சினிமா என்பது நல்லதொரு கலைவடிவம் என்றொரு கூற்று உண்டு. மாறாக, அதை ஒரு வணிகம் என்று சொல்லக்கூடிய கூற்றும் உண்டு. தொடர்ந்து நகரும் காட்சிகளை மிகச்செறிவாக ஒருங்கிணைத்து உருவாக்கும் சினிமாவில் ஒளி, ஒலி, நடிப்பு, ஒப்பனை, காட்சி, உரையாடல், மெளனம் என எல்லாவற்றையும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் பயன்படுத்தி ஒரு படைப்பை உத்வேகத்துடன் உருவாக்குவதற்கான
வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. அதனால் அதை கலைவடிவம் என்று சொல்வதே பொருந்தும் என்பது முதல் அணியினரின் நிலைபாடு. ஒரு திரைப்படத்தின் தயாரிப்புக்காக
ஏராளமான அளவில் பணத்தைச் செலவுசெய்யவேண்டியிருக்கிறது. ஏராளமாக முதலீடு செய்பவர்கள் ஏராளமாக லாபத்தை எதிர்பார்ப்பது இயற்கையானது. தன் லாபம் பாதிக்காதபடி கலையம்சங்கள் இடம்பெறுவதில் அவர்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஒருபோதும் அது தன் எல்லையைத் தாண்டிவிடக்கூடாது.
அடிப்படையில் அது ஒரு வணிகம் மட்டுமே என்பது இரண்டாவது அணியினரின் நிலைபாடு. பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்
மீண்டும்மீண்டும் தம் நேர்காணல்களில் ’இது ஒரு வணிகம், இது ஒரு வணிகம்’ என்று அழுத்தம் கொடுத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவ்விரண்டு கருத்துகளும் தமிழ்ச்சினிமாவின் தொடக்கத்திலிருந்தே நிலவி வந்திருக்கின்றன.
கலையாளுமை மிக்க இயக்குநர்களும் கலைவிருப்பம் கொண்ட தயாரிப்பாளர்களும்
ஒன்றிணையும் தருணங்களில் கலையொருமை பொருந்திய திரைப்படங்கள் வெளிவருகின்றன.
மற்ற தருணங்களில் வணிகநோக்கத்தை நிறைவேற்றுகிற திரைப்படங்களே அதிக அளவில் வெளிவருகின்றன.
அவற்றை கலையொருமை குறைந்த படங்கள் என்று சொல்லலாம். தமிழில் முதன்முதலாக 1917-ல் மெளனப்படம் எடுக்கப்பட்டு, 1931 முதல் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இன்றளவும் அது வெற்றிகரமாக தொடர்ந்தபடி இருக்கிறது. தமிழ் சினிமாவின் வரலாறு ஒருவகையில் தமிழ் ரசனையின் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவக்கூடும். விட்டல்ராவ் எழுதியிருக்கும் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்’ அந்தப் பார்வையைத் தொகுத்துக்கொள்ளும் விதமாக எழுதப்பட்டுள்ள
முக்கியமான புத்தகமாகும்.