1974இல் பள்ளியிறுதி வகுப்பில் நான் படித்தபோது எங்களுடைய ஆங்கிலப் பாடத்தில் தாகூரின் கீதாஞ்சலி இடம்பெற்றிருந்தது. எங்கள் ஆங்கில ஆசிரியராக இருந்த ராமனாதன் ஐயா அந்தப் பிரார்த்தனைப் பாட்டின் முதல் வரியைப் படிக்கத் தொடங்கியதுமே உருகிவிட்டார். ஒவ்வொரு சொல்லையும் அவரே சொந்தமாகச் சொல்லி முறையிட்டு மன்றாடுவதுபோல சொன்னார். இரண்டே இரண்டு பத்திகள்தான் எங்களுக்குப் பாடமாக இருந்தன. ஆனால் அப்பாடலை ஒவ்வொரு வரியாக அதை அவர் ஒரு வாரம் முழுதும் நடத்தினார். அப்பாடலின் ஒவ்வொரு சொல்லும் எங்கள் நெஞ்சில் பதிந்துவிட்டது.