Home

Sunday, 24 May 2026

புதிர்களும் விடைகளும்

 

ஒரு கணத்தில் வாழ்க்கைப்பரப்பில் மீது மின்னி மறையும் ஒளிச்சுடரை அல்லது கவிந்து மறையும் இருளை நோக்கி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வடிவமாக சிறுகதை உலகெங்கும் எழுதப்பட்டு வருகிறது. அள்ளியள்ளி எடுத்தாலும் வற்றாத அமுதசுரபியாக சிறுகதை வடிவம் கோடிக்கணக்கான கணங்களை நமக்கு வழங்கியுள்ளது.  இத்தனை ஆண்டு காலம் எழுதிய பின்னும் நமக்குத் தெரியாத ஒளிப்புள்ளிகளும் இருட்புள்ளிகளும் இந்த வாழ்வில் நிறைந்திருக்கின்றன என்பதை புதிதாக வெளிவரும் ஒவ்வொரு சிறுகதைத்தொகுதியும் நமக்கு உணர்த்தியபடி இருக்கிறது.

புரைதீர்ந்த உண்மை

  

பெங்களூர் தமிழ்ச்சங்கம் அல்சூர் ஏரியை ஒட்டி ஒரு பெரிய கட்டிடத்தில் இயங்கிவருகிறது. வாரம்தோறும் அங்கு இலக்கிய வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சியுள்ள ஆசிரியர்கள் அங்கு வந்து வகுப்பெடுத்துவிட்டுச் செல்வார்கள். அந்த வகுப்புக்கு ஆர்வத்துடன் தொடர்ந்து செல்பவர்கள் பலர். என் நண்பரும் அவர்களில் ஒருவர். கடந்த ஞாயிறு அன்று காலையில் வகுப்பை முடித்துக்கொண்டு என்னைச் சந்திப்பதற்கு வந்திருந்தார்.

Sunday, 17 May 2026

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி 1

  

குளிப்பாட்டி முடித்ததும் குதிரையைத் தட்டி அழைத்துக்கொண்டு கரையேறினான் பார்த்தசாரதி.

பார்த்தசாரதிக்கு முன்னால் இருள் பிரியாத ஆகாயம் விரிந்து கிடந்தது. தூரத்தில் கறுப்புச்சித்திரம் மாதிரி ஆலமரங்களும் ரயில்வே ஸ்டேஷனும். ஏரிக்கரையில் இருந்து பஞ்சாயத்து போர்டு தெருவுக்குள் இறங்கும் ஒற்றையடிப்பாதைகூட எழுதி அழித்த மங்கலான கோடு மாதிரி தெரிந்தது. கால் இருளில் பால்மாதிரி ஒரு வர்ணத்தில் குதிரையுடன் பார்த்தசாரதி நடப்பது புராணகாலத்து ராஜகுமாரன் நடப்பதுபோல இருந்தது.

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி - 2

 

( தொடர்ச்சி.......)

நீ சொல்ற வெலயல்லாம் கேட்டப்பறம் இனிமே அதான் செய்யணும்.”

யோவ், எதுக்குய்யா வளவளன்னு பேசிக்னு. சீக்கிரமா ஒரு வெலயச் சொல்லி எடுத்துக்கினு போயா.”

யேன் போவலன்னா போலீஸ்ல சொல்லிருவியா?”

நேற்று வாழ்ந்தவர்கள் - குறுநாவல் - பகுதி 3

(தொடர்ச்சி......) 


த்ச்...எல்லாம் எனக்குத் தெரியும்பா. நா சொல்றத கேளு.”

மாமா.”

அவளால ஒனக்கு சதாகாலமும் இம்சயாத்தான் போச்சே தவிர நிம்மதியே இல்லை. வாழ்நாளு பூராவும் ஒன்ன நிம்மதியில்லாம  அடிச்சிட்டன். அப்பா பார்த்தசாரதி தயவு செஞ்சி என்ன மன்னிச்சிடுப்பா.”

மாமா.”

