வீரயுக மாந்தர்களை வியந்தும் பாராட்டியும் எழுதப்பட்டிருக்கும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அவற்றில் சிற்றில் நற்றூண் பற்றி எனத் தொடங்கும் பாடல் பிரபலமானது. ஆண்மகன் என்பவன் போராடப் பிறந்தவன் என்கிற தொனியும் அத்தகைய வீரனைப் பெற்ற தாய் என்கிற பெருமையும் ஒருங்கே வெளிப்படும் பாடல் அது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த சூழல் அப்பாடலில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சாயலில் இன்றைய சூழலை சற்றே மாற்றி எழுதிப் பார்த்திருக்கிறார் வளவ. துரையன். புறநானூற்றில் மகனைப்பற்றிய கேள்விக்கு வீரமரபைச் சேர்ந்த தாய் விடை சொல்கிறாள். வளவ துரையன் கவிதையில் மகளைப்பற்றிய கேள்விக்கு நவீன தாய் அல்லது தந்தை விடைசொல்வதாக உள்ளது.