Home

Saturday 21 October 2017

பெற்ற மனம்- சிபிச்செல்வனின் "அரும்பின் குறும்பு"



எங்கள் வீட்டருகே நாக்பூரைச் சேர்ந்த ஓர் இளைஞன் குடியிருந்தான். கணிப்பொறித்துறையில் ஓராண்டு விசேஷ பயிற்சிக்காக வந்து தங்கியிருந்தான். அடுத்த ஆண்டிலேயே அவனுக்கு வேலை கிடைத்தது. அதற்கடுத்த ஆண்டில் அவன் திருமணம் செய்துகொண்டான். தன் அறைக்குப் பக்கத்திலேயே அதே வீட்டு உரிமையாளருக்குச் சொந்தமான பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டான். அடுத்த ஆண்டில் அவர்கள் வீட்டில் குழந்தையின் மழலைச் சத்தம் கேட்டது. இந்திமொழியில் அவர்கள் அக்குழந்தையைக் கொஞ்சிக்கொஞ்சிப் பாடுவதையும் பேசுவதையும் மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருப்பேன். தளர்நடைபோட்டு அக்குழந்தை வாசலுக்கு வெளியே வரத் தொடங்கியதும் காலைநடைக்கு அக்குழந்தையையும் ஒரு தள்ளுவண்டியில் உட்காரவைத்துத் தள்ளிக்கொண்டு வருவான் அந்த இளைஞன். அந்தக் குழந்தைக்கு சோறு ஊட்ட கிட்டத்தட்ட ஒவ்வொரு வேளையிலும் ஒரு மணிநேரம் பிடிக்கும். சலிப்பே இல்லாமல் அவர்கள் இருவரும் அக்குழந்தையின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருப்பார்கள்.

கற்பனையும் எதார்த்தமும்- நகுலனின் கவிதை


ஒரு விடுமுறை நாளில் பூங்காவில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தேன். செவ்வக வடிவில் பூங்காவைச் சுற்றி நடையாளர்களுக்காகவென ஏற்படுத்தப்பட்டிருந்த பாதையொன்றிருந்ததுமழைக்காலத்தில் அடிக்கடி நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறும்போது பாதையில் யாராலும் நடக்கமுடிவதில்லைஏராளமான பேர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்வதுண்டு. திரும்பிச் சென்ற யாரோ ஒருவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் அன்று பாதை சீர்ப்படுத்தப்பட்டு சதுரக்கற்கள் பதிக்கும் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்ததுதொழிலாளர்களின் குழந்தைகள் அருகில் கொட்டப்பட்டிருந்த மணல்குவியலில் விளையாடிக்கொண்டிருந்தன

Sunday 8 October 2017

ஞானியின் சொல்


அன்புள்ள நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம். ஒரு கன்னடக்கவிதையோடு இந்த உரையைத் தொடங்குகிறேன். வேகவேகமாக ஒருவரைத் தேடிக்கொண்டு ஓட்டமும் நடையுமாகச் செல்லும் ஒரு பெண்ணை ஒருகணம் கற்பனை செய்துகொள்ளுங்கள். தேடல் ஒன்றையே அவள் இலக்காகக் கொண்டிருக்கிறாள். அவள் மனம் முழுக்க அப்புள்ளியிலேயே குவிந்திருக்கிறது. நாலடி எடுத்துவைப்பதற்குள் அவள் முன் பசி எழுந்துவந்து அவளைத் தடுத்து நிறுத்துகிறது. அந்தப் பசியிடம் அவள் சற்றுப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறாள். இன்னும் சில அடிகள் கடப்பதற்குள் தாகம் அவளை வாட்டத் தொடங்குகிறது. அவள் தாகத்திடமும் பொறுத்துக்கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறாள். மேலும் சில அடிகள் எடுத்துவைப்பதற்குள் உறக்கம் அவள் முன்னால் வந்து நின்று தடுக்கிறது. அவள் அதனிடமும் தன் இலக்கைப்பற்றி எடுத்துச் சொல்லி கெஞ்சி ஒதுக்கிவிட்டு பரபரப்பாக நடந்துபோகத் தொடங்குகிறாள்.

கதவு திறந்தே இருக்கிறது -அழகிய சொல்லோவியங்கள்


கர்நாடகத்தின் ஹோஸ்பெட் அழகான ஊர். தண்ணீருக்குப் பஞ்சமில்லாத ஊர். எங்கெங்கும் பச்சைப்பசேலென வயல்வெளிகளும். தோப்புகளும்  நிறைந்திருக்கும். துங்கபத்திரை அணைக்கட்டிலிருந்து பிரிந்து செல்லும் கால்வாய்கள் ஊர் எல்லையிலேயே இருபெரும் பிரிவுகளாக இரு திசைகளில் சுழித்தோடும். பெரிய கால்வாயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சின்னஞ்சிறு கால்வாய்கள் உடல்நரம்புகளென ஊரெங்கும் புகுந்தோடி எங்கோ ஒரு புள்ளியில் மீண்டும் பெரிய கால்வாயோடு இணைந்துவிடும்படி கட்டமைக்கப்பட்டிருந்தன. நகரமக்களின் நீர்த்தேவையை அந்தச் சிறுகால்வாய்கள் தீர்த்துவைத்தன. குளிக்க, துணிதுவைக்க, கால்நடைகளை நீராட்ட என எல்லாத் திசைகளிலும் தனித்தனி துறைகள் உண்டு. அவை மேலும் சிறுசிறு பிரிவுகளாகப் பிரிந்தோடி வயல்வெளிகளுக்கும் தோப்புக்கும் பாய்ந்து செல்லும். கால்வாய் ஓரமாக அமைதி தவழும் ஓரிடத்தில் நாங்கள் கூடாரமடித்துத் தங்கியிருந்தோம்.