அரிஜன நல நிதிக்காக நன்கொடை திரட்டும் நோக்கத்துடன் 1934 ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னிந்தியப்பயணத்தை மேற்கொண்டார். கேரளத்தில் கொச்சி, ஆலப்புழை, எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் வழியாக ஒரு வாரத்துக்கும் மேலாக நீண்ட அவருடைய பயணம் இறுதியில் கன்னியாகுமரியை வந்தடைந்தது. அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் அவருக்குத் தாராளமாக நன்கொடை வழங்கினர். ஆபரணங்களாகவும் பொருட்களாகவும் கிடைத்தவற்றையெல்லாம் உரையாற்றும் மேடையிலேயே ஏலத்துக்கு விட்டு, அதன் வழியாகக் கிடைக்கும் தொகையையும் அரிஜன நல நிதியின் கணக்கில் சேர்த்துக்கொண்டார் காந்தியடிகள்.