Monday, 11 May 2026

தனுசு - குறுநாவல் - பகுதி 1

  

கடைசியில் தனுசு அண்ணனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவது தான் நல்லது என்று முடிவாகி ராமு, சுந்தரம் சித்தப்பா, கமலக்கண்ணன் மாமா எல்லாரும் ஒரு டாக்சியில் ஏற்றிக் கொண்டு போய் படாதபாடு பட்டு சேர்த்தபிறகு திரும்பினார்கள்

தனுசு - குறுநாவல் - பகுதி 2

ப்ளாக் நெம்பர் சொல்லி பேஷன்ட் பெயர் சரிபார்த்து அறை அடையாளம் தெரிந்து கொண்டு நடந்தவனுக்கு எதிரில் குறுக்கும் நெடுக்குமாய் அலையும் பைத்தியங்களைப் பார்க்க மேலும்மேலும் பயத்தில் மனம் நடுங்கியது ராமுவுக்கு. சட்டென்று திரும்பிப் போய்விடலாமா என்று தோன்றியது. மனசின் நடுக்கத்தைச் சமாளிக்க எங்கேயும் பார்க்காமல் தரையையே பார்த்து நடந்தான். குறிப்பிட்ட அடையாளமிட்ட அறையில் தனுசு அண்ணன் மூலையில் போர்வைச் சுருணைக்குள் கிடந்தான். ராமுவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தான்.

Sunday, 3 May 2026

நலிவு - சிறுகதை

  

அருமாத்தபுரம் ரயில்வே கேட்டுக்குப் பக்கத்தில் பாண்டிச்சேரியைப் பார்க்கிற பச்சை வர்ண கட்டிடத்தில்தான் இருதயமேரி கான்வென்ட் இருக்கிறது. போகன்வில்லாவும் நந்தியாவட்டையும் வளர்ந்திருக்கிற வாசலுக்கு மேல் சின்ன பெயர்ப்பலகை. பஸ்ஸில் போகிற எந்தப் பிரயாணியும் படிக்கிறமாதிரி பளிச்சென்றுதான் எழுதி இருக்கிறது. ஆனால் பஸ்காரன் மாத்திரம் நிறுத்துவதில்லை. கெஞ்சிப் பார்த்தால்கூட ரொம்ப தூரம் தள்ளி சுல்தான்பேட்டையில்தான்  நிற்கிறது. முனகியபடியே  லூசி  இறங்குகிறாள்.

வாசிப்பு இயக்கத்தின் கொடை

 

கும்பகோணத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களிடையில் அரசு தொடங்கிய காவேரி வாசிப்பு இயக்கம் அழுத்தமான தடத்தைப் பதித்து வருகிறது. பாடநூல்களுக்கு அப்பால் பிற இலக்கிய நூல்களை வாசிக்கும் ஆர்வத்தையும் சொந்தமாக எழுதும் ஆர்வத்தையும் இளம்பருவத்திலேயே மாணவச்செல்வங்களிடையில் வளர்க்கும் ஆர்வத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இப்பள்ளியில் பல இளம்படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறது. இதற்கு முன்பு வெளிவந்த ‘என் நண்பர்கள் எங்கே?’ ‘பூக்களின் அமைதி’ போன்ற நூல்களே அந்த இயக்கத்தின் வளர்ச்சியை அடையாளப்படுத்தும் சான்றுகளாக விளங்குகின்றன.

Sunday, 26 April 2026

வாசிப்பும் உரையாடலும்

 

ஜெயஸ்ரீ அவர்களை முதன்முதலாகக் கடலூரில் சந்தித்து உரையாடிய சிறிது நேரத்திலேயே அவர் தம் நெஞ்சில் தேக்கிவைத்திருந்த இலக்கிய ஈடுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அன்று தமக்குப் பிடித்த சிறுகதைகளாக அவர் படித்திருந்த சில மூத்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை நினைவிலிருந்து அடுக்கிக்கொண்டே சென்றது இன்னும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.

அழுத்தமான கேள்வி

 

இரண்டாயிரமாவது ஆண்டில் அக்டோபர் மாதத்தில் கடலூரைச் சேர்ந்த நண்பர் வளவ.துரையன் தம்முடைய இலக்கிய அமைப்பின் சார்பாக என் படைப்புகளை முன்வைத்து ஒருநாள் கருத்தரங்கமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். என்னுடைய சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் சார்ந்து அவர் அமர்வுகளை ஒழுங்கு செய்திருந்தார். கடலூரைச் சேர்ந்த சில பேச்சாளர்களும் புதுச்சேரி, நெய்வேலி, விழுப்புரம் என அருகிலிருந்த நகரங்களிலிருந்து வந்திருந்த சில பேச்சாளர்களும் ஒவ்வொரு அமர்விலும் விரிவாக உரையாற்றினார்கள்.

