31.07.1921 அன்று பம்பாயில் பரல் என்னுமிடத்தில் இருக்கும் எல்பின்ஸ்டோன் ஆலைக்கு அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார். அடுத்த நாள் திலகரின் முதலாம் நினைவுநாள். எல்லோரும் அறிந்த திலகருடைய கூற்றான ’சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்’ என்னும் முழக்கத்தை காந்தியடிகள் முதலில் நினைவுபடுத்தினார். பிறகு திலகருடைய சுயராஜ்ஜியக் கனவை நிறைவேற்றுவதே இந்தியரின் முதல் கடமையாகும் என்று அறிவித்தார். தொடர்ந்து நம் வாழ்வை சுதேசிமயமானதாக மாற்றிக்கொள்வதன் வழியாக மட்டுமே நாம் சுயராஜ்ஜியத்தை அடையமுடியும் என்று தெளிவாக எடுத்துரைத்தார்.