Home

Sunday 2 January 2022

கொண்டைக்குருவி தொகுதியிலிருந்து சில பாடல்கள்

 

மாப்பிள்ளை பொம்மை

 

குடுகுடு தாத்தா வந்தாரு  

கொழகொழ சேற்றை எடுத்தாரு

மடமட என்றே பிசைஞ்சாரு

மாப்பிள்ளை பொம்மை செஞ்சாரு

 

கொழுகொழு மாமா வந்தாரு

மழமழ பொம்மையை பார்த்தாரு

பளபள துணியை கிழிச்சாரு

தொளதொள சட்டை தைச்சாரு

 

தடதட அண்ணன் வந்தாரு

மொடமொட தாளை எடுத்தாரு

கடகட சுருட்டி மடிச்சாரு

பொம்மைக்கு தொப்பி போட்டாரு

 

லொடலொட மச்சான் வந்தாரு

கலகல என்றே சிரிச்சாரு

மடமட குச்சியை உடைச்சாரு

பொம்மையின் கையில் கொடுத்தாரு

 

 

முத்தம்மாவின் தோட்டம்

 

கொண்டைக்காரி முத்தம்மா

குதித்துக்கொண்டே போனாளாம்

குளத்திலிருந்து தண்ணீர்க் குடத்தை

இடுப்பில் சுமந்து வந்தாளாம்

 

வேலிப் படலில் செருகி வைத்த

கொட்டாங்கச்சியை எடுத்தாளாம்

செடிகளுக்கும் கொடிகளுக்கும்

மொண்டு மொண்டு இறைத்தாளாம்

 

பவழமல்லி பட்டுரோஜா

செடிகள் பக்கம் நடந்தாளாம்

வேரின் தாகம் தணியும் வண்ணம்

பக்குவமாக தெளித்தாளாம்

 

எலுமிச்சைக்கும் கொய்யாவுக்கும்

கூடுதலாக இறைத்தாளாம்

எஞ்சிய நீரை எடுத்துச் சென்று

கீரைப்பாத்தியில் கவிழ்த்தாளாம்

 

 

பூனைக்குட்டியின் ஆசை

 

 

மியாவ் மியாவ் பூனைக் குட்டிக்கு

ஆசை வந்தது

மிடுக்கு காட்டி உடம்பு விறைக்க

நடந்து சென்றது

 

கொய்யா மரத்தைச் சுற்றி ஆடும்

அணிலைப் பார்த்தது

கோணல் பார்வை புன்னகையோடு

மேலும் நடந்தது

 

குப்பையைக் கிளறி அலையும் கோழியை

மேட்டில் பார்த்தது

திரும்பிப் பார்க்க நாட்டமில்லாமல்

அசைந்து நடந்தது

 

வேலிப்படலில் நாய்கள் குரைக்கும்

சத்தம் கேட்டது

வெடவெடத்து கனவு கலைய

ஓட்டம் எடுத்தது

 

 

இனிமை

 

 

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி

என்ன சொன்னது?

பறந்து திரிதல் இனிமையென்று

பறந்து விட்டது

 

வானம்பாடி வானம்பாடி

என்ன சொன்னது?

பாடிப் பறத்தல் இனிமையென்று

தாவிச் சென்றது

 

பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி

என்ன சொன்னது?

பூவும் தேனும் இனிமையென்று

பறந்து போனது

 

ஆட்டுக் குட்டி ஆட்டுக் குட்டி

என்ன சொன்னது?

அலைந்து திரிதல் இனிமையென்று

ஓட்டம் எடுத்தது

 

 

ஆட்டின் விளையாட்டு

 

வேலி தாண்டி வந்த ஆடு

தோட்டத்தில் புகுந்து விட்டது

விரட்டும் போது அச்சம் கொண்டு

வேறு திசையில் பாய்ந்தது

 

சாமந்திச் செடியை மிதித்து விட்டு

கீரைப் பாத்தியில் நின்றது

தக்காளித் தளிர்கள் கூழ்கூழாக

தாண்டித் தாண்டிச் சென்றது

 

தண்ணீர்ப் பானையை உருட்டி உடைத்து

மிரண்டு திரும்பிப் பார்த்தது

மல்லிகைப் பந்தல் கொம்பால் கிழிபட

நடுங்கிக் கொண்டு தவித்தது

 

உலர வைத்த கம்பு மீது

குளம்பு பதிய நடந்தது

வாழைக் குருத்தை இழுத்து விட்டு

அடுப்பு மேடையில் குதித்தது

 

வட்டமடித்துத் திரிந்த பின்பு

சுற்று வேலியைத் தொட்டது

அடுத்த சத்தம் எழுப்பும் முன்னே

தப்பி ஓடி விட்டது