படுக்கப்பத்து மேகநாதன் : சுதந்திர தாகமும் சாகசமும்

 

தீண்டாமை ஒழிப்புப்பணி தொடர்பான விளக்கங்களை அளிக்கவும் அரிஜன நலநிதியைத் திரட்டவும் ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தைத் திட்டமிட்ட காந்தியடிகள் 20.12.1933 அன்று சென்னைக்கு வந்து சேர்ந்தார். இரு நாட்கள் மட்டுமே சென்னையில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு ஆந்திராவுக்குச் சென்று, அங்கிருந்து மைசூருக்குச் சென்று, பிறகு மலபார் வழியாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சில நாட்கள் பயணம் செய்து, ஒரு மாதம் கழித்து இறுதியாக நாகர்கோவிலை வந்தடைந்தார்.

Sunday, 19 April 2026

வாழும் தமிழ் : நியூயார்க் இலக்கியத் திருவிழா 2026

  

அன்புள்ள நண்பருக்கு

வணக்கம். சென்னையிலிருந்து நியுயார்க் நகரத்துக்குப்  பயணம் செய்தபோது, சுனில் கிருஷ்ணன், சு.வேணுகோபால், நான் மூவரும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து உட்கார்ந்து உரையாடியபடியே பயணம் செய்யும் வகையில் எங்களுக்கு இருக்கைகள் அமைந்தன. அதை ஒரு நல்லூழ் என்றே சொல்லவேண்டும். ஆயினும் நீண்ட பயண நேரம் காரணமாக என் நெஞ்சில் ஒருவித பதற்றமும் சோர்வும் இருந்தன.

ஆனந்தமான தற்செயல்

 

காகா காலேல்கர் காந்தியடிகளின் உற்ற நண்பர். காந்தியடிகளோடு இணைந்து சபர்மதி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். அவர் தொடங்கிய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைத்தண்டனை பெற்றவர்.  மக்களுக்குத் தொண்டாற்றியபடியே எழுத்தாளராகவும் விளங்கியவர்.

Sunday, 12 April 2026

சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும்

 

ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதியிருந்தாலும் அவை இப்போதுதான் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

தியாக வாழ்க்கை

 

மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவெய்தி சில மாதங்கள் முடிந்துவிட்டன. அவருடைய நூற்றாண்டையொட்டி ஒருநாள் நிகழ்ச்சியொன்றை நடத்தவேண்டும் என்னும் நெடுநாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு காலச்சுவட்டின் உதவியோடு சமீபத்தில் கனிந்துவந்தது. நூற்றாண்டு நிகழ்ச்சியை 12.03.2026  அன்று சென்னையில் செல்லம்மாள் கல்லூரியில் நடத்துவது என நாள் குறித்துவிட்டு மற்ற வேலைகளில் இறங்கினேன்.

Sunday, 29 March 2026

சரஸ்வதி ராம்நாத் - புதிய பார்வை இதழில் வெளிவந்த நேர்காணல்

 

மொழி பெயர்ப்புகளுக்குரிய

மரியாதையோ கவனிப்போ தமிழில் இல்லை

 

சந்திப்பு : பாவண்ணன்.

 

சரஸ்வதி ராம்நாத் அவர்கள் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக சிறந்த மொழி பெயர்ப்பாளராகத் தமிழ்ச் சூழலில் இயங்கி வருபவர் சரஸ்வதி ராம்நாத். மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும்

 

ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதியிருந்தாலும் அவை இப்போதுதான் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

Sunday, 22 March 2026

சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டு விழா

 

எழுத்தையே தன் தவமாகக் கொண்ட சரஸ்வதி ராம்நாத் அவர்கள், அமராவதி நதிக்கரையோரத்தில் உள்ள தாராபுரம் என்னும் ஊரில் 1925ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர் விஸ்வநாத ஐயர், நாமகிரி அம்மாள். மருத்துவராகப் பணி புரிந்து வந்த விஸ்வநாத ஐயர் காந்தியடிகளின் பாதையில் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். அவர் காந்தியடிகள் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்டிருந்தார்.

