கேள்விகள்: அருள்செல்வன்
‘காலவரிசையைப் பின்பற்றாமல் அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நினைவுக்கு வரும் பாத்திரங்களைப்பற்றிய சித்திரங்களையும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அவை அனைத்தும் தொகுக்கப்படும்போது அதற்கு ஒரு சுயசரிதைத்தன்மை அமைந்துவிடுகிறது. அத்தகு புத்தகங்களுக்கு ஒரு வசீகரத்தையும் ஏற்படுத்திவிடுகிறது’ என்கிறார் எழுத்தாளர் பாவண்ணன்.
சாகித்திய அகாதமி, கனடா தமிழ் இலக்கியத்தோட்ட இயல்
விருது, விளக்கு உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். பணிநிமித்தம் காரணமாக பெங்களூருவாசியாகிவிட்ட
அவருடன் ‘ஊரும் எழுத்தும்’ சார்ந்து ஒரு சந்திப்பு.
கேள்வி: நீங்கள் பெங்களூரிலேயே தங்க வேண்டிய சூழல் எப்படி வந்தது?
பாவண்ணன்: தொலைபேசித்துறையின்
கர்நாடக மாநில அலுவலகம் 1981இல் என்னை இளநிலைப் பொறியாளராகத் தேர்ந்தெடுத்தது. ஓராண்டு
கால பயிற்சிக்குப் பிறகு மாவட்ட நகரங்களிடையில் எஸ்.டி.டி.வசதியை ஏற்படுத்தும்பொருட்டு
கேபிள் பதிக்கும் பிரிவில் நான் வேலை செய்தேன். நான் முதலில் வேலை செய்தது பெல்லாரி
மாவட்டத்தில். எட்டாண்டு காலம் ஹூப்ளி, சித்ரதுர்கா, ஷிமோகா, மங்களூர் என பல மாவட்டங்களில்
வேலை செய்த பிறகு எனக்கு பெங்களூரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகும்
பல மாவட்டங்களுக்குச் சென்று வேலைசெய்தேன். ஆனால் பெங்களூரையே வசிப்பிடமாக வைத்துக்கொண்டேன்.
அப்போதுதான் எங்கள் மகன் பிறந்திருந்தான். அவனுடைய கல்வி வாய்ப்புக்கு அந்நகரச்சூழல்
பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். மேலும் அடிக்கடி சொந்த ஊருக்குச் சென்றுவரவும்
அது வசதியாக இருக்கும் என்றும் தோன்றியது. பெங்களூரைத் தேர்ந்தெடுக்க அதுதான் காரணம்.
கேள்வி: உங்கள் இலக்கிய செயல்பாடுகளுக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் உகந்த இடம் சென்னை. அதை விட்டுவிட்டுப் பெங்களூரில் இருப்பது வருத்தமாக இருக்கிறதா?
பாவண்ணன்: என்
செயல்பாடுகளுக்குச் சென்னை பொருத்தமாக இருந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பட்ட
சூழல் அமையாத நிலையில் அதை நினைத்து ஏக்கம் கொள்வதால் என்ன பயன் இருக்கப் போகிறது? மூத்த படைப்பாளிகளான க.நா.சு., வெ.சா., தி.ஜா, ஆதவன்,
இ.பா. போன்றோர் அனைவரும் தில்லியில் பணிசெய்துகொண்டு இலக்கியத்தில் இயங்கியவர்கள் அல்லவா?
எங்கு வாழ்ந்துகொண்டு எழுதினால் என்ன, நாம் நமக்குரிய வாசகர்களைக் கண்டடையலாம் என்னும்
நம்பிக்கை எனக்கு உண்டு. அதனால் வருத்தம் எதுவும் இல்லை.
கேள்வி:
தமிழகத்தின் சென்னை வாழ்க்கை -கர்நாடகத்தின் பெங்களூர் வாழ்க்கை ஒப்பிட முடியுமா?
பாவண்ணன்: இலக்கியம் மட்டுமல்ல, நாடகம்,
திரைப்படம், நடனம், இசை, உணவு வகைகள் சார்ந்து சிறப்பான சுவையுணர்வு கொண்டவன் நான்.
என் சுவைக்கு உகந்தவற்றை நாடித் தேடிப் பெற்று மகிழும் இயல்பும் கொண்டவன். அதே சமயத்தில்
எதையும் எதனுடனும் ஒப்பிட்டு குழப்பிக்கொள்ள மாட்டேன். உயர்வுதாழ்வு கற்பிக்கவும் மாட்டேன்.
எங்கு இருந்தாலும், என் வாழ்க்கையை நான் வாழ்வேன்.
