ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து தினமும் அலுவலகத்திலிருந்து நான் திரும்பும் நேரம் மாறிவிடும். ஆண்டு இலக்கை நோக்கி ஓடும் இறுதியோட்டத்தின் விளைவு அது. வழக்கமாக ஏழு அல்லது ஏழரைக்குள் மாறிவிடும். இது ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தொடர்கதை. வந்ததும் ஒரு குளியல். சிற்றுண்டி. திரும்பிவிடுவேன். இந்த மார்ச் வாரங்களில் அது ஒன்பது அல்லது ஒன்பதரையாக காலையில் படிக்காமல் விட்ட தினசரிகளின் கட்டுரை வாசிப்பு. திரும்பிப் பார்த்தால் சுவர்க்கடிகாரம் பத்தரை அல்லது பதினொன்றைக் காட்டும். ஏப்ரல் பிறந்து நாலைந்து நாட்களில் வழக்கமாக அந்தப் பரபரப்பெல்லாம் அடங்கிவிடும். ஆனால் இந்த முறை ஒரு வாரம் கடந்துபோய்விட்ட நிலையிலும் பரபரப்பு ஓயவில்லை. மனத்தில் வேலையைத் தவிர வேறெந்த எண்ணமும் இல்லை. அப்படி ஒரு ஓட்டம். எட்டாம் தேதியன்றும் தாமதமாகத் திரும்பி, தாமதமாகச் சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகும்போது கடிகாரம் பதினொன்றைக் காட்டியது.
மிதமிஞ்சிய சோர்வில் படுத்த ஐந்து நிமிடங்களுக்குள் உறக்கம் வந்துவிட்டது. உறக்கத்தில் திடீரென கைப்பேசி மணி ஒலித்தது. என் மனைவி எடுத்துப் பேசுவதும் பதில் சொல்வதும் அரைமயக்கத்தில் எங்கோ கனவில் கேட்பதுபோலக் கேட்டது. அவள் என் அருகில் வந்து நின்று, தயங்கி நின்றிருக்கும்போதே நான் என் விழிகளைத் திறந்து “என்ன?” என்று கேட்டேன். அவள் தயங்கி “எழுத்தாளர் ஜெயகாந்தான் செத்துட்டாராம்” என்று சொன்னாள். வேகமாக பதறி எழுந்து உட்கார்ந்தேன். ”யாரு பேசனாங்க? என்ன சொன்னாங்க?” என்றேன். “சம்பந்தம் சொன்னாரு” என்று பதில் சொன்னாள். நான் உடனே அவர் எண்ணை அழைத்து விசாரித்தேன். அவருக்கு சென்னை நண்பர்கள் செய்தி அனுப்பியதைச் சொல்லிவிட்டு “உங்களுக்கு தெரியுமான்னு கேக்கறதுக்குத்தான் போன் செஞ்சேன்” என்றார். ”இல்லை, எனக்குத் தெரியாது. நீங்கதான் மொதமொதல்ல சொல்றிங்க” என்றேன்.