பெங்களூரு உலகத் திரைப்படவிழா - 2026 (பகுதி 1)

 

பதினேழாவது உலகத் திரைப்பட விழா பெங்களூரு மாநகரில் 29.01.2026 முதல் 06.02.2026 வரை லூலு மால் என்னும் வணிக வளாகத் திரையரங்குகளில் நடைபெற்றது. முதல்நாள் தொடக்கவிழா மட்டுமே நிகழ்ந்தது. அடுத்தநாள் காலையிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

பெங்களூரு உலகத் திரைப்படவிழா - 2026 - (பகுதி 2)

 

இன்னொரு குறிப்பிடத்தக்க படம் ’இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடெண்ட்’. பெர்சிய மொழிப்படம். ஜாஃபர் பனாஹி என்னும் இயக்குநர் இயக்கிய படம். ஈரானிய அரசைத் தொடர்ந்து விமர்சிப்பவர் என்பதால் பல முறை சிறைத்தண்டனை அனுபவித்தவர் அவர்.

Sunday, 15 March 2026

வெளிச்சமும் இருளும்

 

பைபிளில் உள்ள பழைய ஏற்பாடு ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம் என முப்பத்தொன்பது பிரிவுகளைக் கொண்ட பெருந்தொகுதியாகும். ஒவ்வொரு பிரிவிலும் ஏராளமான உட்பிரிவுகள் உள்ளன. அவற்றில் அன்று வாழ்ந்த மனிதர்களின் வரலாறாக, ஏராளமான கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் விரிந்துசெல்லும் போக்கில் மானுட வாழ்வில் தற்செயலாக தேவன் வெளிப்படும் தருணத்தை உணர்த்துகிறது. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் அமைந்திருக்கும் உறவின் நுட்பத்தையும் ஆழத்தையும் வாசிப்பவர்களின் நெஞ்சில் அழுத்தமாகப் பதிவு செய்கின்றது.  

டி.எஸ்.சொக்கலிங்கம்: சொற்கோட்டம் இல்லாத மாமனிதர்

 

இந்தியாவில் நிரந்தரமாகத் தங்கி, வாழ்நாள் முழுதும் தாய்நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்கிற எண்ணத்தோடு தென்னாப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு வந்த காந்தியடிகள் தம் மனைவி கஸ்தூர் பாவுடன் 09.01.1915 அன்று பம்பாயில் வந்திறங்கினார். பிறகு, நாட்டு நிலைமையை நேரில் கண்டறியும் பொருட்டு, கோகலேயின் ஆலோசனையை ஏற்று, குஜராத்திய வழியில் சட்டையும் தலைப்பாகையும் பஞ்சகச்சமாக வைத்துக் கட்டிய வேட்டியும் அணிந்துகொண்டு இந்தியாவெங்கும் சுற்றுப்பயணம் செய்தார்.  

Sunday, 8 March 2026

அரங்கசாமி ராஜா : கல்மேல் எழுத்தான வாழ்க்கை

 

1920ஆம் ஆண்டில் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமைப் போராட்டம் சாதி, மதம், இனம், மொழி என எல்லா வேறுபாடுகளையும் கடந்து  மக்களை ஒன்றிணைத்தது. ‘காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டம் மிகமிக அறிவீனமான திட்டமாகும்’’ என வைசிராய் ரீடிங் பிரபுவின் கூற்றை மக்கள் பொய்யாக்கினார். சூறாவளிச்சுழலென எங்கும் நிற்காமல் காந்தியடிகள் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து மக்களிடையில் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கியத்துவத்தை  வலியுறுத்தி உரையாடியபடி இருந்தார். நீதிமன்றங்களை விலக்குவது, சட்டமன்றங்களை விலக்குவது, வெளிநாட்டுத்துணிகளை விலக்குவது ஆகிய மூன்று விலக்குகளும் அவருடைய தாரகமந்திரங்களாக இருந்தன.

