இந்தியா முழுதும் மக்கள் ஆதரவுடன் ஒத்துழையாமை இயக்கம் பரவி நன்கு வேரூன்றிவிட்ட தருணத்தில் காந்தியடிகள் 15.09.1921 அன்று சென்னைக்கு வந்தார். அடுத்தநாள் மாலை கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்று, கதராடைகளை அணிதல், வெளிநாட்டுத் துணிகளை விலக்குதல், தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு ஆகிய திட்டங்களைப்பற்றி விரிவாக உரையாற்றினார். ”நம்மிடையே வாழும் ஐந்தில் ஒரு பகுதியினரை நாம் தீண்டத்தகாதவர்களாக நடத்துவதை விட்டொழிக்கும்போதுதான் உலகம் முழுவதும் நம்மைத் தீண்டத்தகாத தொழுநோயர்களைப்போல நடத்தும் முறையும் ஒழியும்” என்று உறுதியான குரலில் தெரிவித்தார்.