Tuesday 30 June 2015
பண்ணும் பாடலும்
Thursday 25 June 2015
கலையைத் தேடி வந்த கௌரவம்
Tuesday 16 June 2015
மறைந்துபோன வரலாறு
நண்பரொருவருடைய வீட்டில் சில மாதங்களுக்கு முன்பாக திருடு நிகழ்ந்துவிட்டது. அவரைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம். அலங்கோலமாகக் கலைந்து கிடந்தது அவர் வீடு. களவுபோன பொருட்களின் விவரங்களை விசாரித்து பட்டியல் தயாரித்து அப்போதுதான் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றார்கள் காவலர்கள். அந்தப் பட்டியலில் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் முதல் குழந்தைக்கு பால் கொடுக்க உதவும் ஃபீடிங் பாட்டில்வரை இருந்தது. பெரிய பொருட்கள் களவாடப்பட்டதைக்கூட பொறுமையாகப் படித்த நண்பர்கள் ஃபீடிங் பாட்டில் பெயரைப் படித்ததும் மனம் குமைந்து பேசினார்கள். “அயோக்கிய நாய்ங்க, அயோக்கிய நாய்ங்க” என்று ஆத்திரத்துடன் திரும்பத் திரும்பச் சொன்னார் ஒருவர். ”குழந்தைக்கு பால் குடுக்கற பாட்டல்னு கூட நெனச்சிப் பார்க்கலையே அவனுங்க. சரியான மிருகமா இருப்பானுங்க போல” என்பதையே வேறுவேறு சொற்களில் தம் ஆற்றாமைகளைப் பகிர்ந்து கொண்டார் இன்னொருவர். திருடுவதற்கு என வந்துவிட்டவனுக்கு அந்த எண்ணமெல்லாம் ஏன் வரப் போகிறது? குழந்தைக்குப் பயனளிப்பது, பெரியவர்களுக்குப் பயனளிப்பது என பிரித்துப்பிரித்துப் பார்த்தா திருடமுடியும்? திருடனுக்கு எல்லாப் பொருட்களும் திருடத்தக்கவையே. அத்தருணத்தில் மனச்சாட்சிக்கு இடமே இல்லை என்று சொன்னேன் நான். “ஆமா, அப்படி திருடித் தின்னறத விட எங்கயாவது போய் சாணிய தின்னுட்டு சாவலாம்” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு காறித் துப்பினார் நண்பர்.