கேள்வி:
தமிழ்நாட்டுடனான நட்பு, தொடர்புகள் எப்படி உள்ளது?
பாவண்ணன்: தமிழ்நாட்டில்
விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் என்னும் ஊர்தான் நான் பிறந்து வளர்ந்த ஊர். என் அம்மா,
சகோதர, சகோதரிகள் அனைவரும் அந்த ஊரைச் சுற்றியே உள்ளனர். நான் பணிநிறைவு பெற்றவன் என்பதால்
பெங்களூரிலேயே இருக்கவேண்டிய தேவை இப்போது குறைந்துவிட்டது. அங்கும் இங்குமாக மாறிமாறித்தான்
வசித்து வருகிறேன். என் நண்பர்களோடும் எழுத்தாள நண்பர்களோடும் நல்ல தொடர்பில் இருக்கிறேன்.
தொடக்க காலத்தில் கடிதங்கள் வழியாக தகவல்களைப் பரிமாறிக்கொண்டு எப்போதாவது ஒருமுறை
ஏதேனும் நிகழ்ச்சியில் சந்தித்து மகிழ்வோம். இப்போது கைபேசியும் இணைய வசதியும் அனைவரையும்
அருகருகே இருப்பவர்களாக உணரவைத்துவிட்டது.
கேள்வி:
உங்கள் இலக்கியச் செயல்பாடுகளுக்கு எந்த வகையில் பெங்களூர் சாதகமாக உதவிகரமாக உள்ளது? அல்லது எந்த அளவுக்குப் பாதகமாக உள்ளது?
பாவண்ணன்: இதுவரை,
ஏறத்தாழ எண்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சொந்தமாக எழுதியிருக்கிறேன். இருபதுக்கும்
மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன். அனைத்தும் இந்த இடத்தில் வசித்தபடி
செய்தவையே. ஏற்கனவே சொன்னதையே நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். எண்ணங்களின் ஆழமும்
செயல்களின் விசையும்தான் ஓர் எழுத்தாளனுக்கு முக்கியமானவை. பிற எதுவுமே பொருட்படுத்தத்தக்கவையல்ல.
கேள்வி: நகரம் குறித்து இதுவரை தமிழில் வெளிவந்திருக்கும்
புத்தகங்களில் நீங்கள் எழுதிய ‘நான் கண்ட பெங்களூரு’ மிகமுக்கியமான படைப்பு. எப்படிப்பட்ட
சூழலில் அதை எழுதினீர்கள்?
பாவண்ணன்: என்
நண்பரும் பதிப்பாசிரியருமான சந்தியா நடராஜன் நகரம் தொடர்பான நூல்களை வெளியிடவேண்டும்
என விரும்பினார். தான் பிறந்து வளர்ந்த மாயவரத்தைக் குறித்து ஒரு புத்தகத்தை அவரே எழுதி
அந்த வரிசையைத் தொடங்கிவைத்தார். அவ்வரிசையில் நான் பெங்களூரைப்பற்றி எழுதிக் கொடுக்கவேண்டும்
என்று கேட்டுக்கொண்டார். ஒரு நகரம் என்பது சிற்சில புவியியல் எல்லைகளுக்கு உட்பட்ட
நிலப்பரப்பு என்றபோதும், மனித வாழ்க்கையால் காலந்தோறும் மாற்றமடைந்துகொண்டே இருக்கும்
இடமாகும். அதுதான் ஒரு நகரத்தின் வரலாறும் பண்பாடும் செழுமையடையும் வழிமுறையாகும்.
என் இயல்பான ஆர்வத்தின் காரணமாக, நான் பெங்களூரில் வசிக்கத் தொடங்கிய காலத்தில் அத்தகு
வழிமுறைகளின் தடங்களைத் தேடித்தேடித் தெரிந்துகொண்டேன். அதனால், நண்பரின் தூண்டுகோலால்
பெங்களூரைப்பற்றிய புத்தகத்தை எழுதத் தொடங்கியதும், அது வாழ்வனுபவக்கட்டுரைகளின் தொகுதியாக
அமைந்துவிட்டது.
கேள்வி: நீங்கள் படைப்பாளராகவும் மட்டுமன்றி,
மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டிருக்கிறீர்கள். படிக்கும் மொழியிலும் மொழியாக்கம்
செய்யும் மொழியிலும் என இருமொழி பயிற்சி உள்ளவர்கள் வெற்றிகரமான மொழிபெயர்ப்பாளராக
விளங்கமுடியுமா?
