01.08.1920 அன்று காந்தியடிகளால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் இரண்டாண்டுகளுக்கும் மேலாக நாடெங்கும் முழுவிசையுடன் நடைபெற்றது. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அந்த அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைத்தண்டனையை ஏற்றுக்கொண்டனர். எதிர்பாராத விதமாக அப்போராட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் செளரிசெளரா என்னும் இடத்தில் 05.02.1922 அன்று வன்முறை வெடித்தது. மூன்று சத்தியாகிரகிகளும் இருபத்திரண்டு காவலர்களும் அன்றைய வன்முறைக்குப் பலியானார்கள். அதையறிந்து வேதனையுற்ற காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை அக்கணமே நிறுத்தினார். பர்தோலி என்னுமிடத்தில் அவர் ஐந்துநாள் உண்ணாவிரதம் இருந்தார். நாட்டில் சிற்சில இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் மெல்ல மெல்ல அடங்கி அமைதி நிலவத் தொடங்கியது. மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் ஆகியோர் தலைமையில் காங்கிரஸிலிருந்து ஒரு பிரிவு விலகிச் சென்றது. காந்தியடிகளும் பிற தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.