Home

Sunday 31 July 2022

ஒரு கனவு - பாவண்ணன் சிறுகதைகள் முதல் தொகுதிக்கான முன்னுரை

 

சிறுவயதில் வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்படுவதை நினைத்தாலே மனத்துக்குக் கொண்டாட்டமாக இருக்கும். ஒன்பது மணிக்கு கொடிவணக்கத்தோடு எங்கள் பள்ளிக்கூடம் தொடங்கும். ஆனால் எட்டரைக்குள் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் முனைப்பாக இருப்போம். அந்த அரைமணி நேரம் எங்களுக்கு விளையாட்டு நேரம். உடல்முழுதும் இறக்கைகள் முளைத்ததுபோல மைதானத்தில் சுற்றிச்சுற்றி பறந்தபடியே இருப்போம். கொடிவணக்கத்துக்கு அழைக்கும் மணியோசை ஒலிக்கும் கணம் வரைக்கும் மரத்தடிகளில் விருப்பம்போல ஆடித் தீர்ப்போம். ஓடிப் பிடிப்பதிலிருந்து தாண்டிக் குதிப்பது வரைக்கும் எங்களுக்குத் தெரிந்த எல்லா விளையாட்டுகளையும் ஆடுவோம்.

எளிமையும் இலட்சியமும் – ஆகஸ்டு 15 நாவல் அறிமுகம்

 

இந்தியா சுதந்திரநாடாக மலர்ந்து அறுபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரப்போராட்டத்தில் நேரிடையாக ஈடுபட்ட தலைமுறையும் கண்ணாரக் கண்ட தலைமுறையும் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. பொதுத்தேர்தல் வழியாக நம்மை ஆள்வோரை நாமே தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் பொறுப்பும் நமக்குக் கிடைத்துள்ளன. நம்முடைய தேர்வின் வழியாக நம்மை ஆளும் பிரதமரையும் அமைச்சர்களையும் நாம் பலமுறை தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்துள்ளோம். மாபெரும் தலைவர்களும் வழிகாட்டிகளும் அவர்களுடைய பிறந்தநாள் அன்றும் இறந்தநாள் அன்றும் மட்டும் நினைக்கப்படுகிறவர்களாக இன்றைய சூழல் மாறிவிட்டது. சுதந்திரப்போராட்டத்தைப்பற்றி புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொள்ளும் புதிய தலைமுறையினர் தோன்றியுள்ளார்கள். சுதந்திரப்போராட்டத் தலைவர்களின் பெயர்களை படம்பார்த்துக்கூட சொல்லத் தெரியாத அளவுக்கு காலம் மாறிவிட்டது.  ஆயினும் ஓர் இலட்சியவாதியைப்பற்றிய செய்தி இன்றும்கூட நம் மனசாட்சியைத் தொட்டு அசைக்கும் சக்தியுள்ளதாகவே இருக்கிறது.  ஒரு மின்னலைப்போல அது நம்மைத் தாக்கித் திணறடித்துவிட்டு மறைந்துபோகிறது.

Sunday 24 July 2022

மரணம் - சிறுகதை

 

 சுடுகாட்டைச் சுற்றி ஓடிப் பழகுவதுதான் என் அதிகாலைப் பயிற்சியாய் இருந்தது. சுடுகாடு தவிர வேறு விஸ்தாரமான இடம் எதுவுமே இல்லாத ஊர் அது. எனக்கோ ஓட்டப்பயிற்சி மேல் அளவுகடந்த மோகம். கட்டுக்கட்டாய்த் திரண்டிருக்கும் உடல்களைக் கொண்ட விளம்பரங்கள் என்னைக் கூவி அழைத்த நாள்கள் அவை. “காலங்காத்தால சுடுகாட்டு மொகத்துலதான் முழிக்கணுமாஎன்கிற அம்மாவின் வார்த்தைகளை அசட்டை செய்தேன். என் ஆரோக்கியமான லட்சியத்தை அன்பின் பிடிக்குள் தள்ளி நொறுக்க நினைக்கும் அவள் திட்டத்துக்குக் கிஞ்சித்தும் இடம் தரவில்லை. இத்தனைக்கும் காலை நேரங்களில் அவள்தான் என்னை எழுப்பிவந்தாள். வாசலில் அவள் சாண நீர் தெளித்து முடிப்பதற்கும் நான் ஷுக்களை மாட்டிக்கொண்டு இறங்குவதற்கும் சரியாய் இருக்கும். அவள் முகம் போகும் போக்கு அத்தனை சந்தோஷத்துக்குரியதாய் இருக்காது. ஆனாலும் கவனிக்காததுபோல புறப்பட்டு விடுவேன். நெகிழத் தொடங்கும் முதல் தருணத்திலேயே என் உயிர் லட்சியத்தை கைகழுவ வேண்டியிருக்கும் என்பது தெரிந்திருந்தது.

