Home

Tuesday 22 September 2020

இரும்புக்கோட்டை - சிறுகதை

 

என்ன கேட்டா செல்லப்பா தன் பேர தானே கெடுத்துக்கறான்னுதான் சொல்வன்என்றார் முத்து. “ஜிம்னாஸ்டிக்ஸ் செல்லப்பா நம்ம சாந்தி சர்க்கஸ்ல ஒரு ஹீரோ மாதிரி. எப்பவும் க்ளைமாக்ஸ்ல அவன் சோலாவா பண்ற ரோல்தான் பவர்ஃபுல். போயும் போயும் ஒரு பொண்ணுக்காக இவ்ளோ தூரத்துக்கு அவன் எறங்கணுமான்னுதான் மனசுல ஒரு சங்கடம்.”

மனசுக்கு புடிச்சவகிட்ட ஒன்ன எனக்கு புடிச்சிருக்குதுன்னு சொல்றது ஒரு தப்பா? பேர் கெடுத்துக்க இதுல என்ன இருக்குது?” என்றார் ராஜாங்கம்.

இங்க பாரு ராஜாங்கம், நமக்கு சாதகமாவே எல்லாத்தயும் பாக்கக் கூடாது. அந்த லதா பொண்ணு புடிக்கலைனு சொன்னதும் உட்டுடறதுதான நாயம்? அதுக்கப்புறமும் இவன் எதுக்கு பின்னாலயே போறான்? அது தப்புதான? யாரா இருந்தா என்ன?” என்று சங்கடமான குரலில் கேட்டார் செந்தில்

அவுங்க என்னப்பா இன்னைக்கு நேத்தா பழகறாங்க. எனக்கு தெரிஞ்சி நாம விழுப்புரத்துல கேம்ப் போட்டமே, அப்பவே இவுங்களுக்குள்ள ஒரு இது ஆரம்பிச்சிடுச்சி. உண்டா இல்லயா, அத சொல்லு?” என்றார் மாணிக்கம்.

உண்மைதான், ரெண்டு பேருக்கும் அப்ப ஒரு நெருக்கம் இருந்திச்சி. நம்ம ஓனர்கூட என்னடா ஜோடிப்புறாக்கள் பறந்துடுமா இருக்குமானு கூட ஜாடமாடயா கேட்டதுண்டு.”

கேட்டாரில்ல. அப்ப ரெண்டு பேருக்கு நடுவுல ஏதோ இருக்குதுனு மனசுல ஒரு புள்ளி விழுந்ததாலதான கேட்டாரு. அந்த விழுப்புரம் கேம்புக்கு அப்பறமா பண்ருட்டி, நெய்வேலி, நெய்வேலி, வடலூரு, கடலூருனு சுத்திட்டு இப்ப பாண்டிச்சேரிக்கே வந்துட்டம். நாலஞ்சி மாசமாச்சிம் ஆயிருக்காது?”

ஆமா. இப்ப அதுக்கென்ன?”

இவ்ளோ காலமா புடிச்சிருந்த ஆள திடீர்னு புடிக்கலைன்னு சொல்லணும்னா ஒரு காரணம் இருக்கணுமில்ல? அத வெளிப்படயா சொல்லிட்டா முடிஞ்சி போச்சி. எதுக்கு மென்னு முழுங்கணும். எதுக்கு பாக்கும்போதுலாம் தள்ளித்தள்ளி போவணும்? அதான் கேள்வி.”

எதுக்குடா மூடி மூடி பேசறீங்க? பார் வெளயாட்டுக்கு புதுசா வந்திருக்கானே ஒரு புதுப்பையன். சிங்காரம். அந்த பையன் மேல இந்த பொண்ணுக்கு ஒரு கண்ணு. அதனால செல்லப்பாவ கழட்டி உடலாம்னு பாக்குது. அதான் விஷயம்என்று அதுவரை அமைதியாக இருந்த துரைசாமி சொன்னார்.

ஒனக்கு புரியுது. ஆனா புரிய வேண்டியவனுக்கு புரியலயே. எதயோ பறிகொடுத்தாப்புல ஆளே சோந்து கெடக்கறான். பாக்கறதுக்கே சங்கடமா இருக்குது. க்ளைமாக்ஸ் ரோல் பண்ற ஆளு ஒரு சுறுசுறுப்பு உற்சாகம் வேகத்தோட இருந்தாதான கச்சிதமா செய்யமுடியும்?” என்று மறுபடியும் முத்து பேசினார்.

நம்ம செல்லப்பா எங்க? இந்த மணி எங்க? ரெண்டு பேருக்கும் ஏணி வச்சாகூட எட்டாதுடா. அவன்கிட்ட என்னத்த பாத்து மயங்கிச்சோ இந்த பொண்ணு. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்என்று கசப்புடன் நாக்கை சப்புக்கொட்டினார் மாணிக்கம்.

நான் அவர்கள் மாறிமாறி உரையாடிக்கொள்வதைக் கேட்டபடியே சமையல்காரர் கெட்டிலில் கொடுத்தனுப்பிய சூடான டீயை கோப்பைகளில் ஊற்றி ஒவ்வொருவருக்கும் கொடுத்தேன். ஆண்களும் பெண்களுமாக மொத்தத்தில் ஐம்பத்தாறு ஆட்டக்காரர்கள் பத்து பதினைந்து கூடாரங்களில் தங்கியிருந்தார்கள். முதலாளிக்கு மட்டும் தனிக்கூடாரம். காலை, மாலை இரு வேளைகளிலும் டீயை மட்டும் கூடாரங்களுக்கே கொண்டு சென்று கொடுக்கவேண்டியது என் வேலை. சிற்றுண்டிக்கும் உணவுக்கும் அவர்களே சமையல்கூடத்துக்கு வந்துவிடுவார்கள்.

சாந்தி சர்க்கஸ்க்கு நான் முற்றிலும் புதிய ஆள். அவர்களைப்போல நான் திறமைசாலி இல்லை. எட்டாம் வகுப்பில் தோற்றுவிட்டு ஊரில் பெயிண்டிங் கான்ட்ராக்டர் சதாசிவத்திடம் பத்து ரூபாய் கூலிக்கு வேலை செய்துகொண்டிருந்தேன்.  அம்மாவும் மூன்று அக்காக்களும் வீட்டில் இருந்தார்கள். அப்பாவின் முகம் எனக்கு நினைவில் இல்லை. எனக்கு மூன்று வயதாகும்போது ஊருக்கு நாடகம் போட வந்த குழுவிலிருந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே போய்விட்டார். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட எங்களுக்குத் தெரியாது.

செல்லப்பா எங்கள் ஊர்க்காரர். சிதம்பரத்தில் எங்கள் தெருவிலேயே அவர் வீடு இருந்தது.  சின்ன வயசிலிருந்தே அவரை சித்தப்பா என்று அழைத்துப் பழக்கம். ஆறேழு மாதங்களுக்கு முன்பாக அவர் ஊருக்கு வந்திருந்தபோது அம்மா அவரைச் சந்தித்தார். “இவன் கூட இருக்கறதுலாம் ஒரே குடிகாரக்கூட்டமா இருக்குது தம்பி. ஒவ்வொரு நாளும் பயத்துலயே செத்து செத்து பொழைக்கறன். இவன உன்கூட அழச்சிகினு போயி பொழைக்க ஒரு வழிய காட்டு தம்பி. ஒனக்கு கோடி புண்ணியம்என்று சொல்லி அழுதார். அதனால் மனமிரங்கிய சித்தப்பா ஊரிலிருந்து புறப்படும்போது என்னையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அவர் சொன்ன சொல்லை முதலாளி ஏற்றுக்கொண்டதும்   சமையல்காரருக்கு உதவி செய்பவனாக சேர்ந்தேன்.

இதோ நம்ம சுப்ரமணிகிட்ட கேட்டா சொல்லுவான். இவன் சித்தப்பன்காரன்தான அவன்? ஏன்டா மணி. ஒன் சித்தப்பனுக்கு இந்த உலகத்துல வேற பொண்ணே கெடைக்கலயா? வேணாம் வேணாம்னு தள்ளி உடறவ பின்னாலயே ஏன்டா சுத்தறான்?” என்று டீயை உறிஞ்சியபடியே கேட்டார் முத்து.

எனக்கு அதைக் கேட்கவே சங்கடமாக இருந்தது. சாந்தி சர்க்கஸில் சேர்ந்த புதிதில் அவர்கள் இருவரும் சேர்ந்து கொஞ்சிக்கொஞ்சிப் பேசியதை நானே என் கண்களால் பலமுறை பார்த்திருக்கிறேன். அவையெல்லாம் இன்று பழங்கதையாகப் போய்விட்ட செய்திகளைக் காதால் கேட்கும்போது எனக்கே வேதனையாக இருக்கும்போது சித்தப்பாவின் வேதனை கொஞ்சமாகவா இருக்கும்.

