18.11.1928 அன்று காந்தியடிகள் இலங்கையில் உள்ள மாத்தளைக்குச் சென்றிருந்தார். இராட்டையில் நூல் நூற்றல், கதராடை அணிதல், தீண்டாமை ஒழிப்பு, மதுவை விலக்குதல் ஆகியவற்றை ஒட்டி மக்களிடையில் விழிப்புணர்வை உருவாக்கும்பொருட்டும்
கதர் நிதி திரட்டும்பொருட்டும்
அவர் அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். நிகழ்ச்சி நடைபெறவிருந்த மைதானத்தில் உள்ள மேடை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடைக்கு எதிரில் ஐம்பது அறுபது பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் தொடங்கவில்லை. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்குச் சரியாக மேடைக்கு வந்துவிட்ட காந்தியடிகள் பொழுதை வீணடிக்க விரும்பாமல் மேடையிலேயே கால்களை மடக்கி உட்கார்ந்தபடி மடிமீது ஒரு பலகையை வைத்துக்கொண்டு ஏதோ எழுதத் தொடங்கிவிட்டார். அரைமணி நேரத்தில் கொஞ்சம்கொஞ்சமாக கூட்டம் சேர மைதானமே மனிதர்களால் நிறைந்துவிட்டது.