இந்திரா நகரின் பேரழகே அதன் செறிவான வடிவமைப்புதான். ஒவ்வொரு குறுக்குத்தெருவும் முடியும் இடத்தில் ஒவ்வொரு பூங்காவைப் பார்க்கலாம். பல நேரங்களில் எந்தத் தெரு, எந்தப் பூங்கா என்பதே குழப்பமாக இருக்கும். அந்த அளவுக்கு ஒவ்வொன்றும் ஒரே மாதிரியான தோற்றத்துடன் காட்சியளிக்கும். எல்லாப் பூங்காக்களும் குறைந்தபட்சமாக இருபதாயிரம் சதுர அடியிலிருந்து அதிகபட்சமாக நாற்பதாயிரம் சதுர அடி வரைக்கும் நீண்டு விரிந்தவை. பதின்மூன்றாம் குறுக்குத்தெருக்கும் பதினைந்தாம் குறுக்குத்தெருக்கும் இடையில் மூன்று பூங்காக்கள் உண்டு. அவற்றில் முதலில் உருவானது பிரியதர்ஷினி அடுக்ககத்துக்கு எதிரில் உள்ள பூங்கா. எழுபதுகளின் இறுதியில் உருவானதாக பேசிக்கொள்வார்கள். நான் எண்பதுகளின் இறுதியில் வந்தபோது அந்தப் பூங்கா ஒரு சின்ன லால்பாக் போல எனக்குக் காட்சியளித்தது.