சின்ன பையனுக்கு என்னப்பா தெரியும்? பொண்ணுங்க சூதுவாது  பத்தி அவனுக்கு எங்க புரியப்போவுது?” என்று உடனே குறுக்கே புகுந்து தடுத்தார் மாணிக்கம்.

செல்லப்பாவுக்கு டீ குடுத்துட்டியாடா?”

இன்னும் இல்லண்ணே

குடுக்கும்போது சர்க்கஸ் ஆளுங்க எல்லாருமே உன்ன பத்திதான் பேசறாங்க. அந்த பொண்ண உட்டுத் தலமுழுவுங்கன்னு சொல்லு.”

அவர்கள் அதற்குப் பிறகு பாண்டிச்சேரியில் ரிலீசாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்த நினைத்தாலே இனிக்கும் படத்தைப்பற்றி பேசத் தொடங்கிவிட்டனர். எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் என்று ராகம் இழுக்காதவர்களே கூடாரத்தில் இல்லை.

ஒவ்வொரு கூடாரமாகச் சென்று டீ கொடுத்துவிட்டு ஆண்கள் வரிசையில் அடுத்த கூடாரத்துக்குள் சென்றேன். அது பார் விளையாடுபவர்களின் கூடாரம். எல்லோருக்கும் டீ வழங்கி முடிக்கும் நேரத்தில் சிங்காரம் உள்ளே வந்தார். குளித்து முடித்து துவட்டிய தலைமுடிக்குள் விரல்களை நுழைத்து உதறினார். தேக்குமரம் போல இருந்தது அவர் உடல். கோதுமை நிறம். என்னைப் பார்த்ததும் குட்மார்னிங் மணி. வா வாஎன்று சொல்லிவிட்டு சிரித்தார். நானும் சிரித்துக்கொண்டே குட்மார்னிங் சார்என்றேன். கம்பத்தில் தொங்கிய கண்ணாடியில் முகம்பார்த்து தலைவாரியபோது கோப்பையில் டீ நிரப்பிக் கொடுத்தேன். ஆவி பறந்துகொண்டிருக்கும்போதே கோப்பையை உதடுகளுக்கிடையில் வைத்து ஒரு மிடறு உறிஞ்சி நாக்கிலேயே நிறுத்தி துளித்துளியாகச் சுவைத்தார். ”சக்கரய இன்னும் கொஞ்சம் கொறச்சிருக்கணும் மணி. மாஸ்டர்கிட்ட சொல்லுஎன்றார். நான் கிளம்பும்போது இரு இரு மணிஎன தடுத்து என்ன டிபன் இன்னைக்கு?” என்று கேட்டார். ”ரவா தோசைஎன்றேன் நான். “தொட்டுக்க தேங்கா சட்னிதான?” என்று சிரித்தார். நான் திரையை விலக்கிக்கொண்டு வெளியே நடக்கும்போது கூடுதலா ரெண்டு பச்சை மிளகா போட்டு அரைக்கச் சொல்லு மணிஎன்று அவர் சொன்ன சொற்கள் காதில் விழுந்தன.

கடைசியாக இருந்த சித்தப்பா கூடாரத்துக்குச் சென்றேன். அவர் ஒரு மூலையில் அமர்ந்து யோகாசனப் பயிற்சியில் மூழ்கியிருந்தார். கூடாரம் அமைதியாக இருந்தது. நான் பார்த்தபோது மூச்சையடக்கி வயிற்றைச் சுருக்கி உள்ளே இழுத்து இரப்பையை மட்டும் மணியின் நாக்குபோல சுழலச் செய்துகொண்டிருந்தார். நான் அசையாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகே அவர் அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு கண்களைத் திறந்தார். உடம்பெங்கும் வழிந்த வேர்வையை துண்டெடுத்து துடைத்தார்.

என்னைப் பார்த்த்தும் என்ன?” என்று கண்களாலேயே கேட்டார். நான் டீஎன்றேன்.

இன்னும் சிரசாசனம் பாக்கியிருக்குது. அங்க வச்சிட்டு போ. நான் அப்பறமா எடுத்துக்கறேன்

கோப்பையில் டீயை ஊற்றி மேசைமீது மூடிவைத்தபடி உங்க ஏழுமணிக் குருவி இன்னும் வரலையா சித்தப்பா?  நான் லேட்டா, அது லேட்டா?” என்று பேச்சு கொடுத்தேன். வழக்கமாக அந்த நேரத்துக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குருவி வந்து போவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். “நான் தெனமும் யோகாசனம் செய்றனா இல்லயானு என் குரு குருவியா வந்து என்ன பாத்துட்டு போறாருஎன்று சித்தப்பா சொல்வது வழக்கம்.

வரும், வரும், வராம எங்க போவும்? மனுஷங்களுக்குத்தான் பாத்ததயும் பழகனதும் மறக்கற குணம் உண்டு. பறவையினத்துக்கு அந்த குணம் கெடயாது மணி.”

அவர் சொல்லி முடிக்கும் தருணத்தில் கீச்கீச்சென்று சத்தமெழுப்பியபடி விர்ரென்று உள்ளே நுழைந்து சுற்றிச்சுற்றிப் பறந்துவிட்டு நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்து அவரைப் பார்த்தது.

என்னடா சொல்ற இப்ப?” என்று புன்னகையுடன் கேட்டபடி அந்தக் குருவியின் திசையில் ஒருகணம் பார்த்தார். பிறகு கூடாரத்தின் நடுக்கம்பத்துக்கு அருகில் சென்று அதை ஒட்டியபடி குனிந்து தலையைத் தாழ்த்தி வைத்து கால்களை செங்குத்தாக மேலே உயர்த்தி நிறுத்தினார் சித்தப்பா. நான் வெளியே வந்து பெண்கள் கூடாரங்களுக்குச் சென்றேன்.

பார் விளையாடும் பெண்கள், சைக்கிள் ஓட்டும் பெண்கள், வளையங்களில் ஆடும் பெண்கள் என அனைவருமே தனித்தனிக் குழுவாக கூடாரங்களில் இருந்தார்கள். அனைவருக்கும் டீ கொடுத்துவிட்டு உலகப்பந்தை உருட்டி ஆடும் பெண்களோடு லதா தங்கியிருந்த கூடாரத்துக்குச் சென்றேன். 

வா வா. உனக்காகத்தான் காத்திட்டிருக்கோம். குளிச்ச உடனே எனக்கு டீ குடிக்கணும் மணி. இல்லைன்னா தலவலியே வந்துடும்என்றாள் ஒருத்தி. “நான் பாத்துட்டுதான் இருக்கேன். தெனமும் நீ இந்த பக்கமா கடைசியிலதான் எட்டிப் பாக்கற. நாளைக்கு லேடீஸ் பக்கம்தான் மொதல்ல வரணும். சரியா?” என்று அதட்டினாள் மற்றொருத்தி. “வெறும் டீ மட்டும் கொடுத்தா எப்படி மணி? ஏதாச்சிம் ஒரு பிஸ்கட் கொடுக்கலாமில்ல. மொதலாளிகிட்ட சொல்லுஎன்றாள் இன்னொருத்தி.

லதா அந்தக் கூட்டத்துக்கு நடுவில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். வட்டமான அவள் முகத்தில் கருகருவென அடர்த்தியாக வளைந்த அவளுடைய புருவங்களும் அழகான கண்களும் யாருக்கும் இல்லாத ஒரு வசீகரத்தை அவளுக்கு வழங்கின. மாந்தளிரின் நிறம். மூக்கின் கீழ்விளிம்புக்கும் உதட்டுக்கும் நடுவில் ஊசியால் தொட்டு பொட்டு வைத்ததுபோல ஒரு மச்சம். முடிச்சிட்ட கூந்தல் பளபளவென முதுகில் தொங்கியது.

கோப்பையை வாங்கி அருந்தி முடித்த லதா திரையை விலக்கி நான் வெளியேறும் சமயத்தில் பின்னாலேயே வந்து மணிஎன்று அழைத்து நிறுத்தினாள். அக்கம்பக்கத்தில் திரும்பிப் பார்த்து நடமாட்டமில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு ஒங்க சித்தப்பாகிட்ட என் வழியில இனிமே வரவேணாம்ன்னு கொஞ்சம் சொல்லி வை மணி. நானும் பலமுறை ஜாடைமாடையா சொல்லிப் பாத்துட்டன். அவருக்கு புரியவே மாட்டுது. புரியலையா, புரிஞ்சிக்க விருப்பமில்லயான்னு தெரியலைஎன்றார். அதைச் சொல்லும்போது அவர் முகம் சுருங்கி இருள் அடர்ந்துவிட்டது.

