Home

Showing posts with label தங்கப்பா. Show all posts
Showing posts with label தங்கப்பா. Show all posts

Sunday, 16 April 2023

சாரத்தை நெருங்கும் கலை

  

கவிதை என்பது கருத்துகளைத் திரட்டிப் பாதுகாத்துவைக்கும் பேழையென  ஒரு தரப்பும் அழகியல் கூறுகளால் அணிசெய்து காட்சிக்கு வைக்கும் சிலையென இன்னொரு தரப்பும் முன்வைத்த வாதங்கள் ஓங்கியொலித்தபடி இருந்த ஓர் இக்கட்டான தருணத்தில் அழகியல் கூறுகளையும் உருவகமாக மாற்றப்பட்ட கருத்துகளையும் சரியான விகித அளவில் இணைத்து மரபுப்பாடல்களைப் புனைந்து கவன ஈர்ப்பை உருவாக்கிய முக்கியமான பாவலர் ம.இலெ.தங்கப்பா. தாளக்கட்டும் கற்பனைநயமும் அழகான சொல்லாட்சியும் அமையாத பாடல்கள் எல்லாமே சோளக்கொல்லை பொம்மைகள் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு நிகரானவை என்பதே அவர் எண்ணமாக இருந்தது.

Monday, 7 March 2022

தங்கப்பா - புதிய புத்தகத்தின் முன்னுரை

  

     தங்கப்பா தமிழுலகம் நன்கறிந்த பாவலர். அன்பே வாழ்வின் மையமென தன் வாழ்நாள் முழுதும் சொல்லிக்கொண்டே இருந்தவர். ’அன்பால் நிறைந்த உள்ளத்தில்தான் அமைதியும் நிறைந்திருக்கும். தன் சொந்த முன்னேற்றம் என்ற வேட்கைக்கு அங்கே இடமிருக்காது. தான் என்ற உணர்வுக்கு அடிமையாகாத உள்ளமே வாழ்க்கையை இயற்கைச் சுவையுணர்வுடன் பார்க்கும்என்னும் கருத்துக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டியவர். அவர் வாழ்க்கையே அவர் விடுத்த செய்தி.

Saturday, 28 August 2021

இயற்கையும் மனிதனும் – தங்கப்பாவின் தமிழாக்கப் பாடல்கள்

 

 எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய படைப்பாளிகள் அனைவரும் தம் படைப்பு முயற்சிகளோடு கூடவே தமக்குப் பிடித்த படைப்புகளைப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். தமிழில் பாரதியார் முதல் புதுமைப்பித்தன் வரை இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டவர்களே. நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தம் வாழ்வனுபவத்தைக் கலையுணர்வோடு மரபுக்கவிதை வடிவில் முன்வைத்துவரும் ம.இலெ.தங்கப்பா தம் இளமைக்காலம் முதல் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கவிதைகள் கனவுகள் என்கிற பெயரில் வெளியாகியுள்ளன.

Monday, 23 September 2019

கன்றுக்குட்டி - புதிய சிறுவர் பாடல் தொகுதி





பழனியும் நானும் தொடக்கப்பள்ளியில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே நண்பர்களாக இருக்கிறோம். அவனுக்குப் பிடித்ததெல்லாம் எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடித்தவையெல்லாம் அவனுக்கும் பிடிக்கும். அவன் ஓவியம் பயிலத் தொடங்கியபோது நானும் ஓவியம் தீட்டினேன். பாடப்புத்தகங்களைக் கடந்து நான் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியபோது அவனும் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவரிடையேயும் இப்படி பல ஒற்றுமைகள் இருந்தன. எங்கே சென்றாலும் நாங்கள் ஒன்றாகவே செல்வோம். அவனைக் காணவில்லை என்றால் என்னைக் கேட்பார்கள். என்னைக் காணவில்லை என்றால் அவனைத்தான் கேட்பார்கள். அப்படி ஒரு நெருக்கம்.

