Home

Sunday, 7 June 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 2

 

வேடிக்கை பார்ப்பவரின் பார்வை

 

எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் முழுமையான பெயர் செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார். திருவண்ணாமலையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.  வழக்கு நிமித்தமாக ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களையும் சந்தித்து உரையாடிய அனுபவங்களே அவரை ஓர் எழுத்தாளராக வடிவமைத்தன.

கும்பகோணத்தின் சுவடுகள்

  

இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் நவீனத் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு மணிக்கொடி இதழ் ஆற்றிய பங்கு மகத்தானது. 1933ஆம் ஆண்டு முதல் 1950 வரை மூன்று காலகட்டங்களிலாக வெளிவந்த  அவ்விதழில் இரு தலைமுறை எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அரசியல் நோக்கத்துடன் வார இதழாகத் தொடங்கப்பட்டு பின்னர் இலக்கியத்துக்கான மாத இதழாக மாற்றமடைந்தது. மணிக்கொடி காலத்தை தமிழ்ச்சிறுகதைகளின் மறுமலர்ச்சிக்காலம் என்று சொல்லலாம். மணிக்கொடி இதழை முன்வைத்து உருவான இலக்கிய ஆளுமைகள் ‘மணிக்கொடி எழுத்தாளர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.

Sunday, 31 May 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 1

 

இசையின் அழைப்பு

 

‘கன்னட மொழியின் ஆஸ்தி’ என்றும் ’சிறுகதைகளின் ஜனகர்’ என்றும்  கர்நாடகத்தைச் சேர்ந்த வாசகர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்,  இந்திய அளவில் அனைவரும் அறிந்த மிகமுக்கியமான எழுத்தாளர். இயற்பெயரிலும் ஸ்ரீனிவாச என்கிற புனைபெயரிலும் எண்ணற்ற படைப்புகளை எழுதியிருக்கிறார். இந்திய அளவில் முதல்வரிசைப் படைப்பாளிகளில் ஒருவராக இடம்பெறத்தக்க முக்கியமான எழுத்தாளர். ஞானபீட விருது பெற்றவர்.

எதிர்பாராத அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய உழைப்பு - நேர்காணல்

 


கேள்வி: குடும்பத்தில் உங்களுக்கு இலக்கிய ஆர்வத்தை உருவாக்கியவர் யார்?

 

பதில்: எனக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை ஊட்டியவர்கள் என்னுடைய பள்ளிக்கூட ஆசிரியர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு ஊக்கமளிக்கும் நல்ல ஆசிரியர்கள் அமைந்தார்கள். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கிற சமயத்தில் ஒவ்வொரு வாரமும் நூல்வாசிப்பு என்றொரு பாடவேளை இருக்கும். அப்போது, எங்கள் பள்ளி நூலகர் நூலகத்திலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து ஒவ்வொரு மாணவரிடமும் கொடுத்து படிக்கச் செய்வார். நாற்பத்தைந்து மணித்துளிகள் கொண்ட பாடவேளையில் அரைமணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். 

Sunday, 24 May 2026

புதிர்களும் விடைகளும்

 

ஒரு கணத்தில் வாழ்க்கைப்பரப்பில் மீது மின்னி மறையும் ஒளிச்சுடரை அல்லது கவிந்து மறையும் இருளை நோக்கி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வடிவமாக சிறுகதை உலகெங்கும் எழுதப்பட்டு வருகிறது. அள்ளியள்ளி எடுத்தாலும் வற்றாத அமுதசுரபியாக சிறுகதை வடிவம் கோடிக்கணக்கான கணங்களை நமக்கு வழங்கியுள்ளது.  இத்தனை ஆண்டு காலம் எழுதிய பின்னும் நமக்குத் தெரியாத ஒளிப்புள்ளிகளும் இருட்புள்ளிகளும் இந்த வாழ்வில் நிறைந்திருக்கின்றன என்பதை புதிதாக வெளிவரும் ஒவ்வொரு சிறுகதைத்தொகுதியும் நமக்கு உணர்த்தியபடி இருக்கிறது.

புரைதீர்ந்த உண்மை

  

பெங்களூர் தமிழ்ச்சங்கம் அல்சூர் ஏரியை ஒட்டி ஒரு பெரிய கட்டிடத்தில் இயங்கிவருகிறது. வாரம்தோறும் அங்கு இலக்கிய வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சியுள்ள ஆசிரியர்கள் அங்கு வந்து வகுப்பெடுத்துவிட்டுச் செல்வார்கள். அந்த வகுப்புக்கு ஆர்வத்துடன் தொடர்ந்து செல்பவர்கள் பலர். என் நண்பரும் அவர்களில் ஒருவர். கடந்த ஞாயிறு அன்று காலையில் வகுப்பை முடித்துக்கொண்டு என்னைச் சந்திப்பதற்கு வந்திருந்தார்.

Sunday, 17 May 2026

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி 1

  

குளிப்பாட்டி முடித்ததும் குதிரையைத் தட்டி அழைத்துக்கொண்டு கரையேறினான் பார்த்தசாரதி.

பார்த்தசாரதிக்கு முன்னால் இருள் பிரியாத ஆகாயம் விரிந்து கிடந்தது. தூரத்தில் கறுப்புச்சித்திரம் மாதிரி ஆலமரங்களும் ரயில்வே ஸ்டேஷனும். ஏரிக்கரையில் இருந்து பஞ்சாயத்து போர்டு தெருவுக்குள் இறங்கும் ஒற்றையடிப்பாதைகூட எழுதி அழித்த மங்கலான கோடு மாதிரி தெரிந்தது. கால் இருளில் பால்மாதிரி ஒரு வர்ணத்தில் குதிரையுடன் பார்த்தசாரதி நடப்பது புராணகாலத்து ராஜகுமாரன் நடப்பதுபோல இருந்தது.