மற்றவர்கள் சொல்வதையெல்லாம் நான் நேரிடையாக சித்தப்பாவிடம் ஒருபோதும் சொல்லிவிட முடியாது. என் எல்லை எது என்பது எனக்குத் தெரியும். என்னமோ ஒரு ஆற்றாமையால் என்னைப் பார்த்ததும் சொல்கிறார்கள். காதுகொடுத்துக் கேட்டபடி போய்விட வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டேன். சரி என்று தலையசைத்துவிட்டு நகர்ந்தேன்.

சிறிது தொலைவில் மஞ்சள்நிறமும் நீலநிறமும் மாறிமாறி அமைந்த  அறுபதடி உயர துணிக்கூடாரம் விரிந்திருந்தது. பாதி மைதானத்தை அது அடைத்துக்கொண்டிருந்தது. பார்வையாளர்கள் வருவதற்கும் வெளியேறுவதற்கும் வெவ்வேறு நுழைவாயில்களை மூங்கில் நட்டு உருவாக்கியிருந்தார்கள். அங்கங்கே நடப்பட்ட சவுக்கைக்கம்பங்களை இணைத்திருக்கும் கயிற்றில் அசையும் வண்ணக்காகிதத் தோரணங்கள். ஒவ்வொரு கம்பத்தையும் ஒட்டி கட்டிவைக்கப்பட்ட குழல்விளக்குகள். அதன் முகப்பில் இரு காவல்காரர்கள் உட்கார்ந்திருந்தனர். ”சீக்கிரம் வாப்பாஎன்று அவர்கள் அங்கிருந்தே கையசைத்தார்கள். அவர்களுக்கும் டீ வழங்கிவிட்டு நான் திரும்பினேன். “முத்தம்மாவும் சந்திராவும் உள்ள கூட்டறாங்க. அவுங்களுக்கும் குடு. மறந்துராதஎன்றார் ஒரு காவல்காரர்.

நான் கூடாரத்துக்குள் நுழைந்தேன். மேடையில் ஓரமாக இருந்த உலகப்பந்தை உருட்டிவிட்டு பெருக்கிக்கொண்டிருந்தாள் முத்தம்மா. “இதும் மேல நின்னுகிட்டு எப்பிடிடி அவளுங்க சிரிச்சிகினே ஆட்டம் போடறாளுங்க. வழுக்காதா?” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள். “அதுக்குலாம் ஒரு நேக்கு இருக்குது பாத்துக்கோ. அது தெரியலைன்னா கீழ உழுந்து கைய கால ஒடைச்சிக்க வேண்டிதுதான்என்று பதில் சொன்னாள் சந்திரா. நான் அவர்களிடம் சென்று டீ ஊற்றிக் கொடுத்தேன்.

ஏன்டா தம்பி, நீ இது மேல ஏறுவியா?” என்று உலகப்பந்தைச் சுட்டிக்காட்டி கேட்டாள் முத்தம்மா.

அவன் ஏறுவான், ஏறமாட்டான். அதத் தெரிஞ்சி ஒனக்கு என்ன ஆவப்போவுது? வா இந்த பக்கம். அங்க பாரு, எவ்ளோ குப்ப. அத போய் கூட்டுஎன்று அவளை அடக்கினாள் சந்திரா.

நான் வாய தெறந்து பேசனாவே ஒனக்கு எங்கடி நோவுது?” என்றபடி டீ அருந்திமுடித்தாள் முத்தம்மா. அவள் கையை அசைக்கும்போதெல்லாம் அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களின் ஓசை கேட்டது.

எல்லாருமே பேசிக்கறாங்களே உண்மையாடா தம்பி?” என்று கேட்டாள் அவள்.

என்ன?” என்றேன்.

சிங்காரமும் லதாவும் செட்டாயிட்டாங்கன்னு

எனக்குத் தெரியாதுக்கா

செல்லப்பாவ கழட்டி உட்டுட்டாளாம்

அப்பிடியா?”

என்னடா ஒன்னும் தெரியாதமாதிரி நடிக்கற? நாள்பூரா அவளுங்க கூடாரத்தயே சுத்திசுத்தி வர. ஒனக்கு ஒன்னும் தெரியாதா?”

எனக்கு உண்மையாவே எதுவும் தெரியாதுக்கா.”

சரி. இப்ப தெரிஞ்சிக்கோ. நீ போய் செல்லப்பாகிட்ட ஒரு வார்த்த சொல்லணும்

என்ன?”

அந்த லதா போனா என்ன, இந்த முத்தம்மா இருக்கேன்னு போய் சொல்லு. என் கண்ணுக்குள்ள வச்சி காப்பாத்துவேன்னு சொல்லு.”

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்.

அவள் புன்னகைத்துக்கொண்டே அவன ராஜா மாதிரி உள்ளங்கையில வச்சி தாங்குவேன்னு சொல்லு. ராவும் பகலுமா பாடுபட்டு நான் அவனுக்கு கஞ்சி ஊத்துவேன்னு சொல்லுஎன்றாள்.

நான் எந்தப் பதிலும் சொல்லாமல் காலியான கோப்பைகளை எடுத்து வாளிக்குள் வைத்தபோது சந்திராவே முந்திக்கொண்டு தொடப்பக்கட்டை பட்டுக்குக்குஞ்சத்துக்கு ஆசப்பட்ட கதயா இருக்குதுடி நீ சொல்றதுஎன்று சொல்லிவிட்டு பெருக்கிக்கொண்டே திரும்பினாள்.

நான் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வெளியே வந்து சமையல் கூடத்துக்குச் சென்றேன். மாஸ்டர் என்னைப் பார்த்ததுமே இப்படி ஆடி அசைஞ்சி வந்தா மிச்சமிருக்கற வேலய எப்படா முடிக்கறது? சீக்கிரம் எல்லாத்தயும் கழுவி கவுத்தி வச்சிட்டு வந்து தேங்கா துருவற வேலய பாருஎன்றார். அவர் கையில் நீண்ட தோசைக்கரண்டி இருந்தது. பெரிய செவ்வகம் போல இருந்த தோசைக்கல்லில் ஒரே நேரத்தில் ஆறு தோசைகள் வெந்துகொண்டிருந்தன.  பிச்சாண்டி சின்ன உரலில் பொட்டுக்கடலையை அரைத்துக்கொண்டிருந்தான்.

கெட்டிலில் எஞ்சியிருந்த டீயை ஒரு கோப்பையில் ஊற்றி மெதுவாக அருந்தினேன். பிறகு காலி கோப்பைகளால் நிறைந்துவிட்ட வாளியையும் கெட்டிலையும் தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக கழுவி சுவரோரமாக கவிழ்த்து அடுக்கிவைத்தேன்.

என்ன மாஸ்டரே, டீ ஏதாச்சிம் மிச்சமிருக்குதா?” என்றபடி சமையல் கட்டுக்கு வெளியே நின்றபடி கேட்டாள் இஸ்திரி பொன்னம்மா. அவள் குரல் கேட்டதுமே மாஸ்டர் முகத்தில் புன்னகை சுடர்விட்டது.

உள்ள வந்து பேசு பொன்னம்மா. நீ என்ன எப்ப பாத்தாலும் போஸ்ட்மேன் மாதிரி வாசலுக்கு வெளியவே நின்னு பேசற?” என்று அவளுக்குப் பதில் சொன்னபடி என்னைப் பார்த்தார். நான் உடனே எல்லாமே தீந்துடிச்சி மாஸ்டர். இப்பதான் கழுவி முடிச்சி காயவைச்சிட்டு வரேன்என்று உதட்டைப் பிதுக்கினேன்.

ஒரு நிமிஷம் இரு பொன்னம்மாஎன்றபடி ஏற்கனவே காய்ச்சி ஓரமாக மூடி வைத்திருந்த பாத்திரத்திலிருந்து ஒரு தம்ளரில் பால் எடுத்துவந்து பக்கத்தில் இருந்த ஸ்டவ்வை ஏற்றி டீ போடத் தொடங்கினார். நான் முறத்தில் அரிவாள்மனையை வைத்து தேங்காயைத் துருவி எடுத்துச் சென்று பிச்சாண்டியிடம் கொடுத்தேன்.

இஸ்திரி போடப்பட்ட ஆடைகளைக் கொண்ட மூட்டையை இடுப்பிலிருந்து இறக்கி கீழே வைத்தாள். எல்லாமே ஆட்டக்காரர்களின் ஆடைகள். மேடையில் அணிவதற்காகவே தைக்கப்பட்டவை. கால்களோடு ஒட்டிக்கொள்ளும் இறுக்கமான பேண்ட்டுகள். அதற்குமேல் அணியக்கூடிய கால்சட்டைகள். சட்டைகள்.