Saturday 23 July 2022

இறையடியான் : எல்லோரும் விரும்பும் இனிய ஆளுமை

  

பெங்களூருக்குக் குடிவந்த புதிதில் ஒவ்வொரு நாளும் மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பிய பிறகு, நானும் காவ்யா சண்முகசுந்தரமும் சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்போம். விடுமுறை தினங்களில் அந்த உரையாடல் நேரம் மணிக்கணக்கில் நீண்டுபோகும். ஒருமுறை விடுமுறையில் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தபோது, கூடத்தில் அவருடன் இன்னொருவர் உரையாடிக்கொண்டிருந்தார். மெலிந்த உருவம். நல்ல உயரம். கண்களில் கனிவு குடிகொண்டிருந்தது. என் அப்பா வயதிருக்கும் என்று தோன்றியது.

Sunday 17 July 2022

தளை - சிறுகதை

 

ஸ்டேஷனுக்குள் வண்டி நுழைந்தது. வேகம் குறையத் தொடங்கிய போதே சுகன்யாவைக் கண்டுபிடிக்கத் தயாரானேன். எதிர்பார்ப்பும் பயமும் கலந்த பரவசநிலை. திடுமென இதயத்துடிப்பு அதிகமானது.

இக்கின்பாதம்ஸ் கடை பார்வைக்கு முழுசாய்த் தெரிந்தது. ஒரு பக்கம் புத்தகத் தொங்கல். மறுபுறம் பழக்குலைகள். நடுவில் குளிர்பானங்களின் வரிசை. அதன் அருகில் இருந்த கல்பெஞ்சில்தான் சுகன்யாகவை வந்து காத்திருக்கச் சொல்லி எழுதியிருந்தேன். கிழிசல் அணிந்த இரண்டு சிறுவர்கள் காகிதத் தம்ளர்களைச் சேகரித்து எண்ணிக்கொண்டிருந்த காட்சிதான் அங்கே தெரிந்தது. சுகன்யா இல்லை. ஏமாற்றம் நெஞ்சை அடைத்தது. மூளையில் ஒரு நரம்பு துடித்து அடங்கியது. சட்டென எடை பார்க்கும் மிஷின் முன் நின்றிருந்த ஓர் உருவம் பார்வையில் விழுந்தது. துரதிருஷ்டவசமாய்ப் பின்பக்கம்தான் தெரிந்தது. அந்த வெளிர் நிறப்புடைவை அவளுடையதுதான்.

பேசுதல் - சிறுகதை


‘பத்து நாளக்கி எவ்ளோத்தம் வேணுமோ அவ்ளோத்தம் எடுத்துக்க சுசிலா. என்னத்துக்கு எல்லாத்தயும் எடுத்துக்னும் போயி மறுபடியும் சொமந்துக்னு வரணும். கொஞ்சமாக எடுத்துக்கயேன்’

ரொம்பவும் சாதாரணமாகத்தான் சொன்னான் துளசிங்கம். சொல்லி முடிக்கிற தருணத்தில் கூட மனைவியோடு பிரயாணப்படுகிற சந்தோஷமும், தனக்குப் பிரியமான ஊர்க்குப் போய் நிறைய வருடங்களாய் காணாத ஜனங்களைக் காணப் போகிற சந்தோஷமும், தனது புது மனைவியை அவர்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தப் போகிற கூச்சமுடனான சந்தோஷமும் புரள்கிற மனசோடுதான் இருந்தான். புருஷனோடு கிளம்புகிற உற்சாகமும் சந்தோஷமுமாய் அவள் இருக்கிற சந்தர்ப்பத்தில்தான் சொன்னான்.