Saturday, 10 November 2018

தங்கப்பா: சில பழைய நினைவுகள்


புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் நான் கணிதப்பிரிவில் படித்துக்கொண்டிருந்தபோது எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் தங்கப்பா. அப்போது செய்யுள், உரைநடை, நவீன இலக்கியம், துணைப்பாடம், கட்டுரை என நாலைந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டு தனித்தனியாகப் பாடங்கள் நடந்தன. தங்கப்பா எங்களுக்குச் செய்யுள் பாடம் நடத்தினார். வகுப்பில் அறிமுகமாகி நன்கு பழகிய பின்னர் தமிழ்த்துறைக்குச் சென்று அடிக்கடி அவரைச் சந்தித்துப் பேசினேன். நான் அவ்வப்போது எழுதும் கவிதைகளை அவரிடம் காட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டேன். அவர் அவற்றைப்பற்றிக் கருத்துரைக்கவேண்டும் என விரும்பினேன். அவர் தன் எண்ணங்களைச் சொல்வதோடு மட்டுமன்றி, கவிதைகள் மேம்படும் விதத்தில் சில திருத்தங்களையும் சொன்னார். பெரும்பாலும் சந்தநயம் பிசகும் இடங்களுக்குப் பொருத்தமாக ஒரு சொல்லை மாற்றி இன்னொரு சொல்லை அமைத்துக் கொடுத்தார்.  

Saturday, 27 October 2018

பொன்செய் உலைக்களம் - கட்டுரை



பொன்செய் உலைக்களம்என்பது தங்கப்பாவின் பாடலொன்றில் இடம்பெறக்கூடிய சொல். அவர் உருவாக்கிய மிகச்சிறந்த சொல்லிணைவுகளில் ஒன்று. அவருடைய ஒட்டுமொத்தமான பாடல்களின் உலகத்திலிருந்து இத்தகு நூறு சொல்லிணைவுகளை நம்மால் தொகுத்துக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு சொற்கள்மீது ஆர்வமும் காதலும் கட்டுப்பாடும் கொண்டவர் தங்கப்பா. செம்புலப்பெயல்நீர், மீனெறி தூண்டில், அணிலாடு முன்றில், குப்பைக்கோழி போன்ற சங்ககாலப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் எண்ணற்ற சொல்லிணைவுகளை நினைவூட்டும் வகையில் தங்கப்பா உருவாக்கியிருக்கும் சொல்லிணைவுகள் அமைந்துள்ளன. ஒருவகையில் சங்கப்பாடல்களின் தொடர்ச்சியாக அவர் நம்மிடையே வாழ்ந்தார்.

Saturday, 14 July 2018

கதவு திறந்தே இருக்கிறது – எளிமையும் மேன்மையும்


சமீபத்தில் மறைந்த தமிழறிஞர் .இலெ.தங்கப்பா. தமிழின் முக்கியமான மரபுக்கவிஞர். தனித்தமிழில் ஈடுபாடு கொண்டவர். அவர் கவிதை என்னும் சொல்லுக்கு இணையாக பாடல் என்னும் சொல்லையே பயன்படுத்தி வந்தார். ஆங்கிலத்திலும் இவர் புலமை பெற்றவர். பல சங்கப்பாடல்களை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவை ஏற்கனவே சிறுசிறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. கலிங்கத்துப்பரணியையும் மொழிபெயர்த்திருக்கிறார். வள்ளலாரின் சில தேர்ந்தெடுத்த பாடல்களும் பாரதிதாசனின் சில பாடல்களும் கூட தங்கப்பாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

என் ஆசிரியர் தங்கப்பா - கட்டுரை



புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கணிதப்பிரிவில் (பட்டப்படிப்பு) நான் சேர்ந்தேன். கணிதப்பாடங்கள் தனிவகுப்பிலும் மொழிப்பாடங்கள் பொதுவகுப்பிலும் நடத்தப்பட்டன. கணிதப்பிரிவு மாணவர்களோடு விலங்கியல், தாவரவியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் மொழிப்பாடவேளையில் இணைந்துகொள்வார்கள். முதல்நாள் காலைநேரத்துப் பாடவேளைகள் அனைத்தும் கணிதப்பாடங்களாகவே அமைந்தன. உணவு இடைவேளைக்குப் பிறகான முதல் பாடவேளையில் ஆங்கில ஆசிரியர் வந்துபோனார். அதற்குப் பிறகு தமிழ்ப்பாடவேளை. அப்போது எங்களுக்குப் பாடம் எடுக்க வந்தவர் மதனப்பாண்டியன் இலெனின் தங்கப்பா என்கிற .இலெ.தங்கப்பா. அன்றுதான் அவரை நான் முதன்முதலாகப் பார்த்தேன்.