நீ எதுக்கு பொன்னம்மா இம்மா நீளத்துக்கு பொடவய இடுப்பச் சுத்தி கட்டிகினு அவஸ்தைப்படற? இந்த செட்டுல ஏதாவது ஒரு ட்ரஸ்ஸ எடுத்து போட்டுக்கினா சிக்குனு இருக்குமில்ல?”

மாஸ்டர் கண்ணடித்தபடி கொதிக்கும் டீயை ஒரு கோப்பையில் ஊற்றி அவளிடம் கொடுத்தார். அவள் குடித்து முடிக்கும் வரைக்கும் மாஸ்டர் சரசப் பேச்சுகளை நிறுத்தவே இல்லை.

பத்து நாளா ஒங்க கையால ருசியா டீ, ருசிய இட்லி தோசை, ருசிருசியா சோறு கொழம்புனு எப்படியோ பொழப்பு ஓடிட்டுது. நாளையோட எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துடும் இல்ல? அதுக்கப்புறம் என்னாவும்னு நெனச்சாதான் ஏக்கமா இருக்குது.”

அவ்ளோ ஏக்கமா இருந்தா எங்க கூடவே வந்துடு பொன்னம்மா. கூட்டத்தோட கூட்டமா இருந்துக்கலாம்

புருஷன் புள்ளைங்கன்னு ஒரு குடும்பம் இருக்கும்போது அதெல்லாம் நடக்கற கதயா மாஸ்டர்? அடுத்து எந்த ஊரு?”

திண்டிவனமோ வந்தவாசியோ. ஏதோ ஒன்னு., மொதலாளி என்ன முடிவு பண்ணியிருக்காரோ, அது. சரியா தெரியல.”

அவள் கோப்பையை வைத்துவிட்டு மூட்டையைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள். அவள் மூன்று குழந்தைகளுக்கு தாய் என்று சொன்னால் யாருக்குமே நம்பிக்கை வராது. நல்ல இரும்புச்சிலைபோல இருந்தாள்.

சட்னியை தாளித்தபடியே மாஸ்டர் மணி, போய் மணி அடிச்சிட்டு வா. டேபிள் நாற்காலிய இழுத்து சரியா போட்டு வைஎன்றார். நான் மணியடித்து முடித்த ஐந்தாவது நிமிடம் ஆட்டக்காரர்கள் அனைவரும் கூடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

நான் இலைக்கட்டை எடுத்துக்கொண்டு கூடத்துக்குச் சென்றேன். அகலமான தட்டில் அடுக்கிவைக்கப்பட்ட தோசைகளோடு வந்தார் மாஸ்டர். பிச்சாண்டி ஒவ்வொரு இலையிலும் சீராக சட்னி ஊற்றிக்கொண்டே வந்தான். தோசையின் மணமும் சட்னியின் மணமும் கூடத்தில் நிறைந்தது.  அனைவரும் சிற்றுண்டி சாப்பிட்டு வெளியேறிய பிறகு நாங்கள் சாப்பிட உட்காரும்போது பத்துமணி ஆகிவிட்டிருந்தது.

சிலர் கூடாரத்துக்கு திரும்பிச் சென்று சீட்டாட உட்கார்ந்துவிட்டனர். சிலர் கேரம்போர்ட் ஆடத் தொடங்கினர். சிங்காரமும் அவருடைய நண்பர்களும் ஒரு குழுவாக ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக புறப்பட்டுச் சென்றனர். “கடற்கரைக்கு போய்ட்டு வரன் என்று சொன்னார் சித்தப்பா. ”வேணாம் வேணாம். நீ தனியா போவாத. நாங்களும் வரோம்என்று மாணிக்கமும் முத்துவும் அவரோடு சென்றார்கள். மதிய உணவு தயாரிக்கும் வேலைகளில் நாங்கள் மூழ்கிவிட்டோம்.

சென்றவர்கள் அனைவரும் திரும்பி வரும்போது மணி ஒன்றரை ஆகிவிட்டது. உடனே சாப்பாடு பரிமாறும் வேலை. வெண்டைக்காய் பொரியல், புடலங்காய் கூட்டு, மணத்தக்காளி போட்ட வற்றல்குழம்பு, சாம்பார், ரசம், தயிர்,. வடை, அப்பளம், பாயசம் என ஏராளமான விஷயங்கள். ஒரு நொடி கூட நிற்க நேரமில்லை. பரபரப்பாகவே இருந்தோம்.

எல்லோரும் சாப்பிட்டு புறப்பட்டுச் சென்ற பின்னர் பிறகு நாங்களும் சாப்பிட்டு எழுந்தோம். நான் அரிசிமூட்டை வைத்திருந்த கூடாரத்திலேயே தார்ப்பாய் மீது படுத்து தூங்கிவிட்டேன். எழுந்தபோது மாலை நெருங்கிக்கொண்டிருந்தது. வேகமாக எழுந்து முகம் கழுவிக்கொண்டு கேன் எடுத்துச் சென்று பால் வாங்கிவந்தேன்.

மாஸ்டர் டீ போட்டு முடிப்பதற்குள் நான் சென்று குளித்துவிட்டு ஆடைமாற்றிக்கொண்டு திரும்பினேன். நெருப்பைக் கொட்டியதுபோல இருந்த வெப்பத்துக்கு அந்தக் குளியல் இதமாக இருந்தது. கெட்டிலையும்  கோப்பைகள் நிறைந்த வாளிகளையும் எடுத்துக்கொண்டு கூடாரங்களுக்குச் சென்றேன். காலையில் லதாவின் கூடாரத்தில் இருந்த பெண் சொன்னது நினைவுக்கு வந்தது. லேடீஸ் கூடார வரிசையிலிருந்து தொடங்கி எல்லாக் கூடாரங்களுக்கும் சென்று டீ வழங்கினேன்,

ஆறரை மணி காட்சிக்கு ஆறு மணிக்கெல்லாம் டிக்கட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் ஒரு நாளில் சர்க்கஸ் முடிவடையப் போவதால் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. ’விநாயகனே வினைதீர்ப்பவனேஎன்று பாட்டு ஒலிக்கத் தொடங்கியது. அது முடிந்ததும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லேஎன்ற பாட்டு தொடங்கியது. அது முடிந்ததும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்ஒலித்தது. நான் அதைக் கேட்டபடி காய்களை நறுக்கத் தொடங்கினேன். அரிசி கழுவிக்கொண்டிருந்த பிச்சாண்டி புது ரெக்கார்ட்லாம் வாங்கிட்டாரு போல, நல்லா புதுசுபுதுசா போடறாருஎன்று மகிழ்ச்சியில் பல்லைக் காட்டிச் சிரித்தான். ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்என்ற பாட்டு ஒலித்தபோது அவனால் தரையில் நிற்கவே முடியவில்லை.

முதல் காட்சி நடைபெறும் சமயத்தில் சமையல் வேலையில் நாங்கள் மூழ்கியிருப்போம். அதனால் ஒவ்வொரு நாளும் அச்சமயத்தில் மேடைக்குப் பக்கத்தில் சென்று நிற்கக்கூட  எங்களுக்கு நேரமிருக்காது. துடிப்பும் வேகமும் நிறைந்த இசைக்கோவைகள் ஒலிப்பதை மட்டும் கேட்டபடி வேலையில் ஆழ்ந்திருப்போம்.

இரண்டாவது காட்சி எட்டரை மணிக்கு. அப்போதும் தொடக்கத்தில் இருந்து எங்களால் பார்க்கமுடியாது. ஓய்வு கிடைக்கும்போது ஓடிச் சென்று ஒருசில நிமிடங்கள் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்புவோம். மேடையின் இரு பக்கங்களிலும் திரை மறைவில் இருள் குறைவான வாயில்கள் இருந்தன. ஆட்டக்காரர்கள்  மேடைக்குச் செல்லவும் வெளியேறவும் உருவாக்கப்பட்ட வழிகள் அவை. அந்த இடங்களில்தான் மறைவாக நின்று பார்ப்போம்.

