பெங்களூர் நகரத்தின் நடுப்பகுதியில் இருக்கும் சென்ட்ரல் கல்லூரி மிகப்பெரிய புல்வெளியைக் கொண்ட வளாகம். அந்தக் காலத்தில் இராஜாஜி அந்தக் கல்லூரியில்தான் சட்டப்படிப்பு படித்ததாகச் சொல்வார்கள். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இலக்கிய ஆர்வம் கொண்ட நண்பர்கள் பலரும் அங்குதான் சந்தித்து உரையாடுவோம். தமிழவன், கோ.ராஜாராம், காவ்யா சண்முகசுந்தரம், ஜி.கே.ராமசாமி, ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், கிருஷ்ணசாமி, மகாலிங்கம், முகம்மது அலி, கிழார், தேவராசன் என பலரும் வந்து கலந்துகொள்வார்கள். சமீபத்தில் படித்த புத்தகத்தைப்பற்றி யாராவது ஒருவர் முதலில் பேசி முடித்ததும் அதையொட்டி உரையாடல்கள் வளர்ந்துசெல்லும். இதுதான் கூட்டத்தின் நடைமுறை.