எளிமை, தன்னிறைவு,
ஆன்மிக எழுச்சி ஆகிய கருத்தாக்கங்களை மையமாகக்கொண்டு புதிய
தேசத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளில் காந்திய வழியைப் பின்பற்றும் இளைஞர்களுக்கு
இருந்த ஆர்வம் மகத்தானது. ஜெகந்நாதனும் கிருஷ்ணம்மாளும் அத்தகு ஆர்வ எழுச்சியுடன்
அறவழிப்போரில் வெவ்வேறு பின்னணிகளிலிருந்து தோன்றி தம்மை இணைத்துக்கொண்டவர்கள்.
சில சந்திப்புகளைத் தொடர்ந்து தம்பதியினராகவும் மலர்ந்தவர்கள்.
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அவர்கள் நம் நாட்டின் அடித்தட்டு மக்கள் உயர்வுக்காக
ஆற்றிவரும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. தொண்டர்களாக பொதுவாழ்வில் ஈடுபட
நினைப்பவர்களுக்கு இவர்களுடைய வாழ்க்கைமுறை மிகச்சிறந்த முன்னுதாரணமாக
விளங்குகிறது.