நான் நின்றிருந்தபோது என்னைக் கடந்து ஒருத்தி வாசலுக்கு அருகில் சென்றாள். அவள் பூசியிருந்த பவுடரின் வாசனையும் செண்ட் வாசனையும் பத்தடி தொலைவுவரைக்கும் பரவியிருந்தது.  அதே நேரத்தில் மற்றொருத்தியும் எதிர்ப்புற வாயிலுக்கருகில் நின்றிருந்தாள். இருவரும் இசைக்காகக் காத்திருந்தனர். தாளம் ஒலிக்கத் தொடங்கியதுமே இருவரும் சீரான நடையில் உடலை வளைத்தும் குலுக்கியும் நடந்து சென்று மேடையில் நின்று கையை உயர்த்திச் சிரித்தார்கள். இருவரும் ஒரே நேரத்தில் கைகளை உயர்த்தினார்கள். இறக்கைகளை அசைப்பதுபோல இருபுறங்களிலும் அசைத்தார்கள். ஒரே புள்ளியில் நின்றபடி இடுப்புக்கு மேற்பட்ட பகுதியை மட்டும் சுழற்றினார்கள். சட்டென கைகளை கீழே ஊன்றி மூச்சடக்கி கால்களை மேலே உயர்த்தினார்கள். அப்போது தலைகீழாகத் திருப்பிவைக்கப்பட்ட பொம்மைபோல அவர்கள் தோற்றம் இருந்தது. கைகளை அங்குலம் அங்குலமாக நகர்த்தி இருவரும் நெருங்கிவந்தார்கள். பிறகு கால்களைமட்டும் சுழற்றினார்கள். அப்போது மூன்றாவதாக லதா மேடைக்குள் வந்தாள். பறவைபோல ஒரே கணத்தில் எம்பி அவர்கள் கால்மீது நின்றாள். கீழே கைகளை ஊன்றியிருப்பவர்கள் மெல்லமெல்ல ஒரு வட்டமடித்துத் திரும்ப, அவர்களுடைய கால்மீது நின்ற லதாவும் அவர்களுக்கு இணையாக கையை உயர்த்தி அசைத்தபடி வட்டமடித்தாள். அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது.

ஒரு நீண்ட கயிறு மேடைக்கு நடுவில் தொங்கியது. இசை ஒலிக்கத் தொடங்கியதும் சிங்காரம் ஓடி வந்து அந்தக் கயிற்றைப் பற்றினான். கயிறு மேலே செல்ல ஒரு குறிப்பிட்ட உயரத்தில் தொங்கினான். கயிறு முன்னும் பின்னும் அசைய ஆரம்பித்ததும் அவன் அதைப் பற்றியபடி புன்னகையுடன் ஊஞ்சலாடினான். இன்னும் சற்றே மேலேறி கயிற்றின் கீழ்முனையை வலது காலின் விரல்களுக்கிடையில் பற்றிக்கொண்டு, அடுத்த காலை அவன் அந்தரத்தில் சுழற்றியபடி சுற்றிச்சுற்றி வந்தான். இசை உச்சத்துக்குச் சென்றபோது லதா உள்ளே வந்தாள். கயிற்றில் தொங்கியபடியே அவள் கையைப் பற்றி தன்னை நோக்கி ஒரு தூண்டிலைப்போல இழுத்தான் அவன். அவள் சட்டென எம்பி அவனுடைய பாதத்தின் மீது தன் ஒரு காலைப் பதித்தபடி அவனுக்கு இணையாக நின்றுகொண்டாள். அடுத்த காலை காற்றில் வீசிவீசி சுழன்றாள். அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்தது.  இசை இன்னும் உச்சத்துக்குச் சென்றது. லதா உடனே தன் முதுகில் செருகியிருந்த குடையை எடுத்து விரித்து அதைத் தனக்கு மேலே பிடித்தாள். கயிறு சுழன்று சுழன்று வந்தபோது, கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

அடுத்த நிகழ்ச்சியில் இரண்டு கயிறுகள் தனித்தனியாக இறங்கின. இசை ஒலிக்கத் தொடங்கியதும் சிங்காரமும் லதாவும் மேடைக்கு ஓடி வந்தார்கள். அரங்கத்தினரை நோக்கி குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு அரங்கத்தின் வட்டப்பாதையிலேயே ஓடி ஆளுக்கொரு கயிற்றை எம்பிப் பற்றி ஊஞ்சலாடினார்கள். வலது கையும் வலது காலும் மட்டும் கயிற்றைப் பற்றியிருக்க இடது கையையும் காலையும் அந்தரத்தில் விரித்தபடி ஒரு குடையைப் போல சுழன்றார்கள். ஒரு கட்டத்தில் இருவருடைய கைகளும் கால்களும் பற்றிக்கொள்ள ஊஞ்சல் முன்னும் பின்னும் அசைந்தது. இசை உச்சத்துக்குச் சென்று அடங்கியது.

ஆளுயர வட்டவடிவ இரும்புச்சக்கரத்தோடு மேடையில்  தோன்றி வணங்கினான் சிங்காரம். வெள்ளை வண்ணத்தில் காணப்பட்ட அச்சக்கரத்தை வட்டப்பாதையில் இசைக்குத் தகுந்தபடி உருட்டினான். சட்டென அரங்கத்தின் மையத்துக்கு வந்து அச்சக்கரத்தில் இரு கால்களையும் வைத்து ஊன்றினான். அதே கணத்தில் மேல் பகுதியில் கைகளால் பற்றிக்கொண்டான். சமநிலையில் அச்சக்கரம் நின்ற விசித்திரத்தைப் பார்த்து ஓவென சத்தமெழுப்பி கைத்தட்டினார்கள் பார்வையாளர்கள். பிறகு அச்சக்கரம் சமநிலையை இழக்காமலேயே மேடையில் உருளத் தொடங்கியது. கீழேயிருந்த தலை மேலே சென்றது. மேலேயிருந்த கால் கீழே வந்தது. பிறகு கால் மேலே சென்றது. தலை கீழே வந்தது. ஒரு ஊசி அளவுக்குக்கூட நகராத சக்கரம் சமநிலையில் சுழன்றபடியே இருந்தது. அரங்கத்தின் கைத்தட்டல் வெகுதொலைவு வரைக்கும் கேட்டது.

கைகளை உயர்த்தி இடுப்பை ஒயிலாக அசைத்தபடி மேடைக்குள் வந்த லதா சட்டென சுழலும் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டாள். அவன் தலை ஊன்றியிருக்கும் இடத்தில் லதா கால்களை ஊன்றியிருந்தாள். அவன் கால்களை வைத்திருக்கும் இடத்தில் லதா தன் தலையைப் பதித்திருந்தாள். அரங்கத்தில் இருப்பவர்களுக்கு இருவருடைய முகங்களும் மாறிமாறித் தோன்ற இசையும் கைத்தட்டலும் உச்சத்தை நோக்கிப் பாய்ந்தன.

ஒவ்வொரு இசைத்தட்டு மாறும்போதும் ஒரு புதிய நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு நிகழ்ச்சியில் இரண்டடி நீளமுள்ள உருண்ட தடியை தரையில் நிற்க வைத்துவிட்டு அதை இரு கைகளாலும் உறுதியுடன் பற்றிக்கொண்டு சிங்காரம் எம்பி நிற்க, அவன் உடலில் தொற்றி ஏறி, அவன் கால்களில் கைகளை ஊன்றி தலைகீழாக லதா நின்றாள். இன்னொரு நிகழ்ச்சியில் இந்தப்பக்கம் ஐந்துபேர் அந்தப்பக்கம் ஐந்து பேர் வரிசையில் நின்றிருக்க, லதா சட்டென எம்பி அவர்கள் தோள்மீது ஏறி நின்று வலம் வந்தாள்.. அடுத்த நிகழ்ச்சியில் அந்தப் பத்து பேரும் ஒரு மூங்கிலை உயர்த்திப் பிடிக்க, அதன் மீது ஏறி நின்று நடைபயின்றாள் அவள்.

சைக்கிளில் வட்டமடித்தல், ஒற்றைச்சக்கரம் ஓட்டுதல், பார் விளையாட்டு, நெருப்பு வளையங்களில் தாவுதல், என எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இறுதி நிகழ்ச்சியாக செல்லப்பா தோன்றி  ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காட்டினார். இசை சீராக ஒலிக்கத் தொடங்கி சட்டென மேலெழுந்தது. அவர் உடலையும் கைகால்களையும் தலையையும் நினைத்த திசையில் திருப்பியதைக் கண்டு  அரங்கம் எழுப்பிய மகிழ்ச்சிக் கூச்சல் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தது. அவருடைய ஒவ்வொரு அசைவும் நடனத்தின் அசைவையும் வேகத்தையும் கொண்டிருந்தது. 