விசித்திரமும் மகத்துவமும்

 

கடந்த பத்தாண்டுகளில் கனவில் தொலைந்தவன், காந்தியும் பகத்சிங்கும், இந்தியா என்கிற கருத்தாக்கம், மகாராஜாவின் பயணங்கள், சமத்துவ நோக்கிய இயக்கம், புத்த ஜாதகக்கதைகள் என பல்வேறு வகைமை சார்ந்த நூல்களை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்த அக்களூர் இரவி சமீபத்தில் வெளிவந்த ரதியின் மன்மதன் என்னும் தொகுதியின் வழியாக சிறுகதையாசிரியராகவும் மலர்ந்திருக்கிறார். பசுமையான பள்ளிப்பருவ நினைவுகளும் கிராமத்து மனிதர்களைப்பற்றிய நினைவுகளும் அவரை சிறுகதை முயற்சிகளில் ஈடுபடத் தூண்டியிருக்கின்றன.

Sunday, 1 March 2026

காலம் - சிறுகதை

 தத்தக்கா புத்தக்கா என்று மீனா நடக்க ஆரம்பித்ததிலிருந்தே தெருவிலிறங்கிவிடாமல் அவளைக் கவனித்துக்கொள்ளும்படி சாவித்திரியிடம் சொல்லிவைத்திருந்தேன். பத்தடிக்குப் பத்தடி வாடகை வீடு இது. ஒரு மூலையில் சமையல்; ஒரு மூலையில் குளியல்; ஒரு மூலையில் படுக்கை; மிச்ச இடம் புழங்க என்பதுதான் எங்கள் விதி. இந்தப் புழங்குமிடத்தைத் தாண்டிப் பழகுவதற்காக தெருவில் மீனா இறங்கிவிடப் போகிறாளே என்ற பயத்தால்தான் ஆரம்பத்திலேயே எச்சரிக்கையாகச் சொல்லியிருந்தேன். தெருவில் சதா நேரமும் வண்டிகள் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறதால்தான் இதைக்கூடச் சொல்லவேண்டியிருந்தது.

நமக்குக் கிடைத்த பரிசு

 

’யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இடம்பெற்றிருக்கும் வரி. நாம் அனைவருமே அவ்வரியை பல இடங்களில் கேட்டிருப்போம். நாமே பல இடங்களில் நம்மை அறியாமல் பழக்கத்தின் காரணமாகச் சொல்லியிருக்கவும் கூடும்.  ஆனால் உறவு வகைகளிலும் நட்பு வட்டாரங்களிலும் பொதுவாக துயரங்களைப் பகிர்ந்துகொள்கிற அளவுக்கு ஒருவரும் இன்ப நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துகொள்வதில்லை என்பதுதான் எதார்த்தம். அதற்கு, தன் இன்ப நினைவுகள் பிறருடைய நெஞ்சில் காரணமில்லாத ஏக்கங்களையும் ஏமாற்ற உணர்வுகளையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை  கூட ஒருவேளை காரணமாக இருக்கக்கூடும்.

Sunday, 22 February 2026

எளிமையும் இனிமையும்

  

சிறார்களுக்கான நான்கு பாடல் தொகுதிகளை ஏற்கனவே எழுதி வெளியிட்டிருக்கும் குருங்குளம் முத்து ராஜா, இப்போது அக்கா குருவி என்னும் தலைப்பில் ஐந்தாம் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் ஐம்பது பாடல்கள் அடங்கியுள்ளன. விளையாடிப் பொழுதுபோக்கும் குழந்தைகளின் மனநிலையையும் குறும்புகளையும் வெளிப்படுத்தும் பல பாடல்கள் இத்தொகுதியில் உள்ளன.

ஒரு மகளின் நினைவோடை

 

கடந்த நூற்றாண்டில் நவீனத்துவத்தின் பார்வையை தமிழ்ச்சிறுகதைகளுக்கு வழங்கியவர் புதுமைப்பித்தன். நாற்பத்திரண்டு ஆண்டு காலம் மட்டுமே அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோதிலும் பலவேறு வகைமைகளில் ஏறத்தாழ நூற்றியெட்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம் என பல தளங்களிலும் தொடர்ச்சியாக இயங்கியவர் அவர். இன்று, புதிதாக தமிழ்ச்சிறுகதையை வாசிக்கத் தொடங்கும் ஓர் இளம்வாசகனுக்கும் கூட நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குவதாகவும் புதுமைத்தோற்றம் அளிப்பதாகவும் அவருடைய கதைகள் அமைந்திருக்கின்றன.

