Home

Sunday, 8 March 2026

அரங்கசாமி ராஜா : கல்மேல் எழுத்தான வாழ்க்கை

 

1920ஆம் ஆண்டில் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமைப் போராட்டம் சாதி, மதம், இனம், மொழி என எல்லா வேறுபாடுகளையும் கடந்து  மக்களை ஒன்றிணைத்தது. ‘காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டம் மிகமிக அறிவீனமான திட்டமாகும்’’ என வைசிராய் ரீடிங் பிரபுவின் கூற்றை மக்கள் பொய்யாக்கினார். சூறாவளிச்சுழலென எங்கும் நிற்காமல் காந்தியடிகள் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து மக்களிடையில் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கியத்துவத்தை  வலியுறுத்தி உரையாடியபடி இருந்தார். நீதிமன்றங்களை விலக்குவது, சட்டமன்றங்களை விலக்குவது, வெளிநாட்டுத்துணிகளை விலக்குவது ஆகிய மூன்று விலக்குகளும் அவருடைய தாரகமந்திரங்களாக இருந்தன.

விசித்திரமும் மகத்துவமும்

 

கடந்த பத்தாண்டுகளில் கனவில் தொலைந்தவன், காந்தியும் பகத்சிங்கும், இந்தியா என்கிற கருத்தாக்கம், மகாராஜாவின் பயணங்கள், சமத்துவ நோக்கிய இயக்கம், புத்த ஜாதகக்கதைகள் என பல்வேறு வகைமை சார்ந்த நூல்களை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்த அக்களூர் இரவி சமீபத்தில் வெளிவந்த ரதியின் மன்மதன் என்னும் தொகுதியின் வழியாக சிறுகதையாசிரியராகவும் மலர்ந்திருக்கிறார். பசுமையான பள்ளிப்பருவ நினைவுகளும் கிராமத்து மனிதர்களைப்பற்றிய நினைவுகளும் அவரை சிறுகதை முயற்சிகளில் ஈடுபடத் தூண்டியிருக்கின்றன.

Sunday, 1 March 2026

காலம் - சிறுகதை

 தத்தக்கா புத்தக்கா என்று மீனா நடக்க ஆரம்பித்ததிலிருந்தே தெருவிலிறங்கிவிடாமல் அவளைக் கவனித்துக்கொள்ளும்படி சாவித்திரியிடம் சொல்லிவைத்திருந்தேன். பத்தடிக்குப் பத்தடி வாடகை வீடு இது. ஒரு மூலையில் சமையல்; ஒரு மூலையில் குளியல்; ஒரு மூலையில் படுக்கை; மிச்ச இடம் புழங்க என்பதுதான் எங்கள் விதி. இந்தப் புழங்குமிடத்தைத் தாண்டிப் பழகுவதற்காக தெருவில் மீனா இறங்கிவிடப் போகிறாளே என்ற பயத்தால்தான் ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாகச் சொல்லியிருந்தேன். தெருவில் சதா நேரமும் வண்டிகள் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறதால்தான் இதைக்கூடச் சொல்லவேண்டியிருந்தது.

நமக்குக் கிடைத்த பரிசு

 

’யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இடம்பெற்றிருக்கும் வரி. நாம் அனைவருமே அவ்வரியை பல இடங்களில் கேட்டிருப்போம். நாமே பல இடங்களில் நம்மை அறியாமல் பழக்கத்தின் காரணமாகச் சொல்லியிருக்கவும் கூடும்.  ஆனால் உறவு வகைகளிலும் நட்பு வட்டாரங்களிலும் பொதுவாக துயரங்களைப் பகிர்ந்துகொள்கிற அளவுக்கு ஒருவரும் இன்ப நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொள்வதில்லை என்பதுதான் எதார்த்தம். அதற்கு, தன் இன்ப நினைவுகள் பிறருடைய நெஞ்சில் காரணமில்லாத ஏக்கங்களையும் ஏமாற்ற உணர்வுகளையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை  கூட ஒருவேளை காரணமாக இருக்கக்கூடும்.

Sunday, 22 February 2026

எளிமையும் இனிமையும்

  

சிறார்களுக்கான நான்கு பாடல் தொகுதிகளை ஏற்கனவே எழுதி வெளியிட்டிருக்கும் குருங்குளம் முத்து ராஜா, இப்போது அக்கா குருவி என்னும் தலைப்பில் ஐந்தாம் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் ஐம்பது பாடல்கள் அடங்கியுள்ளன. விளையாடிப் பொழுதுபோக்கும் குழந்தைகளின் மனநிலையையும் குறும்புகளையும் வெளிப்படுத்தும் பல பாடல்கள் இத்தொகுதியில் உள்ளன.

ஒரு மகளின் நினைவோடை

 

கடந்த நூற்றாண்டில் நவீனத்துவத்தின் பார்வையை தமிழ்ச்சிறுகதைகளுக்கு வழங்கியவர் புதுமைப்பித்தன். நாற்பத்திரண்டு ஆண்டு காலம் மட்டுமே அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோதிலும் பலவேறு வகைமைகளில் ஏறத்தாழ நூற்றியெட்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம் என பல தளங்களிலும் தொடர்ச்சியாக இயங்கியவர் அவர். இன்று, புதிதாக தமிழ்ச்சிறுகதையை வாசிக்கத் தொடங்கும் ஓர் இளம்வாசகனுக்கும் கூட நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குவதாகவும் புதுமைத்தோற்றம் அளிப்பதாகவும் அவருடைய கதைகள் அமைந்திருக்கின்றன.

Sunday, 15 February 2026

மாபெரும் அனுபவம்

  

தொகுப்பாசிரியரான கவிதா சந்திரபோஸ் இந்தத் தொகுதி உருவான விதத்தைப்பற்றித் தன் முன்னுரையில் எழுதியிருக்கும் சுருக்கமான குறிப்பு படிப்பதற்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது. காற்றுக்கு எல்லாத்  திசைகளும் சொந்தமாக இருப்பதுபோல படிக்கத் தொடங்கும் பழக்கத்துக்கும் எல்லாத் திசைகளும் சொந்தமானவையே. எந்தத் திசையிலிருந்து வேண்டுமானாலும் யார் வழியாக வேண்டுமானாலும் உருவாகி ஒட்டிக்கொள்ளும். கவிதாவின் பயணமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.