Wednesday 13 July 2022

பாதாள உலகமும் பாதை மாறியவர்களும்

  

பூமிக்குக் கீழே உள்ளதாக நாம் நம்பும் ஏழு உலகங்களில் ஒன்று பாதாளம். அந்தப் பாதாளத்தில் இரக்கம் இல்லை. கருணை இல்லை. யாரோடும் ஒட்டுதலோ உறவோ இல்லை. யாரும் அங்கே மனிதர்களே இல்லை. மனித உருவில் விலங்குகளே வாழ்கின்றன. ஒவ்வொருவரும் அடுத்தவரின் உயிரையே உண்ணுபவர்கள். வக்கிரம் கொண்டவர்கள். நம்மிடையில் உலவும் பாதாளத்தைப்பற்றிய கற்பனைகள் இப்படித்தான் உள்ளன. ஆனால், உண்மையில் பாதாளம் பூமிக்கு அடியில் இல்லை.  பூமியின் மேற்புறத்திலேயே உள்ளது. கருணையும் இரக்கமும் இல்லாத இடமெல்லாம் பாதாளமே. மக்களின் மதிப்பைப் பெறமுடியாமல் ஒதுங்கியிருக்கும் இடமனைத்தும் பாதாளமே. பாதாளம் இல்லாத ஊரே இல்லை.

தாய்மையின் சாயல்

 

      சிற்சில சமயங்களில் நள்ளிரவில் திடீரென தூக்கம் கலைந்துவிடும். அதுவரை காட்சிப்படங்களாக நகர்ந்துகொண்டிருந்த கனவு சட்டென அறுந்துவிடும். கனவில் நிகழ்ந்தது என்ன என்பதே புரியாது. எவ்வளவு யோசித்தாலும் ஒரு காட்சியைக் கூட நினைவிலிருந்து மீட்டெடுக்கமுடியாது.  அதற்குப் பிறகு தூங்கவும் பிடிக்காமல் எழுந்து சத்தம் காட்டாமல் மாடிக்குச் சென்று வானத்தைப் பார்த்தபடி நின்றிருப்பேன். இத்தகு அனுபவம் ஒரு சிலருக்காவது ஏற்பட்டிருக்கும்.

Sunday 3 July 2022

தொண்டு என்னும் வாழ்க்கைநெறி

        

இந்திய வரலாற்றில் ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற போராட்டத்தை  இருபெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். காந்தியடிகளின் வருகைக்கு முற்பட்ட காலம் என்பது ஒரு பகுதி.  அவர் வருகைக்குப் பிறகான காலம் என்பது அடுத்த பகுதி. காந்தியடிகளே சுதந்திரப்போராட்டத்துக்கு ஒரு வடிவத்தையும் நோக்கத்தையும் வழிமுறையையும் வகுத்தவர். சத்தியாகிரகமும் அகிம்சையும் அவருடைய வழிமுறையாக இருந்தன. அப்போராட்டம் எங்கும் வெறுப்பை விதைக்கவில்லை. மாறாக தன் உரிமைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்வைப்பதாக இருந்தன. போராட்டத்தின் வழியில் அவர் வன்முறையை முற்றிலும் விலக்கிவைத்தார்.

அரைநூற்றாண்டு வரலாற்றின் அடையாளம்

  

சாதிவேற்றுமைகளால் மானுடம் நிலைகுலையும் வெவ்வேறு தருணங்களை அரைநூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக தம் படைப்புகளில் பதிவு செய்த இலங்கை எழுத்தாளர் தெணியான் சமீபத்தில் 22.05.2022 அன்று மறைந்துவிட்டார். அவர் தன் இறுதிக்காலத்தில் படைப்பெழுத்துகளைவிட தம் வாழ்வனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார். இலங்கையில் ஞானம் என்னும் இதழில் தொடர்ச்சியாக தம் இளமைப்பருவ நினைவுகளைப் பதிவு செய்துவந்தார். தம் பெற்றோரைப்பற்றியும் குடும்ப உறுப்பினர்களைப்பற்றியும் பள்ளிநாட்களைப்பற்றியும் ஒருசிறிதும் மிகையோ, விலக்கமோ இன்றி செறிவோடும் சுருக்கமாகவும் அவர் எழுதிய சித்திரங்கள் அனைத்தும் அற்புதமான சொல்லோவியங்கள். அக்கட்டுரைகளோடு மேலும் மூன்று கட்டுரைகளை எழுதி வாங்கி, தமிழகத்தைச் சேர்ந்த எழுத்து பதிப்பகம் வே.அலெக்ஸ் 2011இல் இன்னும் சொல்லாதவை என்னும் தலைப்பில் ஒரு தொகுதியாக வெளியிட்டார். இன்று அப்புத்தகத்தை எழுதியவரும் இல்லை. வெளியிட்டவரும் இல்லை.