Home

Monday 26 April 2021

செமொன் தெ பொவ்வார் - பெண்ணியக்கத்தின் முன்னோடி - நூல் அறிமுகம்

 

உலக அளவில் பெண்ணியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் சிமொன் தெ பொவ்வார்.  தத்துவத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.  நாவலாசிரயராகத் தொடங்கிய அவருடைய இலக்கியப் பயணம் பெண்ணியச் சிந்தனைகளுக்கு ஒரு தத்துவமுகத்தை உருவாக்கும் முயற்சியாக விரிவடைந்தது.  இருத்தலியல், உளவியல், மார்க்சியம் என எல்லாத் தளங்களிலும் நிலவும் பெண் கருத்தியலைத் தொகுத்து சமகாலத்திய சிக்கல்களுடன்  அவை பொருந்தியும் விலகியும் செல்கிற தடங்களை அடையாளம் கண்டு முன்வைத்தார் அவர். அவருடைய "இரண்டாம் இனம்" என்னும் நூல் உலக அளவில் வாசிக்கப்பட்ட முக்கியப் புத்தகம்.  கடந்த ஆண்டு கன்னடத்தில் அந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டு விரிவான அளவில் விவாத அரங்குகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.  முழு நூலாக இல்லாவிட்டாலும் அதன் சிந்தனைப்பாதையை அடையாளம் காட்டும் விதமாக இச்சிறுநூலை நம் தமிழில் மொழிபெயர்த்துத் தொகுத்தளிக்கிற நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கு தமிழ்ச்சிந்தனை உலகம் கடமைப்பட்டிருக்கிறது. தத்துவத்துக்கே உரிய தர்க்க ஒழுங்குள்ள வாதவிவாதங்களின் லயத்தையும் சாரத்தையும் உயிர்ப்புடன் தமிழில் தருவதற்கு அவருடைய பிரெஞ்சு ஞானமும் தமிழ்ப்புலமையும் உதவியிருக்கிறது.

ஏரியின் அமைதி - கட்டுரை

 

          ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு முன்பாகவோ அல்லது பிறகோ பொழிகிற அடைமழையில் எங்கள் ஊர் ஏரியில் நீர் நிரம்பத் தொடங்கி அடுத்த பத்து நாட்களில் நிறைந்து வழிவது வழக்கம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக நான் கண்ட எங்கள் கிராமத்து ஏரியின் சித்திரம் நிறம் மாறாமல் என் மனத்துக்குள் தொங்கிக்கொண்டிருக்கிறது. "ஆத்தாடி, சமுத்திரமாட்டம் பொங்கிங்கெடக்குது", "புள்ளகுட்டிங்கள பத்தரமா பாத்துக்குங்கடி, கரபக்கமா போயிடபோவுதுங்க", "ஐநாரப்பனுக்கு கெடாவெட்டி பொங்கல் வைக்கணும்டி அவுரே இல்லன்னா இந்த ஏரிய காபந்து பண்றதுக்கு யாரு இருக்கா?" குடிப்பதற்கான தண்ணீரை அடிகுழாயில் அடித்து பாத்திரங்களில் நிரப்பியெடுக்கிற நேரங்களில் கூடியிருக்கிற பெண்கள் தமக்குள் மாறிமாறிப் பேசிக்கொண்டதெல்லாம் இன்னும் நெஞ்சில் எதிரொலித்தபடி உள்ளது. சின்ன வயதில் நாம் கண்ட ஒவ்வொன்றும் ஆழ்மனம் வரை சென்று அப்படியே புதைந்துவிடுகிறது. கிணற்றுக்குள் விழுந்துவிடும் மரப்பாச்சிப்பொம்மைபோல. நினைவுகளோடும் ரத்தத்தோடும் இரண்டறக் கலந்துவிடுகிறது. நிலத்தில் தூவப்பட்ட எருவைப்போல. அதனாலேயே நினைக்கும் நேரத்திலெல்லாம் அந்தச் சித்திரத்தை ஒரு பழைய புகைப்படத்தொகுப்பைப் பிரித்துப் பார்ப்பதுபோல நெஞ்சின் ஆழத்திலிருந்து பிரித்தெடுத்துப் பார்த்து மகிழ்கிறோம். தற்செயலாக, வேறொரு கிராமத்து ஏரியைப் பார்க்கநேர்கிற தருணங்களில் கூட அதன் உருவில் நம் மனம் நம் ஊர் ஏரியைத்தான் பார்க்கிறது.

