இரண்டு வாசல்கள்
துமிலனின் இயற்பெயர் என்.ராமசாமி. கும்பகோணத்தில் பிறந்தவர். தொடக்க காலத்தில் மாயவரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு, ஏதோ ஒரு தருணத்தில் தலைமை அதிகாரியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அந்த வேலையைத் துறந்து சென்னைக்குக் குடிபெயர்ந்து பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கினார். இயல்பாகவே நகைச்சுவை உணர்வுடைய அவர் தன் எழுத்தாற்றலால் தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவராக மலர்ந்தார். பொதுவாசிப்புக்குரிய பல நூல்களையும் சிறார்களுக்கான கதைகளையும் நாவல்களையும் எழுதினார். என் பள்ளி நாட்களில் அவர் எழுதிய ’சி.ஐ.டி. சிறுவர்கள்’ என்கிற நாவலை விரும்பிப் படித்த நினைவுள்ளது.