‘எங்கே நிறுத்திக்கொள்வது என்று ஒருவன் தெரிந்துகொள்ளும்போது அவன் அழிவற்றவன் ஆகிறான்’ என்பது தாவோ தே ஜிங் நூலில் இடம்பெறக்கூடிய ஒரு வரி. சீன மொழியில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் முன்பாக எழுதப்பட்ட வரி இது. பல தளங்களில் இவ்வரியைப் பொருத்திப் பொருள்கொள்ள முடியும். சாதாரண உரையாடலில் தொடங்கி உறவு, நட்பு, விருப்பம், வெறுப்பு, ஆசை, சீற்றம் என வாழ்வின் பல்வேறு தளங்களில் இவ்வரியின் வழியாக ஒரு புதிய பொருளும் புதிய வெளிச்சமும் கிடைக்கின்றன.
ஓர் எழுத்தாளனாக, ஒரு படைப்பை எழுதுகிற ஒவ்வொரு தருணத்திலும் என் ஆழ்மனத்தில் இவ்வரி என்னைச் செலுத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு வாசகனாக, ஒரு படைப்பை மதிப்பிடவும் இவ்வரி எனக்குத் துணையாக உள்ளது. ஒரு படைப்பின் தொடக்கம் என்பது அப்படைப்பை எழுதும் படைப்பாளி அடையும் உத்வேகத்தின் அடிப்படையில் எந்தக் கோணத்திலிருந்துவேண்டுமானாலும் அமையலாம். அது படைப்பாளியின் சுதந்திரம். அந்தச் சுதந்திரத்தில் எந்த வாசகனுக்கும் இடமில்லை. ஆனால் படைப்பின் முடிவுப்புள்ளி என்பது மிகவும் முக்கியம். எங்கே நிறுத்தவேண்டும் என்பதை படைப்பின் போக்கு மானசிகமாக உணர்த்திவிடும். அதைக் கடந்து எழுதப்படும் சொற்கள் ஒரு படைப்புக்குச் சுமையாக மாறும். இந்த அளவுகோல் ஒரு படைப்பை மதிப்பிட நமக்குக் கிடைத்திருக்கும் மிகச்சிறந்த கருவியாகும்.