2020 பிறந்ததும் சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் நான் எழுதிய சத்தியத்தின் ஆட்சி என்னும் கட்டுரைத்தொகுதி வெளிவந்தது. காந்தியடிகளின் பாதையில் மக்களுக்குத் தொண்டாற்றிய ஆளுமைகளின் கதைகளை அதில் எழுதியிருந்தேன். அந்தப் புத்தகத்தை முடிக்கும் தருணத்தில் இன்னும் எழுதப்பட வேண்டியவரின் கதைகள் மனத்தில் விரிந்தன. பல ஆளுமைகளுடைய பெயர்களும் மிகவும் குறைவான தகவல்களும் மட்டுமே என்னிடம் இருந்தன. என்னிடம் உரையாடும் எல்லா நண்பர்களிடமும் “உங்களுக்குத் தெரியுமா, உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். பத்து பேர்களிடம் கேட்டால் ஒருவரிடமிருந்தாவது ஏதேனும் பயனுள்ள தகவல்கள் கிடைக்காதா என்ற ஏக்கமே அதற்குக் காரணம்.