தமது நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் இல்லத்தில் ஒரு மாதம் கழித்து நடக்கவிருக்கும் ஆண்டுவிழாவில் போட்டிகளுக்குப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டார் செல்லப்பா. திடீர்திடீரென்று அலுவலக ஆணைக்குக் கட்டுப்பட்டு மும்பை, கொச்சின், கல்கத்தா என்று புறப்பட்டுச் செல்கிற சூழல்களுக்கிடையே பணிபுரிகிறவன் இப்படியெல்லாம் விசேஷநிகழ்ச்சிக்கு தீர்மானமாக தேதி ஒதுக்கித்தருவதில் இருக்கிற சிரமங்களை அவருக்குப் புரியவைப்பது எப்படி என்று தடுமாற்றமாக இருந்தது. பத்திரிகைகளில் கதையெல்லாம் எழுதுகிறவன் கேட்டால் மறுக்கமாட்டான் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் வந்திருந்தார்.