முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் வாழ்ந்திருந்த ஊரோடு மறுபடியும் ஓர் உறவு துளிர்க்கும் என்று நினைத்ததே இல்லை. அப்பாவோ அம்மாவோ இருந்திருந்தால் என்னைவிட மிகவும் அதிகமாக மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். என் மகளுக்குப் பார்த்த மாப்பிள்ளையுடைய குலதெய்வம் அந்த ஊரில் இருந்தது. அவருடைய தாய்வழி உறவினர்களும்கூட அந்த ஊரில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் சொன்ன விவரங்களை வைத்துக்கொண்டு என்னால்தான் யாரையும் நினைவுக்குக் கொண்டுவரமுடியவில்லை. நான் சொன்ன விவரங்கள்மூலமாக அவர்களாலும் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஊரோடு புதிதாக ஓர் உறவு என நினைப்பதே எனக்கு ஆனந்தமாக இருந்தது.
திருப்பதியில் திருமணம் முடிந்த கையோடு குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பிறகுதான் மற்ற கடமைகளைக் கவனிக்கமுடியும் என்று சம்பந்தி கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டார். மூன்று கார்களில் கிளம்பி இரவே வந்து தங்கிவிட்டோம். காலையில் வழிபாடு முடிந்து மதிய விருந்து உறவினர் வீட்டிலேயே தடபுடலாக நடந்துமுடிந்தது. ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிக்கொண்டு நான் மட்டும் கிளம்பினேன். மனைவியையும் அழைத்துச் சென்று காட்டவேண்டும் என ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் அவளுக்கு அடிக்கடி மூட்டுகள் வீங்கும் பிரச்சினை இருந்ததால் அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.
மாறியிருந்த ஊரின் அமைப்பு ஒருகணம் குழப்பி திகைக்கவைத்தது. பல இடங்களில் புரியாமல் நின்றுவிட்டேன். தோப்புபோல இருந்த மரங்கள் எதுவும் இல்லை. மாட்டுவண்டிப் பாதைகள் சிமெண்ட் சாலைகளாக மாறியிருந்தன. ஏராளமான கடைகள். வாகனங்கள். நடமாட்டம். உணவு விடுதிகள். மூன்று ஏ.டி.எம்.கள். நான்கு வங்கிகள். நாங்கள் குடியிருந்த வீட்டுக்குப் பக்கவாட்டில் இருந்த பிள்ளையார் கோயிலை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, முதலில் கோயிலைத் தேடி, அதற்குப் பிறகு தெருவைக் கண்டுபிடித்தேன். முன்பக்கமும் பின்பக்கமும் தென்னந்தோப்பும் மாந்தோப்புமாக இருந்த எங்கள் வீட்டுப்பகுதியில் நிழலுக்குக்கூட ஒரு மரம் இல்லை. எங்கெங்கும் வீடுகள் அடைத்துக்கொண்டிருந்தன.