பாவண்ணன்: இருமொழிப்பயிற்சி
என்பது ஓர் அடிப்படைத்தேவை. ஆனால், ஒரு மொழிபெயர்ப்பாளராக இருப்பதற்கு அது மட்டுமே
போதாது. வாசிப்பு ஆர்வம் வேண்டும். நல்ல ரசனை வேண்டும். தம் வாசிப்பு அனுபவத்தின் வழியாக
சிறப்பான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் அனுபவம் வேண்டும். ஒரு படைப்பின் உட்சரடாக மறைந்திருக்கும்
குரலையும் அது அடையும் வெவ்வேறு பரிமாணங்களையும் உய்த்துணரும் அர்ப்பணிப்பும் வேண்டும்.
ஒரு மாலையைத் தொடுப்பதுபோல, ஒவ்வொரு வாக்கியத்தையும் ஒரு சொல்லின் பொருளை அழகாக வெளிப்படுத்தும்
பொருத்தமான இணைச்சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தொடுக்கவேண்டும். அப்போதுதான் ஒரு மொழிபெயர்ப்பு
சிறப்பாக அமையும்.
கேள்வி: சமீபத்தில் கன்னடத்திலிருந்து தமிழுக்கு
மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் எந்தப் படைப்பை முக்கியமானதாகக் கருதுகிறீர்கள்?
பாவண்ணன்: வசுதேந்த்ரா
மிகச்சிறந்த கன்னட எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, நாவல் என எல்லா வகைமைகளிலும் அவர்
எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்னும் தன்வரலாற்றுத்
தன்மையில் அமைந்த கட்டுரைகளின் தொகுதி தமிழில் கே.நல்லதம்பியின் மொழிபெயர்ப்பில் டூ
ஷோர் ப்ரஸ் என்னும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஒரு மகனின் நினைவில் நீடித்திருக்கும்
தாய் பற்றிய சித்திரங்களின் தொகுப்பென ஒரு கோணத்தில் அப்புத்தகம் தோற்றமளித்தாலும்,
முப்பதாண்டு காலத்தின் கிராமச்சித்திரங்களும் கிராம மனிதர்களின் சித்திரங்களும் ஒருங்கிணைந்த
காட்சித்தொகுப்பாகவே அமைந்துள்ளது. ஒரே அமர்வில் நாலைந்து மணி நேரங்களில் படித்துமுடிக்கத்தக்க
அளவில் மிகச்சிறப்பாக நண்பர் நல்லதம்பி மொழிபெயர்த்துள்ளார்.
கேள்வி: உங்கள் மொழிபெயர்ப்பில் கடந்த தொண்ணூறுகளில்
வெளிவந்த ஊரும் சேரியும், கவர்ன்மெண்ட் பிராமணன் சுயரிதைகளைப் படித்திருக்கிறேன். இப்போதும்
கன்னட மொழியில் சுயசரிதை மரபு தொடர்கிறதா?
பாவண்ணன்: சமூகப்போராளி,
அரசியல்வாதி, ஒரு பணக்கார முதலாளி, அறிவியலாளர் ஆகியோர் எழுதும் சுயசரிதைகளுக்குக்
கிடைக்கும் வரவேற்பைப்போலவே ஓர் எழுத்தாளரின் சுயசரிதைக்கும் கன்னட மொழிச்சூழலில் எப்போதும்
வரவேற்பு உண்டு. குவெம்பு, த.ரா.பேந்த்ரே காலத்திலேயே அது தொடங்கிவிட்டது. சிவராம காரந்த்
எழுதிய ‘பத்து மனத்தின் பித்துமுகங்கள்’ சுயசரிதை இதுவரை விற்றிருக்கும் பதிப்புகளுக்குக் கணக்கே இல்லை. எஸ்.எல்.பைரப்பா, லங்கேஷ், யு.ஆர்.அனந்தமூர்த்தி,
கிரீஷ் கார்னாட், சித்தலிங்கையா, மொகள்ளி கணேஷ் என சுயசரிதை எழுதிய எழுத்தாளர்களின்
பட்டியலைச் சொல்லிக்கொண்டே செல்லலாம். வசுதேந்த்ரா போன்றவர்கள் காலவரிசையைப் பின்பற்றாமல்
அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நினைவுக்கு வரும் பாத்திரங்களைப்பற்றிய
சித்திரங்களையும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அவை அனைத்தும் தொகுக்கப்படும்போது
அதற்கு ஒரு சுயசரிதைத்தன்மை அமைந்துவிடுகிறது. அதுவே அத்தகு புத்தகங்களுக்கு ஒரு வசீகம்
ஏற்பட்டுவிடுகிறது.
(தினமணி
கதிர் – 24.05.2025)