Sunday, 15 February 2026

மாபெரும் அனுபவம்

  

தொகுப்பாசிரியரான கவிதா சந்திரபோஸ் இந்தத் தொகுதி உருவான விதத்தைப்பற்றித் தன் முன்னுரையில் எழுதியிருக்கும் சுருக்கமான குறிப்பு படிப்பதற்கு ஆர்வமூட்டுவதாக உள்ளது. காற்றுக்கு எல்லாத்  திசைகளும் சொந்தமாக இருப்பதுபோல படிக்கத் தொடங்கும் பழக்கத்துக்கும் எல்லாத் திசைகளும் சொந்தமானவையே. எந்தத் திசையிலிருந்து வேண்டுமானாலும் யார் வழியாக வேண்டுமானாலும் உருவாகி ஒட்டிக்கொள்ளும். கவிதாவின் பயணமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.

விளக்கு விருது விழா - 2026

  

சென்ற நூற்றாண்டில் தொண்ணூறுகளில் தமிழகத்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற இலக்கிய நண்பர்கள் இணைந்து ’விளக்கு’ என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். அந்த அமைப்பின் வழியாக 1995ஆம் ஆண்டு முதல் புதுமைப்பித்தன் நினைவாக இலக்கியத்தில் மிகச்சிறப்பாகப் பங்காற்றியவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக விளக்கு விருதை வழங்கிவருகிறார்கள்.

Sunday, 8 February 2026

தரையில் ஒரு நட்சத்திரம்

 

மிகவும் குறைந்த வரிகளை உடைய பாடல்கள் தமிழில் சங்க இலக்கிய காலத்திலேயே உருவாகிவிட்டன. குறுந்தொகையில் பல பாடல்கள் நான்கு வரிகள் முதல் எட்டு வரிகள் வரை உள்ளவை. ஐங்குறுநூற்றில் மூன்று முதல் ஆறு வரிகள் வரை உடைய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில் நான்கு வரிகளை உடைய பல பாடல்கள் இருக்கின்றன. குறைந்த வரிகள் கொண்டவை என்றபோதும் அப்பாடலில் ஒரு பக்கத்தில் நிலக்காட்சியும் இன்னொரு பக்கத்தில் அதற்கு இணையான மனக்காட்சியும் இயல்பாக எழுந்து நிற்கின்றன. ஒவ்வொரு சொல்லிலும் கவிதையின் மையத்தை நோக்கி ஈர்க்கும் ஆற்றல் பொதிந்திருக்கிறது. அத்தகு பாடல்களை வாசிக்கும்போதெல்லாம் நம் மனம் அடையும் இன்பத்துக்கு அளவே இல்லை.

வாசிப்பதனால் ஆய பயன்

 

கொலம்பியாவைச் சேர்ந்த லூயிஸ் சொரியானோ என்னும் பள்ளி ஆசிரியரைப்பற்றிய ஒரு குறிப்பை சமீபத்தில் படித்தேன். இளமைப் பருவத்திலிருந்தே புத்தக வாசிப்பில்  சொரியானோவுக்கு ஆர்வம் இருந்தது.  அவர் வசித்த கிராமத்தில் நூலகம் இல்லை. அதனால் பக்கத்தில் உள்ள நகரத்துக்குச் சென்று நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படித்தார்.  தினந்தோறும் பள்ளிக்கும் செல்லவேண்டி இருந்ததால் அவரால் நூலகத்துக்குச் செல்ல முடியவில்லை. அதனால் விடுப்பு நாட்களில் மட்டுமே நூலகத்துக்குச் சென்று படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டார்.

