இந்தியச் சமூகத்தில் தீண்டாமைப்பழக்கத்தை அழித்தொழிக்கும் உயர்ந்த நோக்கத்துடன் காந்தியடிகள் 30.09.1932 அன்று தேசிய அளவில் தீண்டாமைக்கு எதிரான செயல்திட்டங்களைக் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்கினார். நாளடைவில் அந்த அமைப்பே அரிஜன சேவா சங்கம் என பெயர்மாற்றம் பெற்றது. தொடக்கத்தில் அதன் தலைவராக கன்ஷியாம் தாஸ் பிர்லாவும் செயலராக அம்ரித்லால் தக்கரும் பணியாற்றினர். நாடெங்கும் அதன் கிளைகள் தொடங்கப்பட்டன. அவற்றில் பங்கெடுத்துக்கொண்ட தொண்டர்கள் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காக பாடுபட்டனர்.