கல்வித்தகுதி, செல்வநிலை. ஆடம்பரம், பழகும் முறை, பேச்சுமுறை என ஒருவரை இன்னொருவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் கூறுகள் எண்ணற்றவை. ஆனால் ஒருவரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடவேண்டும் என்ற நிலை வரும்போது, அவற்றில் எதையுமே அவரை மதிப்பிடும் அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர் இம்மண்ணில் ஆற்றிய செயல்கள் மட்டுமே மதிப்பிட உதவும் அளவுகோலாகக் கருதப்படும். ஒருவருடைய பெருமையையும் சிறுமையையும் அத்தகு செயல்கள் வழியாகவே இந்த உலகம் வரையறுக்கும். ஒவ்வொரு செயலும் ஏதோ ஒருவகையில் உரைகல். இதை மனத்தில் கொண்டே ’எண்ணித் துணிக கருமம்’ என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். ’பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்’ என்பது வள்ளுவர் வகுத்திருக்கும் பொதுநெறி. அந்த நெறியே மனித வாழ்க்கையை மதிப்பிட உதவும் அடிப்படை அளவுகோல்.