கடந்து செல்லும் கலை
கா.ஸ்ரீ.ஸ்ரீ. என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீநிவாசாசாரியார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிருந்தாவனத்தில் 1913இல் பிறந்தார். வேத பண்டிதரான அவருடைய தந்தையாரே அவருக்கு சமஸ்கிருதம், இந்தி, வங்கம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்பித்தார். பணியின் நிமித்தமாக அவருடைய தந்தையார் பம்பாய்க்கு அருகில் கல்யாணுக்குக் குடியேறியபோது, அங்கிருந்த பள்ளியில் சேர்ந்து மராத்தியும் ஆங்கிலமும் கற்றார். ஏழாம் வகுப்பில் படிக்கும்போது காதில் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு மருத்துவம் செய்துகொள்வதற்காக அவருடைய குடும்பம் சென்னைக்குக் குடிபெயரவேண்டிய நிலை ஏற்பட்டதால், சென்னையில் இருந்த பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.