பெங்களூரில் சட்டப்படிப்பை முடித்த ராஜாஜி சேலத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர். 1900 -1920 காலகட்டத்தில் மாகாணத்தின் மிகமுக்கியமான வழக்கறிஞர் அவர். வெற்றிகரமான முறையில் தன் தொழிலை நடத்திவந்தவர். சேலம் நகராட்சியில் உறுப்பினராகவும் செயலாற்றியவர். அப்போது ஆங்கில அரசு கொண்டுவந்த ரெளலட் சட்டத்துக்கு எதிராக நாடு முழுதும் உருவாகிப் பெருகிய எதிர்ப்பலை, சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபடுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. ராஜாஜியின் வாழ்க்கையிலும் அது திருப்பத்தை உருவாக்கியது. காந்தியடிகள் தொடங்கிய சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1930 ஆம் ஆண்டில் உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கி தண்டி யாத்திரையைத் தொடங்கியபோது, தமிழகத்தில் வேதாரண்யம் யாத்திரையை நிகழ்த்தினார் ராஜாஜி.