சுடுகாட்டைச் சுற்றி ஓடிப் பழகுவதுதான் என் அதிகாலைப் பயிற்சியாய் இருந்தது. சுடுகாடு தவிர வேறு விஸ்தாரமான இடம் எதுவுமே இல்லாத ஊர் அது. எனக்கோ ஓட்டப்பயிற்சி மேல் அளவுகடந்த மோகம். கட்டுக்கட்டாய்த் திரண்டிருக்கும் உடல்களைக் கொண்ட விளம்பரங்கள் என்னைக் கூவி அழைத்த நாள்கள் அவை. “காலங்காத்தால சுடுகாட்டு மொகத்துலதான் முழிக்கணுமா” என்கிற அம்மாவின் வார்த்தைகளை அசட்டை செய்தேன். என் ஆரோக்கியமான லட்சியத்தை அன்பின் பிடிக்குள் தள்ளி நொறுக்க நினைக்கும் அவள் திட்டத்துக்குக் கிஞ்சித்தும் இடம் தரவில்லை. இத்தனைக்கும் காலை நேரங்களில் அவள்தான் என்னை எழுப்பிவந்தாள். வாசலில் அவள் சாண நீர் தெளித்து முடிப்பதற்கும் நான் ஷுக்களை மாட்டிக்கொண்டு இறங்குவதற்கும் சரியாய் இருக்கும். அவள் முகம் போகும் போக்கு அத்தனை சந்தோஷத்துக்குரியதாய் இருக்காது. ஆனாலும் கவனிக்காததுபோல புறப்பட்டு விடுவேன். நெகிழத் தொடங்கும் முதல் தருணத்திலேயே என் உயிர் லட்சியத்தை கைகழுவ வேண்டியிருக்கும் என்பது தெரிந்திருந்தது.