பைபிளில் உள்ள பழைய ஏற்பாடு ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம் என முப்பத்தொன்பது பிரிவுகளைக் கொண்ட பெருந்தொகுதியாகும். ஒவ்வொரு பிரிவிலும் ஏராளமான உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் அன்று வாழ்ந்த மனிதர்களின் வரலாறாக, ஏராளமான கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் விரிந்துசெல்லும் போக்கில் மானுட வாழ்வில் தற்செயலாக தேவன் வெளிப்படும் தருணத்தை உணர்த்துகிறது. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் அமைந்திருக்கும் உறவின் நுட்பத்தையும் ஆழத்தையும் வாசிப்பவர்களின் நெஞ்சில் அழுத்தமாகப் பதிவு செய்கின்றது.