சிறுவயதில் வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்படுவதை நினைத்தாலே மனத்துக்குக் கொண்டாட்டமாக இருக்கும். ஒன்பது மணிக்கு கொடிவணக்கத்தோடு எங்கள் பள்ளிக்கூடம் தொடங்கும். ஆனால் எட்டரைக்குள் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் முனைப்பாக இருப்போம். அந்த அரைமணி நேரம் எங்களுக்கு விளையாட்டு நேரம். உடல்முழுதும் இறக்கைகள் முளைத்ததுபோல மைதானத்தில் சுற்றிச்சுற்றி பறந்தபடியே இருப்போம். கொடிவணக்கத்துக்கு அழைக்கும் மணியோசை ஒலிக்கும் கணம் வரைக்கும் மரத்தடிகளில் விருப்பம்போல ஆடித் தீர்ப்போம். ஓடிப் பிடிப்பதிலிருந்து தாண்டிக் குதிப்பது வரைக்கும் எங்களுக்குத் தெரிந்த எல்லா விளையாட்டுகளையும் ஆடுவோம்.