பூமிப்பந்தின் மீது ஏறி நின்றபடி பந்தை காலால் உருட்டியவாறே மேடையின் வட்டப்பாதையில் வலம்வருவது செல்லப்பாவுடைய சிறப்பு நிகழ்ச்சி. ஒருகணம் கூட அவர் கவனம் சிதைந்ததில்லை. முதல் வட்டத்தில் அவர் கைகளை இருபுறமும் விரித்து புன்னகைத்தபடியே வந்தார். அடுத்த வட்டத்தில் அவரைத் தொடர்ந்து இரு பெண்கள் வந்தனர். ஒரு பெண் செல்லப்பாவை நோக்கி ஒரு சின்னப் பந்தை எறிந்தாள். உலக உண்டைப்பந்துமீது நின்றிருந்த செல்லப்பா அதை லாவகமாகப் பிடித்து அதே வேகத்தில் மறு கைக்கு மாற்றி அடுத்தவரை நோக்கி எறிந்தார். மூன்றாவது முறையாக வட்டப்பாதையில் வந்தபோது இரு புறங்களிலிருந்தும் பெண்கள் அவரை நோக்கி ஒரே சமயத்தில் சின்னப் பந்துகளை எறிந்தனர். அவர் அவற்றைச் சிக்கெனப் பிடித்து  மறுகைக்கு மாற்றி பெண்களை நோக்கி எறிந்தார். ஒரு பந்துகூட பிசகவில்லை.

செல்லப்பாவின் தீப்பந்த நிகழ்ச்சி தொடங்கும்போதே கைத்தட்டல் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு அது மக்களிடையே பரவி செல்வாக்கு பெற்றிருந்தது. செல்லப்பா அவையைப் பார்த்து வணங்கியபடியே மேடைக்கு நடுவில் வந்து நின்றார். பிறகு முத்து, மாணிக்கம், ராஜாங்கம், செந்தில் நால்வரும் வந்து பக்கத்துக்கு இருவராக நின்றனர். ஒரு வரிசையில் ஐந்து பேர். இசை ஒலித்தபடி இருக்க, மேலும் நான்கு பேர் ஓடோடி வந்து ஐந்து பேர்களின் தோள்களில் ஏறி நின்றார்கள். அதற்குப் பிறகு மூன்று பேர் ஓடி வந்து கீழே இருந்தவர்களின் இடையையும் தோளையும் படிக்கட்டெனப் பற்றி ஏறி மேலே சென்றனர். பிறகு இருவர். இறுதியாக லதா.

லதா அனைவருக்கும் மேலே ஏறி நின்று  கையசைத்தாள். அப்போது அவளை நோக்கி ஒரு தீப்பந்தம் எறியப்பட்டது. அவள் அதை வெற்றிகரமாகப் பிடித்து கையை உயர்த்தி அசைத்தாள். தீப்பந்தம் உச்சியை நோக்கி தழலாடியது. அடுத்தடுத்த பந்தங்களை பின்னலின் விளிம்பில் நிற்பவர்கள் பற்றி கையை உயர்த்தினார்கள். ஒரு கோணத்தில் அந்த மானுடப்பின்னலே ஒரு பெரிய தீப்பந்தம் போல சுடர்விட்டது. இசை மேலும் மேலும் உயர்ந்து உச்சத்தை நோக்கிச் செல்ல, கீழே நின்றிருக்கும் ஐந்து பேருடைய காலடிகளும் அங்குலம் அங்குலமாக நகர்ந்து வட்டமடித்தது. தீப்பந்தமே சுழல்வது போன்ற கண்மயக்கை அது அளித்தது. பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்றுவிட்டனர். கைத்தட்டல் ஓயவே இல்லை. தீப்பந்தம் ஒரு  முழு வட்டமடித்ததும் முதலில் லதா இறங்கினாள். பிறகு ஒவ்வொரு அடுக்கிலும் நின்றிருந்தவர்கள் இறங்கினார்கள். இறுதியாக பதினைந்து பேரும் வரிசையில் நின்று அவையை வணங்கிவிட்டுக் கலைந்தார்கள்.

காட்சியின் கடைசி நிகழ்ச்சி. செல்லப்பா மட்டுமே அரங்கத்தின் மையத்தில் நின்றிருந்தார். சாந்தி சர்க்கஸில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி அது. இந்த ஒரு நிகழ்ச்சி வழியாக மட்டுமே ஒவ்வொரு ஊரிலும் செல்லப்பாவுக்குக் கிடைத்த பரிசுகளுக்கும் பாராட்டுகளுக்கும் அளவே இல்லை.

செல்லப்பா அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து வணங்கியபோது ஒலிபெருக்கியில் குரல் எழுந்தது. ”மகாஜனங்களே, எங்களை வளர்த்து வாழவைக்கிற தெய்வங்களே. இதோ இங்கே நிற்பவர் எங்கள் உடற்பயிற்சிக் கலைஞர் செல்லப்பா. சாந்தி சர்க்கஸின் சொத்து. எங்கள் தங்கம். அஞ்சாத சிங்கம். இரும்புக்கோட்டை.  அவர் உடல் தெய்வம் வாழும் கோவில். செஞ்சி தேசிங்கு ராஜாவின் வெற்றிக்கோட்டை. அவர் ஆற்றல் இந்த ஊருக்கே தெரிந்த விஷயம்.” என்று தொடங்கினார்.

புதுச்சேரி பெருமக்களே, இதோ அவர் உங்கள் முன்னால் நிற்கிறார். அவர் நிற்கும் இடத்திலிருந்து அவருடைய உடலை கையால் ஓங்கிக் குத்தி ஒரே ஒரு அங்குலமாவது அசைத்து நகர்த்திவிடக் கூடிய ஆற்றல் தனக்கு உண்டு என்று நம்புகிறவர்கள் இங்கே மேடைக்கு தாராளமாக வந்துவிடலாம். போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு தக்க பரிசு உண்டு

பார்வையாளர்கள் அனைவரும் ஒரே குரலில் இல்லை” ”இல்லைஎன்று ஓசையெழுப்பி ஆரவாரம் செய்தனர். ஒருவர் செல்லப்பா வாழ்கஎன்று முழக்கமெழுப்பினார். அவரைத் தொடர்ந்து பலரும் அந்த முழக்கத்துடன் சேர்ந்துகொண்டனர்.

அன்பான பொதுஜனங்களே. கடந்த பத்து நாட்களாக இந்த ஒதியஞ்சாலை திடலில் சாந்தி சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நாளையே இறுதி நாள். முதல் நிகழ்ச்சியிலிருந்தே இந்தப் போட்டி நடந்து வருகிறது. இது வரை யாரும் செல்லப்பாவை வென்றதில்லை. அவரை வெல்லமுடியும் என நினைப்பவர்கள் மேடைக்கு வரலாம். தயக்கம் வேண்டாம். வருக வருக

அரங்கத்தின் ஒரு மூலையிலிருந்து ஒருவர் கையை உயர்த்தியபடி எழுந்து நின்றார். உடனே அறிவிப்பாளரின் பார்வை அவர் மீது விழுந்துவிட்டது. ”இதோ எழுந்துவிட்டார் ஒரு வீரர்.  வருக வீரரே வருக. இந்த மேடை உங்களுக்காகக் காத்திருக்கிறது. தயவு செய்து, நண்பர் மேடைக்கு வருவதற்கு வழி விடுங்கள்

அக்கணத்திலிருந்தே கைத்தட்டல் தொடங்கிவிட்டது. ஆரவாரத்துக்கு நடுவில் அவர் மேடையில் ஏறி செல்லப்பாவுக்கு அருகில் நின்றார்.

நண்பரே, உங்கள் பெயர்

வைத்தியலிங்கம்

நல்லது திரு. வைத்தியலிங்கம் அவர்களே. இந்தப் போட்டியில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய நான்கு முக்கியமான விதிகள் உண்டு. முதல் விதி, நீங்கள் உங்களுடைய ஒரு கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரண்டாவது விதி, குத்து மட்டுமே இந்தப் போட்டியில் அனுமதிக்கப்படும். மூன்றாவது விதி, அவருடைய மார்பில் மட்டுமே நீங்கள் குத்த வேண்டும். நான்காவது விதி, உங்களுக்கு ஐந்து வாய்ப்புகள் உண்டு.”

செல்லப்பாவும் வைத்தியலிங்கமும் சிரித்து கைகுலுக்கிக் கொண்டார்கள். பிறகு குஸ்தி முறையில் செய்வதுபோல ஒருவர் கையை ஒருவர் தொட்டு குனிந்து வணங்கிவிட்டு விலகினார்கள்.

போட்டி நேரம் முழுதும் இசை ஒலித்தபடி இருக்கும். இசை நிற்கும் சமயம் உங்களுக்கான நேரம் தொடங்குகிறது. அப்போது நீங்கள் அவரைக் குத்தவேண்டும்

இசை ஒலிக்கத் தொடங்கியது. செல்லப்பா கால்களை மேடையில் அழுத்தமாக ஊன்றிக்கொண்டு நின்றார். வைத்தியலிங்கம் நம்பிக்கை தெரியும் முகத்துடன் கைகளைத் தேய்த்தபடி இருந்தார். பார்வையாளர்களிடையில் திடீரென அமைதி சூழ்ந்தது. நான் செல்லப்பாவின் மீது என் கவனத்தைக் குவித்திருந்தேன்.

