பொதுக்பொதுக்கென்று அழுந்தும் ஈரத்தரையில் கவனமாக அடியெடுத்து வைத்துக் கரையேறினான் சொக்கலிங்கம். அலைவேகத்துக்குத் தகுந்தமாதிரி தாவிக் குதித்தும் விழுந்தும் புரண்டும் கடலில் அரைமணிநேரமாக தொடர்ந்து குளித்ததில் இன்னும்கூட நிதானத்துக்கு வரமுடியாமல் மிதப்பதுபோலவே இருந்தது உடல். காதுக்கு வெகு அருகில் யாரோ உறுமுவதுபோன்ற ஓசை கேட்டது. வேகமாகப் பொங்கிவந்த அலையொன்று அவன் நடந்துவந்த காலடித்தடங்களை அழித்துவிட்டுச் சென்றது. உச்சிவெயிலில் கண்கள் கூசின.