உலக அளவில் பெண்ணியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் சிமொன் தெ பொவ்வார். தத்துவத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். நாவலாசிரயராகத் தொடங்கிய அவருடைய இலக்கியப் பயணம் பெண்ணியச் சிந்தனைகளுக்கு ஒரு தத்துவமுகத்தை உருவாக்கும் முயற்சியாக விரிவடைந்தது. இருத்தலியல், உளவியல், மார்க்சியம் என எல்லாத் தளங்களிலும் நிலவும் பெண் கருத்தியலைத் தொகுத்து சமகாலத்திய சிக்கல்களுடன் அவை பொருந்தியும் விலகியும் செல்கிற தடங்களை அடையாளம் கண்டு முன்வைத்தார் அவர். அவருடைய "இரண்டாம் இனம்" என்னும் நூல் உலக அளவில் வாசிக்கப்பட்ட முக்கியப் புத்தகம். கடந்த ஆண்டு கன்னடத்தில் அந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டு விரிவான அளவில் விவாத அரங்குகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. முழு நூலாக இல்லாவிட்டாலும் அதன் சிந்தனைப்பாதையை அடையாளம் காட்டும் விதமாக இச்சிறுநூலை நம் தமிழில் மொழிபெயர்த்துத் தொகுத்தளிக்கிற நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு தமிழ்ச்சிந்தனை உலகம் கடமைப்பட்டிருக்கிறது. தத்துவத்துக்கே உரிய தர்க்க ஒழுங்குள்ள வாதவிவாதங்களின் லயத்தையும் சாரத்தையும் உயிர்ப்புடன் தமிழில் தருவதற்கு அவருடைய பிரெஞ்சு ஞானமும் தமிழ்ப்புலமையும் உதவியிருக்கிறது.