சட்டென இசை நின்றது. வைத்தியலிங்கம் முன்னேறி செல்லப்பாவின் மார்பில் குத்தினார். அது அவருடைய உடலில் சின்ன அசைவைக்கூட ஏற்படுத்தவில்லை. அதைப் பார்த்ததுமே மக்களுடைய  ஆரவாரம் பெருகத் தொடங்கியது. இரண்டு, மூன்று, நான்கு என எந்த வாய்ப்பிலும் செல்லப்பாவை அசைக்கமுடியவில்லை. ஒரு பாறைபோல அவர் உறுதியாக நின்றிருந்தார்.

வைத்தியலிங்கம் சற்றே பதற்றம் கொள்வதுபோலத் தோன்றியது. அறிவிப்பாளர் மீண்டும் இசையைச் சுழலச் செய்தார். நான் செல்லப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் அவர்மீது வருத்தம் கொண்டேன். சர்க்கஸ் நிகழ்ச்சியிலேயே இல்லாத ஒன்று இது. இதை வடலூரில் சர்க்கஸ் போட்ட சமயத்தில் அவராகவே ஒரு பரபரப்புக்காக சேர்த்துக்கொண்டார். விளம்பரம் கிடைக்கிறது என்பதால் முதலாளியும் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

இசை நின்றதும், வைத்தியலிங்கம் முன்னால் அடியெடுத்து வந்து செல்லப்பாவை குத்தி வீழ்த்த முயற்சி செய்தார். அப்போதும் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

செல்லப்பா தன்னைத் தளர்த்திக்கொண்டு அவையினரைப் பார்த்து கைகளை அசைத்து வணங்கிவிட்டு, வைத்தியலிங்கத்தின் கைகளைப் பற்றி குனிந்து வணங்கிப் பிரிந்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள் வெளியேறத் தொடங்கினர். ஆட்டக்கலைஞர்கள் ஒவ்வொருவரும் தத்தம் கூடாரத்தை நோக்கித் திரும்பி நடந்தனர். நான் வேகமாக சமையல் கூடத்துக்குச் சென்றேன். மாஸ்டர் வெறும் தரையில் துண்டை விரித்து காற்றாடப் படுத்திருந்தார். என்னைப் பார்த்ததுமே என்னடா செல்லப்பாவுக்கு ஜெயம்தான?” என்று கேட்டார். நான் ஆமாம் என்று உற்சாகத்தோடு தலையசைத்தேன். ”அவன் வில்லாதிவில்லன்டா. அவன ஜெயிக்க உலகத்துல ஆளே இல்லஎன்றார் அவர்.

சரி போய் மணி அடிச்சிட்டு வா. மேக்கப்ப கலச்சிட்டு இங்கதான் சாப்புட வருவாங்க. மொதல்ல எலயை எடுத்து கழுவு. ஓடு

நான் வேகமாகச் சென்று இலைக்கட்டுகளை எடுத்துக்கொண்டு தண்ணீர்க்குழாய்க்கு அருகில் சென்றேன். பிச்சாண்டி மேசைகளைத் துடைக்க துணியை எடுத்துக்கொண்டு போனான். நான் இலையைப் பிரித்து மேசையில் வைத்ததும் அவன்  தண்ணீர்த்தம்ளரை வைத்துக்கொண்டு சென்றான். மாஸ்டர் சோற்றுக்குண்டானுடன் வரும்போது கலைஞர்கள் ஒவ்வொருவராக உட்கார்ந்து விட்டார்கள். இரவு உணவுக்காக புதிதாக இரண்டு பொரியல்களை வைத்திருந்தார் மாஸ்டர். ஒன்று பீன்ஸ் பொரியல். இன்னொன்று பீட்ரூட் பொரியல். எல்லோரும் விரும்பி வாங்கிச் சாப்பிட்டார்கள். பருப்புரசத்தை கையைக் குழிவாக்கி வாங்கிக் குடித்தார்கள்.

சாப்பிட்டு முடித்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து பல இடங்களில் திட்டுத்திட்டாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் இலைகளையெல்லாம் ஒரு கூடையில் எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே சென்று குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்தேன். அதற்குள் பிச்சாண்டி மேசைகளையும் அறையையும் சுத்தம் செய்து முடித்திருந்தான்.

மாஸ்டர் ஒரு தட்டில் கொஞ்சமாக சோற்றை அள்ளிவைத்துக்கொண்டு ரசம் ஊற்றிக்கொண்டு சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார். நானும் பிச்சாண்டியும் தனித்தனி தட்டுகளில் போட்டுக்கொண்டு சாப்பிட்டோம். பிறகு தட்டுகளைக் கழுவி கவிழ்த்துவைத்துவிட்டு சமையலறைக்கு வெளியே மடிப்புக்கட்டிலை விரித்து உட்கார்ந்தோம். மாஸ்டர் வெற்றிலையை மடித்து சுண்ணாம்பு தடவினார்.

அப்போது வெளியே என்னமோ சத்தம் கேட்டது.  அதைக் கேட்டு நான் சட்டென்று எழுந்து கூடாரப்பகுதியை நோக்கி ஓடிவந்தேன். பலரும் பல திசைகளிலிருந்து அதே கணத்தில் அந்த இடத்துக்கு வந்துவிட்டார்கள்.

நல்ல மாட்டுக்கு ஒரு அடி. சூடு சொரண இருக்கற மனுஷனுக்கு ஒரு வார்த்த. ஒரு தரம் சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா நீ? ஆம்பளயா நீ?”

லதாவும் செல்லப்பாவும் நின்றிருப்பதைப் பார்த்து அனைவரும் திகைத்து நின்றுவிட்டார்கள். தொட்டாலே விழுந்துவிடுவது போல திகைத்து நிலைகுலைந்து காணப்பட்டார் செல்லப்பா. கண்களில் கசப்பும் சலிப்பும் அடர்ந்திருக்க லதா மூச்சு வாங்கியபடி நின்றிருந்தாள்.

மாஸ்டர் இருவரையும் ஒருகணம் மாறிமாறிப் பார்த்தார். அவர்களிடம் எந்த விளக்கத்தையும் கேட்க அவர் விரும்பவில்லை. “சரி சரி போங்கப்பாஎன்று மாஸ்டர் அனைவரையும் அங்கிருந்து கலைத்து அனுப்ப முயற்சி செய்தார்.

என்ன பிரச்சினை இங்க?”

அதெல்லாம் ஒரு பிரச்சினயும் இல்லை. போங்கப்பா, போய் நேரத்தோடு படுங்கஎன்று மீண்டும் மீண்டும் சொல்லி அனுப்பினார்.

கூட்டம் அவருடைய சொற்களுக்குக் கட்டுப்பட்டு விலகிச் சென்றது. யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த நிலையில் செல்லப்பா தன் கூடாரத்தை நோக்கிச் சென்றார்.

திரும்பி வந்து கட்டிலில் படுத்தபோது மனபாரமாக இருந்தது. நட்சத்திரங்களையும் நிலாவையும் பார்த்தபடி எதைஎதையோ குழப்பத்துடன் நினைத்திருந்தேன். எப்போது தூங்கினேன் என்றே தெரியாதபடி தூக்கத்தில் அமிழ்ந்துவிட்டேன். விழிப்பு வந்தபோது, வெளிச்சம் பரவியிருந்தது. எழுந்து முகம் கழுவிவிட்டு  பால் வாங்கிக்கொண்டு வந்து மாஸ்டரிடம் கொடுத்தேன். காலையிலேயே குளித்து உடைமாற்றிக்கொண்டு நெற்றி நிறைய பூசையோடு காணப்பட்டார் மாஸ்டர்.

நான் டீ நிரம்பிய கெட்டிலை எடுத்துச் சென்று எல்லோருக்கும் டீ விநியோகித்துவிட்டு வந்தேன். வழக்கமாக நிகழ்ச்சி நடைபெறும் கடைசி நாளில் எல்லோருமே ஏதோ பரபரப்பில் இருப்பார்கள். கலகலப்பாகப் பேசிச் சிரிப்பார்கள். புதிய ஊரில் அடுத்த காட்சி தொடங்கும் வரைக்கும் எல்லோருக்கும் விடுப்பு கிட்டும் என்பது ஒரு முக்கிய காரணம். ஊருக்குச் சென்று மனைவி பிள்ளைகளோடு பொழுதுபோக்கலாமே என்று பல திட்டங்களைப் பேசிப்பேசி வளர்த்துக்கொள்வார்கள். ஆனால் அன்று ஒருவருடைய முகத்தில் கூட உற்சாகம் தென்படவில்லை.