Monday, 2 February 2026

ஒரு முடிவுக்குப் பிறகு - சிறுகதை

 

காற்று குளிர்ச்சியாக இருந்தது. எனினும் உடல்முழுக்க கசகசவென்று வியர்வை துளிர்ப்பதை உணர்ந்தாள் மாலதி. அலங்கரிக்கப்பட்ட விளக்குகளுடன் மரங்கள் நிற்கும் கோலம் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அங்கங்கே ஏற்பாடு செய்யப்பட்ட மேசைகளில் அருந்திமுடித்த மதுக்கோப்பைகளும் பாட்டில்களும் உண்டு முடித்த இறைச்சித் துண்டுகளும் கலைந்துகிடந்தன. நாற்காலிகளிலும் சோபாக்களிலும் நண்பர்கள் அடங்கிய குரலில் பேசியபடியும் சிரித்தபடியும் இருந்தார்கள். ஒரு கையில் அருந்தி முடிக்காத மதுக்கோப்பையும் மறுகையில் சிகரெட்டுமாக ஒருசிலர் மட்டும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சிரித்த முகத்துடன் எல்லாரோடும் சில நிமிடங்கள் பேசியவண்ணம் வலம்வந்து கொண்டிருந்தான் ராகவன். அவனுடைய சகஜநிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தோழிகளிடமிருந்து விலகி ஒரு மரத்தடிக்கு வந்து நின்றாள் மாலதி.

நினைவுகளின் ஊர்வலம்

 

’நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’ என்று தொடங்கும் பாரதியாரின் பாடலை அனைவரும் படித்திருக்கக்கூடும். அப்பாடலில் ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?’ என அவரே ஒரு கேள்வியை எழுப்பி அடுக்கடுக்காகப் பல வாதங்களை முன்வைத்து, இறுதியாக ‘காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை. காண்பது சக்தியாம், இந்தக் காட்சி நித்தியமாம்’ என்று ஒரு விடையைக் கூறி முடிக்கிறார். ஞானத்துக்கு விளக்கமாக இதைவிட எளிமையாக இன்னொருவர் சொல்லிவிடமுடியாது.

Sunday, 25 January 2026

எங்கள் பாட்டி எங்கள் தாத்தா - சில பாடல்கள்

 

சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி பாரதி புத்தகாலய வழியாக வெளிவந்திருக்கும்எங்கள் பாட்டி எங்கள் தாத்தாதொகுதியிலிருந்து சில பாடல்கள்.

வரலாற்றுக் கடமை

 

கடந்த சில ஆண்டுகளில் ’சர்வோதயம் மலர்கிறது’ இதழிலும் பிற இதழ்களிலும் அவ்வப்போது எழுதிய பதினான்கு கட்டுரைகளைத் தொகுத்து பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் இப்போது ஒரு புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் வெளிவந்த காலத்திலேயே நான் படித்திருக்கிறேன் என்றபோதும் ஒரு நூல் வடிவில் இப்போது அனைத்துக் கட்டுரைகளையும் ஒருங்கே படிப்பது நல்ல அனுபவமாக இருந்தது. நண்பர் விஜயராமலிங்கம் தம் மனத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு எந்த அளவுக்கு இடமளித்திருக்கிறார் என்பதை இந்த நூல் வழியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

நெருக்கடியின் கோட்டோவியங்கள்

 

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு கவிஞராக எழுத்துலகில் அடியெடுத்துவைத்தவர் விஜயானந்தலட்சுமி. அதைத் தொடர்ந்து   இன்றைய இணையகால வாசகர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்ளும் வகையில் கலித்தொகை, மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு அழகான விளக்கநூல்களை எழுதினார். தேனி என்னும் நகரத்தின் வெவ்வேறு பரிமாணங்களை அழகான சொற்சித்திரங்களாகத் தீட்டி நூலாக வெளியிட்டார். இவான் துர்கனேவ், ஓ ஹென்றி ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவ்வாறாக, தன் படைப்புலகத்தை மெல்ல மெல்ல விரிவாக்கிக்கொண்டே செல்லும் விஜயானந்தலட்சுமி இப்போது தன் முதல் சிறுகதைத்தொகுதியை வெளியிட்டிருக்கிறார்.

Monday, 19 January 2026

எங்கள் பாட்டி எங்கள் தாத்தா - சிறார் பாடல் தொகுதிக்கான முன்னுரை

                                                             

நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் ஓர் அழகான ஏரி இருக்கிறது. அதன் கரையைச் சுற்றி பத்தடி அகலத்துக்கு அச்சுக்கல் பதிக்கப்பட்ட நடைபாதை உண்டு. நடப்பதற்குச் எவ்விதமான சிரமமும் இல்லாத பாதை.