Monday, 18 June 2018

தங்கப்பாவின் கவிதையுலகம் – துலக்கமும் ஒடுக்கமும்



தங்கப்பாவின் கவிதையுலகம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்கால நீட்சியையுடையது. பாரதியார், வள்ளலார், பாரதிதாசன் ஆகிய மாபெரும் ஆளுமைககளின் தொடர்ச்சியாகத் தமிழில் இயங்கிய சக்தியாக அவரை அடையாளப்படுத்தலாம். யாப்புவடிவில் அவர் சொற்கள் ஓர் அருவியைப்போல விழுந்துகொண்டிருப்பதைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. அதன் பாய்ச்சலில் ஒரு தடையுமில்லை. சீரான வேகத்துடனும் தாளலயத்துடனும் சொற்கள் உற்பத்தியானபடி இருக்கின்றன. எடுத்துரைப்பில் அவருடைய பாடல்களில் ஒரு சின்னப் பிசகுகூட இருப்பதில்லை. அவர் பாடல்களை மனமொன்றிப் படிக்கும்போது அச்சொற்களின் கதகதப்பு நம் மனத்தில் மெல்லமெல்லப் படியத் தொடங்குகிறது. அந்த வெப்பம் பெருகப்பெருக அச்சொற்கள் ஏதோ ஒரு புள்ளியில் நம் நெஞ்சிலிருந்து பெருகுவதைப்போல ஓர் உணர்வு உருவாகத் தொடங்குகிறது. அந்த அனுபவத்தை நம் அனுபவமாக எண்ணும் விருப்பமும் ஏற்படுகிறது. அவருடைய அரைநூற்றாண்டுக்காலக் கவிதைகளில் அத்தகு விருப்பத்தை உருவாக்குபவையே மிகுதி. அது அவருடைய தனிப்பட்ட வெற்றி.

Wednesday, 13 June 2018

தங்கப்பா: தனிமைப்பயணி

.பெரியவர் பாரதிமணியும் நானும் திருப்பத்தூரில் தங்கியிருந்தோம். தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெறும் வருடாந்திர நாடகவிழா. நான்கு நாட்கள். எட்டு நாடகங்கள். ஒரு திருவிழாபோல நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற கூத்துப்பட்டறை, பரீக்ஷா, மாற்று நாடக இயக்கம், சென்னை கலைக்குழு, புதுச்சேரி தலைக்கோல் என பல குழுக்களின் நாடகங்கள் அரங்கேறின. 30.05.2018 புதன் இரவு நடைபெற்ற நாடகம் நிறைவடைய நீண்ட நேரமாகிவிட்டது. அதற்குப் பிறகு உண்டு, உரையாடிவிட்டு படுக்கைக்குச் செல்ல நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மறுநாள் விடிந்தபின்பும் உறங்கிக்கொண்டிருந்தோம். என் கைபேசிக்கு வந்த அழைப்புமணிச்சத்தம் கேட்டுத்தான் இருவரும் விழித்தோம். கைபேசியின் திரையில் செங்கதிரின் பெயரைப் பார்த்ததுமே மனம் துணுக்குற்றது. சற்றே பதற்றத்தோடு வணக்கம் தம்பிஎன்று நான் சொல்லி முடிக்கும் முன்பே செங்கதிர்அப்பா போயிட்டார் அண்ணாஎன்றான்.

Monday, 11 June 2018

பாடல் என்னும் கொண்டாட்டம்



குழந்தைகளுக்கு பாடல்கள் ஏன் பிடிக்கின்றன என்கிற கேள்வியிலிருந்து தொடங்கலாம். ஒரு சொல்லைப் புரிந்துகொள்ளும் முன்பாக, ஒரு மொழியைப் புரிந்துகொள்ளும் முன்பாக குழந்தையின் செவியையும் மனத்தையும் நிறைப்பவை அதன் தாய் பாடும் தாலாட்டுப்பாடல்கள். அதன் இசை குழந்தையை மயக்குகிறது. உறங்கவைக்கிறது. பாதுகாப்பாக உணரவைக்கிறது. வளரும் பருவத்தில் லயமும் சந்தமும் மிகுந்த சின்னச்சின்ன சொற்களால் உருவாகும் ஓசை குழந்தையின் நெஞ்சை ஈர்க்கிறது. சந்தத்தன்மையும் இசையும் கொண்ட சொற்கள் நிரம்பியிருப்பதாலேயே, குழந்தைகளுக்குப் பாடல்கள் பிடிக்கின்றன.