறை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அரசியல் நோக்கத்துடன் வார இதழாகத் தொடங்கப்பட்டு பின்னர் இலக்கியத்துக்கான மாத இதழாக மாற்றமடைந்தது. மணிக்கொடி காலத்தை தமிழ்ச்சிறுகதைகளின் மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லலாம். மணிக்கொடி இதழை முன்வைத்து உருவான இலக்கிய ஆளுமைகள் ‘மணிக்கொடி எழுத்தாளர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.