புத்தகக்காட்சி என்னும் புனித யாத்திரை

 

சென்னை புத்தகக் கண்காட்சி என்பது எழுத்தாளர்களும் வாசகர்களும் பங்கேற்றுக் களிக்கவேண்டிய ஒரு திருவிழா. ஒரு புத்தகத்தைக் கூட வாங்காவிட்டாலும் இரு புறங்களிலும் புத்தகக்கடைகளை மட்டுமே கொண்ட  பாதையின் ஊடே நடந்துசெல்வது ஒரு பேரனுபவம். மேகங்களுக்கு நடுவில் மிதந்துசெல்வதுபோன்ற ஓர் அனுபவத்தை அளிக்கும் இடம். 

வாசிப்புப்பழக்கம் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா?

  

வாசிப்பு குறைந்துவிட்டது என்னும் கூற்று ஒரு புனைவு. உண்மையில் கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் வாசிப்பு பெருகியுள்ளதாகவே நான் உணர்கிறேன். முன்பெல்லாம் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இலக்கியக்கூட்டங்கள் அபூர்வமாகவே நிகழ்ந்து வந்தன

Monday, 12 January 2026

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - முன்னுரை


கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் இந்தியாவின் அஞ்சல் துறையும் தொலைபேசித்துறையும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே துறையாகச் செயல்படத் தொடங்கியது. ஒவ்வொரு ஊரிலும் பயன்பாட்டில் இருக்கும் தொலைபேசி இணைப்புகள் பழுதின்றி இயங்கும் வண்ணம் பராமரிப்பதும் புதிய இணைப்புகளை வழங்குவதும் அதன் முதன்மை வேலையாக இருந்தது. அதே சமயத்தில் அடுத்தடுத்து உள்ள இரு நகரங்களை கேபிள் வழியாக இணைத்துத் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் அதன் இலக்காக இருந்தது.

நன்றிக்கடன்

 

தமிழ் மொழியில் வற்றாத படைப்பூக்கத்துடன் எழுதப்பட்டிருக்கும் சங்க இலக்கியம், இலக்கண நூல்கள், காப்பியங்கள், நவீன கவிதை, உரைநடை, ஆய்வு என விரிந்துகிடக்கும் பல்வேறு துறைகளைக் கற்றுத் தேர்ந்து,  அவற்றில் தனக்குகந்த களத்தைத் தேர்ந்தெடுத்து அதன் வழியாக தன் முழு ஆற்றலை வெளிப்படுத்தும் படைப்பாளர்கள் பலர் நம் சூழலில் அன்றும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அது ஒரு வகையான தமிழ்த்தொண்டு. சங்ககாலம் முதல் எழுதப்பட்ட படைப்புகளையெல்லாம் தன் சமகாலத்தில் வாழும் மக்களிடையில் அறிமுகப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக அறிமுகக்கட்டுரைகள் எழுதியும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியும் பரப்பிவந்த ஆளுமைகளும் அன்றும் வாழ்ந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அது இன்னொரு வகையான தமிழ்த்தொண்டு.

Monday, 5 January 2026

ஆறாம் அறிவின் அலங்கோலம்

 

புறநானூற்றில் மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியை முன்வைத்து ஒளவையார் எழுதிய பத்து பாடல்கள் உள்ளன. எல்லாமே அதியமானின் புகழ், வீரம், வள்ளல் குணம் ஆகியவற்றை முன்வைத்து அவர் பாடியவை. அவற்றில் அதியமானுடைய வீரத்தை முன்வைத்து ஒளவையார் எழுதிய பாடல் மிகமுக்கியமானது.

சத்தியமும் விடுதலையும்

 

கடந்த காலத்தைப்பற்றிய நினைவுச்சித்திரங்களையும் அனுபவக்குறிப்புகளையும் குறைவான சொற்களில் செறிவாக எழுதும் ஆற்றல் நிறைந்தவர் தஞ்சாவூர்க் கவிராயர். அவருடைய பல கட்டுரைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதொரு முக்கியமான செய்தி அடங்கியிருக்கும். தமிழுக்கு வளம் சேர்க்கக்கூடிய கட்டுரையாசிரியர்களில் அவர் முக்கியமானவர்.