கல்யாண்ஜியின் கவிதைகள் காட்சித்தன்மை நிறைந்தவை. ஒருவகையில் நம் சங்கக்கவிதைகளை நினைவூட்டுபவை. உயிர்ப்பான அபூர்வமான தருணங்கள் அவை. அக்காட்சிகள் தன்னளவில் தீர்மானமான எந்தப் பொருளையும் சுட்டவில்லை. இனிப்பை விழுங்கிய பிறகு நாக்கைக் குழைத்துக்குழைத்து அசைபோட்டு, இனிப்பின் சுவையில் திளைப்பதுபோல கல்யாண்ஜி தீட்டிவைத்திருக்கும் காட்சிச்சித்திரங்களும் அசைபோட்டு திளைக்கத்தக்கவை. திளைக்கும்தோறும் அக்கவிதைகள் புதுப்புது அனுபவங்களையும் அர்த்தங்களையும் வழங்க்கிக்கொண்டே இருக்கின்றன.