கன்னடக் கவிதை இயக்கத்திலும் சமூகத்திலும் மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இயக்கம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் உருவான சரணர்கள் இயக்கம். கீழ்த்தட்டைச் சார்ந்த அனைத்துச் சாதிகளையும் ஒன்றிணைத்தது இந்த இயக்கம். தமக்குள் எவ்விதமான பேதமில்லை என்பதன் குறியீடாகவும் தாம் சாதியப் பார்வைகளைக் கடந்தவர்கள் என்பதன் அடையாளமாகவும் அவர்கள் லிங்கத்தை அணிந்தனர். லிங்கத்தை அணிந்தவர்கள் அனைவரும் சரணர்கள். சாதிய அடையாளம் என்பது முற்றிலும் துடைத்தெறியப்பட்டது. அனைவரும் சிவனையே தன் முழுமுதல் இறைவனாக எண்ணிச் சரணடைந்தவர்கள். பக்தியுடன் உழைப்பு இணைக்கப்பட்டு ஒன்றிணைந்த தளம் உருவானது. உழைப்பில் சிவனுடைய வடிவத்தைக் கண்டவர்களுக்கு உழைப்பின் களமான வயலே ஆலயமானது. அந்த வயலில் சிவனை அவர்கள் குடியேற்றிக் கொண்டாடினார்கள்.