பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கக் குழுவினரும் அமெரிக்காவைச் சேர்ந்த பிராட்டஸ்டண்ட் குழுவினரும் அமெரிக்காவைச் சேர்ந்த சீர்திருத்தச் சமயக்குழுவினரும் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட தம் எண்ணற்ற சமயப்பரப்பாளர்களை ஆசிய நாடுகளுக்கு சமயப்பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பிவைத்தனர். அவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மெல்ல மெல்ல கிறித்துவத்தை அறிமுகப்படுத்தி, கிறித்துவ நம்பிக்கைகளை வேரூன்றச் செய்வதையே தம் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு இயங்கினர். எல்லா நாடுகளிலும் தொடர்யுத்தங்களால் நேர்ந்த சீரழிவுகளிலும் விளங்கிகொள்ள முடியாத நோய்களிலும் சிக்கித் தவித்த எளிய மக்களிடையில் சமயப்பரப்பாளர்களுடைய வருகை ஒரு மருந்தாக அமைந்தது. மதமாற்றங்கள் எளிதாக அமைவதற்கு அந்த வரலாற்றுத்தருணமே ஒரு தொடக்கப்புள்ளியானது.