.பெரியவர் பாரதிமணியும் நானும் திருப்பத்தூரில் தங்கியிருந்தோம். தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெறும் வருடாந்திர நாடகவிழா. நான்கு நாட்கள். எட்டு நாடகங்கள். ஒரு திருவிழாபோல நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற கூத்துப்பட்டறை, பரீக்ஷா, மாற்று நாடக இயக்கம், சென்னை கலைக்குழு, புதுச்சேரி தலைக்கோல் என பல குழுக்களின் நாடகங்கள் அரங்கேறின. 30.05.2018 புதன் இரவு நடைபெற்ற நாடகம் நிறைவடைய நீண்ட நேரமாகிவிட்டது. அதற்குப் பிறகு உண்டு, உரையாடிவிட்டு படுக்கைக்குச் செல்ல நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மறுநாள் விடிந்தபின்பும் உறங்கிக்கொண்டிருந்தோம். என் கைபேசிக்கு வந்த அழைப்புமணிச்சத்தம் கேட்டுத்தான் இருவரும் விழித்தோம். கைபேசியின் திரையில் செங்கதிரின் பெயரைப் பார்த்ததுமே மனம் துணுக்குற்றது. சற்றே பதற்றத்தோடு “வணக்கம் தம்பி” என்று நான் சொல்லி முடிக்கும் முன்பே செங்கதிர் “அப்பா போயிட்டார் அண்ணா” என்றான்.