’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்பது மெளனி எழுதிய ‘அழியாச்சுடர்’ என்னும் சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் பிரபலமான வரி. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். ஒரு செயலின் நிழலாக, ஓர் எண்ணத்தின் நிழலாக, ஒரு கதையின் நிழலாக, ஒரு நினைவின் நிழலாக நாம் இம்மண்ணில் நீட்சி கொண்டிருக்கிறோம். நம் அடையாளம் என்பது நாமா அல்லது நம் நிழலா என்ற கேள்விக்கு ஒருவராலும் உடனடியாகப் பதில் சொல்லமுடிவதில்லை. இப்படி ஒரு நிழல்மயக்கம் நம் வாழ்நாள் முழுதும் தொடர்கிறது.