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பெஞ்சில் சுருண்டு படுத்தேன். காரணமே இல்லாமல் மனசுக்குள் அழுகை பொங்கியவண்ணம் இருந்தது. நான் அந்த இடத்திலேயே இருந்தால் ஒரே சிந்தனையில் மூழ்கி தடுமாறிக்கொண்டுதான் இருப்பேன் என நினைத்து சிறிது நேரம் காலார நடந்துவிட்டு வருவதாக மாஸ்டரிடம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பிப் போனேன். கடற்கரைக்குச் சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். சீற்றத்தோடு பொங்கி வந்து கரையை அறையும் அலையைப் பார்க்கும்போதெல்லாம் நேற்று இரவு பார்த்த லதாவின் தோற்றம்தான் நினைவுக்கு வந்தது. கடற்கரையிலிருந்து சர்க்கஸ் கூடாரத்துக்கு கால்நடையாகவே திரும்பி வந்தேன்.

இரவு முதல் நிகழ்ச்சி அதிகபட்சக் கூட்டத்தோடு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கிவிட்டது. கலைஞர்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள். காட்சிகளைக் காண எழும் ஒரு துடிப்பும் வேகமும் அன்று எனக்குள் எழவே இல்லை. செல்லப்பாவின் நிகழ்ச்சியைக் கூட பார்க்க விருப்பமில்லாமல் சமையல் கட்டிலேயே வளையவளைய வந்துகொண்டிருந்தேன். கண்கள் அடிக்கடி தளும்பிக்கொண்டே இருந்தன.

ஏன்டா இப்பிடி உம்னு இருக்கற? செல்லப்பா ஜிம்னாஸ்டிக்ஸ்னா விடமாட்டியே நீ. இன்னைக்கு என்னாச்சி? இங்கயே உக்காந்திருக்க?” என்று கேட்டார் மாஸ்டர். “ஒன்னுமில்ல மாஸ்டர்என்று எதையோ சொல்லி சமாளித்தேன்.

நான் என்ன நினைக்கிறேன் என்பதில் எனக்கே ஒரு தெளிவில்லை. செல்லப்பாவை நினைத்து உண்மையிலேயே வருந்துகிறேனா என்பதைக் கூட என்னால் சொல்லமுடியவில்லை. எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அவர். அவருடைய வாழ்க்கை அறுந்து துண்டாக நிற்பதை என்னால் பார்க்கமுடியவில்லை.

என் உறுதியெல்லாம் முதல் காட்சி நடைபெறும் வரைக்கும்தான் நீடித்தது.  இரண்டாவது காட்சியில் செல்லப்பாவுக்காக தொகுப்பாளர் தெரிவிக்கும் அறிவிப்பையும் வருக வருக நாகராஜன்என்று வரவேற்கும் அறிவிப்பையும் ஸ்பீக்கரில் கேட்கக்கேட்க என் உறுதி குலைந்தது. மாஸ்டரிடம் சொல்லிவிட்டு ஓடிச் சென்று நுழைவாயில் திரையின் மறைவில் நின்றுகொண்டேன்.

செல்லப்பாவுக்கு அருகில் நின்றுகொண்டிருப்பவரிடம் போட்டி விதிகளைப்பற்றி எடுத்துரைத்துக்கொண்டிருந்தார் தொகுப்பாளர். நான் அப்போதுதான் அந்த நாகராஜனைப் பார்த்தேன். செல்லப்பாவைவிட உயரமானவர். வாட்டசாட்டமான உடலுடையவர். அவரைப் பார்த்ததுமே ஓர் அச்சம் என் நெஞ்சில் பிறந்தது.

நான் ஒன்று சொல்லலாமா?” என்று செல்லப்பாவைப் பார்த்துக் கேட்டார் அந்த நாகராஜன். ”சொல்லுங்கள்என்றார் செல்லப்பா.

அந்த உரையாடலைக் கேட்டு அதுவரை ஆரவாரம் செய்துகொண்டிருந்த கூட்டம் அமைதியில் உறைந்துவிட்டது.

உங்கள் உயரம்?”

ஐந்து அடி. ஒன்பது அங்குலம்

நான் ஆறு அடி. இரண்டு அங்குலம். உங்கள் எடை?”

“75 கிலோ

சரி, நான் 110 கிலோ

ஏன் இதையெல்லாம் என்னிடம் சொல்றீங்க?”

ஒருவேளை நீங்கள் பின்வாங்குவதாக இருந்தால், இத்தருணத்தில் இப்போதே பின்வாங்கிக்கொள்ளலாம். அதற்கு இது ஒரு வாய்ப்பாக   இருக்கட்டும் என்பதற்காகச் சொல்கிறேன் என்று சிரித்தார் அவர். அவர் குரலில் ஆழமான தன்னம்பிக்கை ஒலித்தது.

அவசியமில்லை நாகராஜன். நாம் தொடங்குவோம்.”

பிறகு உங்கள் விருப்பம்என்றபடி முன்னால் வந்து செல்லப்பாவோடு கைகுலுக்கினார். தொடர்ந்து தன் மரபுப்படி செல்லப்பா அவர் கைகளைத் தொட்டு வணங்கினார். அவரும் செல்லப்பாவின் கைகளைத் தொட்டு வணங்கினார்.

இசை ஒலிக்கத் தொடங்கியதும் நான் அமைதியிழக்கத் தொடங்கினேன். அரங்கம் முழுவதுமே அமைதியில் மூழ்கியிருந்தது. திடீரென நேற்று இரவு நான் கேட்ட லதாவின் சொற்கள் நினைவில் வந்து மோதின. என்னை அறியாமல் நான் செல்லப்பாவுக்காக வேண்டிக்கொண்டேன்.

காலை சற்றே அகட்டி பாதங்களை உறுதியாக ஊன்றிக்கொண்டு நின்றார் செல்லப்பா. இசை நின்ற கணத்தில் நாகராஜன் முன்னால் வந்து கையை ஓங்கி செல்லப்பாவின் மார்பில் குத்தினார். இரும்புக்கோட்டையில் அசைவே இல்லை. நாகராஜன் அடைந்த அதிர்ச்சியை அவர் முகத்தில் பார்க்கமுடிந்தது. காலடிகளை மாற்றிமாற்றி வைத்து குழப்பிக்கொண்டார்.

இசை மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. எந்தக் காலை முன்னால் வைத்து நகர்வது என்கிற தடுமாற்றத்தில் அவர் காலை முன்னோக்கி வைப்பதும் பிறகு எடுப்பதுமாக இருந்தார். அதற்கிடையில் மணியோசை நின்றது. அவரால் போதிய விசையுடன் குத்த முடியவில்லை.  செல்லப்பா உடலில் ஒரு சிறு அசைவைக்கூட அந்த அடியால் ஏற்படுத்த முடியவில்லை. பார்வையாளர்கள் தம் பதற்றத்தை மறந்து கைதட்டிப் பாராட்டி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

இசை மீண்டும் ஒலித்தது. இப்போது சரியான திட்டமிடலோடு முன்வந்து செல்லப்பாவின் மார்பில் தாக்கினார் நாகராஜன். ஒரு பெரிய சம்மட்டியால்  ஒரு பாறையை அடித்துப் பிளப்பதுபோல இருந்தது அந்த அடி. ஆனால் செல்லப்பாவின் நிலையில் ஒரு சிறிய சலனத்தைக்கூட அது ஏற்படுத்தவில்லை.

நான்காவது முயற்சியிலும் நாகராஜனின் வேகம் பலனளிக்கவில்லை. ஐந்தாவது முயற்சியில் கூடுதல் அழுத்தத்தோடு  நாகராஜன் குத்திய போதும் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. வழக்கம்போல வெற்றி முழக்கம் அவையில் ஓங்கி ஒலித்தது.

நாகராஜனின் கைகளைப்பற்றி வணங்குவதற்காக செல்லப்பா நெருங்கியபோது, அவர் நிற்கமுடியாமல் தடுமாறுவதைப் பார்த்தேன். கால்மாற்றி நின்று கையை உதறிக்கொண்டே இருந்தார் அவர். “என்ன?” என்று கேட்டார் செல்லப்பா. “மணிகட்டு பிசகிடுச்சா, உடைஞ்சிடுச்சானு தெரியலை. நான் டாக்டர்கிட்ட போறேன். பெஸ்ட் ஆஃப் லக்என்று சொல்லி வாழ்த்திவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்.

(பதாகை - செப்டம்பர் 2020 இதழில் வெளிவந்த சிறுகதை )