Monday 19 April 2021

வெள்ளம் - சிறுகதை

 

     அடித்துச் செல்லும் ஆற்றுவெள்ளத்தில் மூச்சுத்திணறி மூழ்கிக்கொண்டிருப்பதுபோல கனவுகண்டு திடுக்கிட்டு விழித்தெழுந்தான் சூரபுத்திரன். குகைக்குள் அடர்ந்திருந்த இருட்டையே சில கணங்கள் உற்றுப் பார்த்தான். வெளியே குயிலோசை கேட்டது. மூச்சுவாங்க உடல்வேர்வையைத் துடைத்தபடி எழுந்து உட்கார்ந்தான். கல்தரை சில்லிட்டிருந்தது. தூங்கத் தொடங்கும்வரை முதல்நாள் இரவு இடைவிடாது பெய்த மழையின் சீரான சத்தத்தில் மனம் லயித்துக்கிடந்ததை நினைத்துக்கொண்டான். இனிய நாதத்தால் இதயம் நிரம்பி வழிய உறங்கியதே தெரியாமல் போய்விட்டது.  அந்த மழையின் தொடர்ச்சியே கனவில் வெள்ளமாக பொங்கியிருக்கவேண்டும் என்று நம்பினான்.

     தலையைத் திருப்பி பக்கவாட்டில் படுத்திருக்கும்  பிட்சுகளைப் பார்த்தான். எல்லாரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.  மீண்டும் படுத்து உறங்கலாமா என்று எழுந்த யோசனையை மறுகணமே உதறி குகைவாசலை நோக்கினான். கனவில் கண்ட வெள்ளத்தை தீவிரமாக அவன் மனம் அசைபோட்டது. வேகம். பொங்கிப்பொங்கி மடங்கியுருளும் நீரலைகள். ஓயாத சீற்றம். ஊருக்கு வெளியே ஓடும் நதியை ஒருகணம் பார்க்கும் ஆசை அவன் மனத்தை உந்தித்தள்ளியது. இதற்குமுன்னால் நதியின் கரையில் நின்று ஒற்றை இலக்கைநோக்கிப் பாய்ந்தோடும் அதன் வேகத்தையும் அழகையும் மணிக்கணக்கில் பார்த்து மனம் பறிகொடுத்து நின்றதெல்லாம் நினைவுக்கு வந்தது. சிராவஸ்தி நகரைவிட்டு காலையில் கிளம்புவதாகத் திட்டம். காலை வழிபாட்டுக்குப் பிறகு புறப்படலாம் என்று சாரநாதர் ஏற்கனவே சொல்லியிருந்தார். அடுத்த முறை இந்த நகரத்தையோ, நதியையோ, வெள்ளத்தையோ எப்போது பார்க்கக்கிட்டுமோ என்ற எண்ணம் ஒரு ஏக்கமாக பொங்கியெழுந்தது. தன்னிச்சையாக அவன் பார்வை உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பிட்சுகள்மீது மறுபடியும் படிந்து மீண்டது. அவர்கள் எழுந்திருப்பதற்குள் ஓடோடிச் சென்று வெள்ளத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பலாம் என்று திட்டமிட்டான். அடுத்த கணமே, மெல்ல எழுந்து குகையைவிட்டு வெளியேறி வந்து பாறைகளைத் தாண்டி தரையில் இறங்கி குறுகலான காட்டுப்பாதை வழியாக ஆற்றைநோக்கி நடந்தான் சூரபுத்திரன்.

Sunday 18 April 2021

ஒருவேளை உணவு - நினைவுச்சித்திரம்

 

     உட்கார்ந்து செல்வதற்கு வசதியாக ஏதாவது பேருந்து வரக்கூடும் என்கிற நம்பிக்கையோடு அலுவலக வளாகத்துக்கு அருகிலேயே இருக்கும் நிறுத்தத்தில் காத்திருந்தபோது "எரநூத்தியொன்னு போயிடுச்சா சார்?" என்று கேட்டபடி எதிரில் வந்து நின்றாள் ஒருத்தி.  எலும்பும் தோலுமான வற்றல் தோற்றம். கழுத்தில் படர்ந்திருந்த மஞ்சள் கயிறு சட்டென்று தமிழ் அடையாளத்தை உணர்த்தியது. இன்னும் இல்லம்மா என்று பதில் சொல்லிவிட்டு, கைப்பேசியில் உறுமலோடு வந்து இறங்கிய அவசரச் செய்தியின்மீது பார்வையைப் பதித்தேன். நண்பரொருவர் மும்பையிலிருந்து அனுப்பிய செய்தி. படித்த கையோடு அதற்குத் தகுந்த விடைச்செய்தியைத் திரையில் அடித்து அனுப்பிவிட்டு, பாதுகாப்பு கருதி கைப்பேசியை பைக்குள் வைத்தேன்.

