புத்தாயிரத்தாண்டிலிருந்து எழுதத் தொடங்கிய சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் எஸ்.செந்தில்குமார்.
வலிமையான சித்தரிப்பு மொழியும் மிகக்குறைந்த நுட்பமான வரிகள் வழியாகவே பாத்திரங்களை அறிமுகப்படுத்தி நடமாடவைத்துவிடும்
ஆற்றலும் செந்தில்குமாருக்கு கைவந்த கலைகள். தற்செயலாக எங்கோ ஒரு புள்ளியிலிருந்து
தொடங்கி தன்னிச்சையாக பயணப்படுவதுபோல அவருடைய சிறுகதைகள் தோற்றமளித்தாலும், கதையைப் படித்து முடித்ததும் ஓர் அம்பின் பயணத்தைப்போல மிகச்சீரானதாகவும் துல்லியமானதாகவும்
அமைந்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். கடைத்தெரு, ரயில்வே ஸ்டேஷன், பூங்கா, அலுவலகம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, மண்டி என நடமாட்டம் மிகுந்த இடங்களில் கண்ணில் தென்படும் எந்த ஆண் பாத்திரத்தையும்
பெண் பாத்திரத்தையும்
மிகுந்த உயிர்த்துடிப்போடு
தன் கதைக்குள் கச்சிதமாக கொண்டு வந்துவிடும் பேராற்றல் அவருக்கு இருக்கிறது. இது செந்தில்குமாருடைய
மிகப்பெரிய பலம்.