கற்பதன் வழியாக நாம் அடைவது கல்விஞானம். விடாமுயற்சியும் ஊக்கமும் அதற்கு அவசியம். சொந்தமாகக் கற்க இசைவான வாய்ப்புகள் இல்லாத நிலையில் மற்றவர்கள் வழியாக சிறுகச்சிறுக அறிந்துகொள்வது கேள்விஞானம். அதற்கு பொறுமையும் நட்பார்ந்த சூழலும் அனைவரோடும் நெருங்கிப் பழகும் நல்லிணக்க மனமும் அவசியம். வாழ்வில் தானே நேரில் கண்டதும் கேட்டதுமான நிகழ்ச்சிகள் வழியாகவும் பிறர் சொல்லக் கேட்ட நிகழ்ச்சிகள் வழியாகவும் எங்கெங்கோ துணுக்குத்துணுக்காகப் படித்தும் கேட்டும் தெரிந்துகொண்டவை வழியாகவும் நாம் அடைவது அனுபவஞானம். மூன்று வழிகளும் முக்கியமானவை. மூன்றுமே நம் மனவிரிவுக்கு வழிவகுப்பவை. மனம் விரிந்தால்தான் நம் பார்வை விரியும். மனம் சுருங்கினால் வாழ்க்கையே சுருங்கிவிடும்.