மிகவும் குறைந்த வரிகளை உடைய பாடல்கள் தமிழில் சங்க இலக்கிய காலத்திலேயே உருவாகிவிட்டன. குறுந்தொகையில் பல பாடல்கள் நான்கு வரிகள் முதல் எட்டு வரிகள் வரை உள்ளவை. ஐங்குறுநூற்றில் மூன்று முதல் ஆறு வரிகள் வரை உடைய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில் நான்கு வரிகளை உடைய பல பாடல்கள் இருக்கின்றன. குறைந்த வரிகள் கொண்டவை என்றபோதும் அப்பாடலில் ஒரு பக்கத்தில் நிலக்காட்சியும் இன்னொரு பக்கத்தில் அதற்கு இணையான மனக்காட்சியும் இயல்பாக எழுந்து நிற்கின்றன. ஒவ்வொரு சொல்லிலும் கவிதையின் மையத்தை நோக்கி ஈர்க்கும் ஆற்றல் பொதிந்திருக்கிறது. அத்தகு பாடல்களை வாசிக்கும்போதெல்லாம் நம் மனம் அடையும் இன்பத்துக்கு அளவே இல்லை.
பாவண்ணன்
Sunday, 8 February 2026
வாசிப்பதனால் ஆய பயன்
கொலம்பியாவைச் சேர்ந்த லூயிஸ் சொரியானோ என்னும் பள்ளி ஆசிரியரைப்பற்றிய ஒரு குறிப்பை சமீபத்தில் படித்தேன். இளமைப் பருவத்திலிருந்தே புத்தக வாசிப்பில் சொரியானோவுக்கு ஆர்வம் இருந்தது. அவர் வசித்த கிராமத்தில் நூலகம் இல்லை. அதனால் பக்கத்தில் உள்ள நகரத்துக்குச் சென்று நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படித்தார். தினந்தோறும் பள்ளிக்கும் செல்லவேண்டி இருந்ததால் அவரால் நூலகத்துக்குச் செல்ல முடியவில்லை. அதனால் விடுப்பு நாட்களில் மட்டுமே நூலகத்துக்குச் சென்று படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டார்.
Monday, 2 February 2026
ஒரு முடிவுக்குப் பிறகு - சிறுகதை
காற்று குளிர்ச்சியாக இருந்தது. எனினும் உடல்முழுக்க கசகசவென்று வியர்வை துளிர்ப்பதை உணர்ந்தாள் மாலதி. அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் மரங்கள் நிற்கும் கோலம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அங்கங்கே ஏற்பாடு செய்யப்பட்ட மேசைகளில் அருந்திமுடித்த மதுக்கோப்பைகளும் பாட்டில்களும் உண்டு முடித்த இறைச்சித் துண்டுகளும் கலைந்துகிடந்தன. நாற்காலிகளிலும் சோபாக்களிலும் நண்பர்கள் அடங்கிய குரலில் பேசியபடியும் சிரித்தபடியும் இருந்தார்கள். ஒரு கையில் அருந்தி முடிக்காத மதுக்கோப்பையும் மறுகையில் சிகரெட்டுமாக ஒருசிலர் மட்டும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சிரித்த முகத்துடன் எல்லாரோடும் சில நிமிடங்கள் பேசியவண்ணம் வலம்வந்து கொண்டிருந்தான் ராகவன். அவனுடைய சகஜநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தோழிகளிடமிருந்து விலகி ஒரு மரத்தடிக்கு வந்து நின்றாள் மாலதி.
நினைவுகளின் ஊர்வலம்
’நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’ என்று தொடங்கும் பாரதியாரின் பாடலை அனைவரும் படித்திருக்கக்கூடும். அப்பாடலில் ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?’ என அவரே ஒரு கேள்வியை எழுப்பி அடுக்கடுக்காகப் பல வாதங்களை முன்வைத்து, இறுதியாக ‘காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை. காண்பது சக்தியாம், இந்தக் காட்சி நித்தியமாம்’ என்று ஒரு விடையைக் கூறி முடிக்கிறார். ஞானத்துக்கு விளக்கமாக இதைவிட எளிமையாக இன்னொருவர் சொல்லிவிடமுடியாது.
Sunday, 25 January 2026
எங்கள் பாட்டி எங்கள் தாத்தா - சில பாடல்கள்
சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி பாரதி புத்தகாலய வழியாக வெளிவந்திருக்கும் ’எங்கள் பாட்டி எங்கள் தாத்தா’ தொகுதியிலிருந்து சில பாடல்கள்.
வரலாற்றுக் கடமை
கடந்த சில ஆண்டுகளில் ’சர்வோதயம் மலர்கிறது’ இதழிலும் பிற இதழ்களிலும் அவ்வப்போது எழுதிய பதினான்கு கட்டுரைகளைத் தொகுத்து பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் இப்போது ஒரு புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் வெளிவந்த காலத்திலேயே நான் படித்திருக்கிறேன் என்றபோதும் ஒரு நூல் வடிவில் இப்போது அனைத்துக் கட்டுரைகளையும் ஒருங்கே படிப்பது நல்ல அனுபவமாக இருந்தது. நண்பர் விஜயராமலிங்கம் தம் மனத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு எந்த அளவுக்கு இடமளித்திருக்கிறார் என்பதை இந்த நூல் வழியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
நெருக்கடியின் கோட்டோவியங்கள்
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு கவிஞராக எழுத்துலகில் அடியெடுத்துவைத்தவர் விஜயானந்தலட்சுமி. அதைத் தொடர்ந்து இன்றைய இணையகால வாசகர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கலித்தொகை, மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு அழகான விளக்கநூல்களை எழுதினார். தேனி என்னும் நகரத்தின் வெவ்வேறு பரிமாணங்களை அழகான சொற்சித்திரங்களாகத் தீட்டி நூலாக வெளியிட்டார். இவான் துர்கனேவ், ஓ ஹென்றி ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவ்வாறாக, தன் படைப்புலகத்தை மெல்ல மெல்ல விரிவாக்கிக்கொண்டே செல்லும் விஜயானந்தலட்சுமி இப்போது தன் முதல் சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருக்கிறார்.