சிந்தாமணி கொட்லெகெரெயின் இரண்டு கன்னடக்கவிதைகள்

 

இருபத்தாறு சிங்கங்கள்

 

அந்தச் சிறிய விதைக்குள்

ஆயிரம் காடுகளின் கனவுகளிருந்தன

ஒரு காட்டுக்குள் நான் நுழைந்தேன்

 

குகையொன்றின் முன்னால்  நின்றேன்

ஒன்பது வாசல்கள் அடுத்தடுத்துத் திறந்தன

எதிர்கொண்டன இருபத்தைந்து சிங்கங்கள்-

அக்கணத்தில் ஒருமுறை நான் அஞ்சியது உண்மை

கிஷண் மோட்வாணி - நினைவுச்சித்திரம்

 

                தமிழ்ச்சங்க நூலகத்தில் புத்தகங்களை மாற்றிக்கொண்டு ஏரிக்கரையோரமாக வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் பாதையோரமாக பலவிதமான மரபொம்மைகள் பரப்பிவைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து சில நிமிடங்கள் நிற்க நேர்ந்தது. ஒரு குளிர்சாதனப்பெட்டியின் உயரமிருந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்திலிருந்து அலைபேசி உயரத்துக்கு கைக்கு அடக்கமான நடனக்காரி சிற்பம்வரை ஏராளமாக அடுக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான சிற்பங்களுக்கு அரக்குவண்ணம் பூசப்பட்டிருந்தது. ஒருசில சிற்பங்களுக்கு வண்ணமே இல்லை. 

Monday 12 April 2021

நான் கண்ட பெங்களூரு - முன்னுரை

 

கடந்த ஆண்டில் ஒரு நாள் வழக்கம்போல தொலைபேசியில் உரையாடியபோதுஉங்கள் நினைவில் பதிந்திருக்கிற பெங்களூரைப்பற்றி  ஒரு புத்தகம் எழுதவேண்டும்என்று நண்பர் நடராஜன் சொன்னார். அப்போது தொடர்ந்து சிறுகதைகளை எழுதும் முனைப்பில் மூழ்கியிருந்தேன். ”சரி, எழுதுகிறேன்என்று அவருக்கு அக்கணத்தில் பதில் சொன்னபோதும் கதைகளின் உலகத்திலேயே வாழ்ந்திருந்தேன்.

வாழ்வின் திசைகள் - மிட்டாய் பசி நாவல் அறிமுகக்கட்டுரை

 

விவேகசிந்தாமணியில் ஒரு பாடல் ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாகஎன்று தொடங்குகிறது. தற்செயலாக அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் பரிதாபத்துக்குரிய ஒருவனைப்பற்றிய சித்திரத்தை அந்தப் பாடலில் காணலாம்.

Monday 5 April 2021

செகாவ் என்னும் செவ்வியல் கதைக்கலைஞர் - கட்டுரை

 

இலக்கியத்தில் சிறுகதை என்னும் வடிவம் உருவாகி வந்த காலத்தில் அதற்கு நிலையானதொரு செவ்வியல் தன்மையை உருவாக்கியதில் இரு முக்கியமான முன்னோடிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஒருவர் பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பசான். மற்றொருவர் ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ். தம் கதைகளில் சுவாரசியத்துக்கும் அப்பால் வாழ்க்கையின் ஒரு துண்டு சித்திரத்தை முன்வைத்து, அதில் பொதிந்திருக்கும் எண்ணற்ற சிக்கல்களையும் கோணங்களையும் உணர்த்தும் கலையில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.

துர்காபாய் தேஷ்முக் : தொண்டின் நாயகி

 

கடந்த நூற்றாண்டின் இருபதுகளையொட்டிய காலத்தில் தேவதாசிப் பெண்களுக்கு சமூக மதிப்பில்லாத நிலை நிலவியது. சிலர் செல்வந்தர்களின் காமவேட்கையைத் தணிக்கும் கணிகையராக வாழ்ந்தனர். சிலர் தெருவில் திருமண ஊர்வலம் செல்லும்போது, பல்லக்குகளின் முன்னால் நடனமாடிப் பிழைத்தனர். சிலர் கோயில்களில் நடனமாடி வாழ்க்கையை நடத்தினர். அவர்கள் எந்தத் தரப்பினராக இருப்பினும், திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பது மட்டும் எல்லோருக்கும் பொதுவான விதியாக இருந்தது. எல்லோரும் தேவதாசிப்பெண்களை களிப்பூட்டும் பொம்மைகளாகவும் இழிவாகவும் மதித்திருந்த வேளையில், காகிநாடாவில் வாழ்ந்த ஒரு பள்ளிச்சிறுமி மட்டும் அவர்களை மிகுந்த கெளரவத்தோடும் கனிவோடும் அணுகிப் பழகினாள். இந்தச் சமூகமும் அவர்களைத் தகுந்த மதிப்புடன் நடத்தவேண்டும் என்று விரும்பினாள். இந்தப் பிரச்சினையை காந்தியடிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று பன்னிரண்டு வயதான அந்தப் பிஞ்சுமனத்துக்கு எப்படியோ தோன்றியது. அந்தச் சிறுமியின் பெயர் துர்காபாய்.