’பொன்செய் உலைக்களம்’ என்பது தங்கப்பாவின் பாடலொன்றில் இடம்பெறக்கூடிய சொல். அவர் உருவாக்கிய மிகச்சிறந்த சொல்லிணைவுகளில் ஒன்று. அவருடைய ஒட்டுமொத்தமான பாடல்களின் உலகத்திலிருந்து இத்தகு நூறு சொல்லிணைவுகளை நம்மால் தொகுத்துக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு சொற்கள்மீது ஆர்வமும் காதலும் கட்டுப்பாடும் கொண்டவர் தங்கப்பா. செம்புலப்பெயல்நீர், மீனெறி தூண்டில், அணிலாடு முன்றில், குப்பைக்கோழி போன்ற சங்ககாலப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் எண்ணற்ற சொல்லிணைவுகளை நினைவூட்டும் வகையில் தங்கப்பா உருவாக்கியிருக்கும் சொல்லிணைவுகள் அமைந்துள்ளன. ஒருவகையில் சங்கப்பாடல்களின் தொடர்ச்சியாக அவர் நம்மிடையே வாழ்ந்தார்.