Home

Sunday, 8 June 2025

சிவாவும் ஹரியும் பழைய புத்தகங்களும்

  

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சிக்கு நானும் விட்டல்ராவும் சேர்ந்து செல்வதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தோம். அதற்கு இசைவாக பயணச்சீட்டுகள் கூட பதிந்துவைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஒரு வாரம் முன்னாலேயே சென்னைக்குச் செல்லும் வேலை வந்துவிட்டது. முதலில் பதிவு செய்த பயணச்சீட்டுகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தனியாக பயணச்சீட்டு பதிவு செய்துகொண்டு போய் வந்தேன். விட்டல்ராவ் மட்டும் தொடக்கத்தில் திட்டமிட்ட வகையிலேயே கண்காட்சிக்குச் சென்று ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு திரும்பினார்.

கண்காட்சிக்குச் சென்ற அனுபவங்களைப்பற்றியும் சந்தித்த மனிதர்களைப்பற்றியும் ஒவ்வொரு நாளும் தொலைபேசி வழியாகவே கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னார் விட்டல்ராவ். நேருக்கு நேராக அமர்ந்து முழுவீச்சில் அத்தனையையும் கேட்கவேண்டும் என்று நினைத்தேனே தவிர, அதற்கான நேரத்தை ஒதுக்கி அவர் வீட்டுப்பக்கம் செல்ல சரியான ஒரு வாய்ப்பு அமையவில்லை. ஏதேதோ புற வேலைகள் காரணமாக அலைந்துகொண்டிருந்தேன். ஒரு வாரத்துக்குப் பிறகுதான் ஒரு மாலைப்பொழுதில் அவருடைய வீட்டுப்பக்கமாகச் செல்லும் வேலை வந்தது. அந்த வேலையை வேகவேகமாக முடித்துவிட்டு, அங்கிருந்து நேராக அவருடைய வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

அவருடைய வீட்டின் முன்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.  அவர் வீட்டில் இருக்கிறார் என்பதற்கு அதுதான் அடையாளம்.  தட்டவேண்டிய அவசியமில்லாமல் அதைத் திறந்துகொண்டு உள்ளே சென்றேன். சுற்றுச்சுவருக்கும் வீட்டுச்சுவருக்கும் நடுவில் உள்ள இடைவெளியில் ஒரு பதினைந்து அடி தொலைவு நடந்தால் கிழக்கே பார்த்த வீட்டுக்கதவைப் பார்க்கலாம். அந்தக் கதவு திறந்திருக்க, சுவரருகில் போடப்பட்டிருந்த சாய்வுநாற்காலியில் அமர்ந்தபடி விட்டல்ராவ் கைபேசி வழியாக யாரோ ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் நிமிர்ந்து பார்த்து கண்பார்வையினாலேயே எனக்கு நல்வரவு கூறி, அருகிலிருந்த நாற்காலியின் பக்கம் கையைக் காட்டி உட்காரும்படி சொன்னார். அவர் குறிப்பிட்ட நாற்காலியில் அமர்ந்து அருகிலிருந்த செய்தித்தாளை எடுத்துப் புரட்டத் தொடங்கினேன்.

தொலைபேசி உரையாடலில் விட்டல்ராவ் அதிகமாக எதுவும் பேசவில்லை. மறுமுனையிலிருந்து உரையாடியவர் சொல்வதை மட்டும் காதில் வாங்கியபடி ம் ம் என்று சொல்லிக்கொண்டே தலையாட்டிக்கொண்டிருந்தார். நடுநடுவில் “ஆமாம்மா, ஆமாம்மா” என்றார். ஐந்தாறு நிமிடங்களுக்குப் பிறகு அந்த உரையாடல் நிறைவடைந்தது. விட்டல்ராவ் கைப்பேசியை மேசை மீது வைத்துவிட்டு புன்னகை படிந்த முகத்துடன் திரும்பினார். அந்தப் புன்னகையில் ஒருவித நிறைவு, மகிழ்ச்சி, கொண்டாட்டம், நெருக்கம், பரவசம் எல்லாவற்றையும் பார்க்கமுடிந்தது.

“யாரு சார் இவ்ளோ நேரமா பேசினாங்க? பழைய காலத்து கூட்டாளியா?” என்று கேட்டேன். “இல்லை இல்லை” என்று தலையசைத்தார் விட்டல்ராவ்.

“அப்ப, எழுத்தாளரா?”

“ம்ஹூம்”

“சொந்தக்காரரா?”

“ம்ஹூம்”

“பேத்தியா?”

“இல்லை இல்லை”

அவருக்கும் எனக்கும் பொதுவாகத் தெரிந்த எல்லாப் பெயர்களையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அந்தப் பட்டியலிலேயே இல்லாதவராக இருந்தார் அவர். யாராக இருக்கக்கூடும் என கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருந்தது.

“உங்க முகம் பளபளன்னு மின்னுற அளவுக்கு யாரோ பேசியிருக்காங்கன்னு மட்டும் எனக்குத் தெரியுது. ஆனா யாருனு கண்டுபிடிக்கமுடியலை”

சில கணங்களுக்குப் பிறகு பழைய புன்னகை மாறாத முகத்துடன் “பேசினவங்க பேரோ, முகமோ எதுவுமே எனக்கும் தெரியாது பாவண்ணன். இப்பதான் முதன்முதலா பேசறாங்க” என்றார்.

“அப்படியா?” என்று ஆச்சரியத்தோடு நான் அவரைப் பார்த்தேன். பிறகு “யாராவது புது வாசகரா?” என்று கேட்டேன்.

அதைக் கேட்டு அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘இனிமேல்தானா எனக்கு புதுசா வாசகர்கள் வரப்போறாங்க?” என்று கேட்டார்.  தொடர்ந்து “சமீபத்துல புத்தகக்கண்காட்சிக்குப் போயிருந்தேன் இல்லையா? அப்ப இந்து தமிழ் நாளிதழ்ல வேலை பார்க்கக்கூடிய ஒரு இளைஞரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைச்சது. அருண்பிரசாத்னு பேரு. இதுக்கு முன்னால ரெண்டுமூனு தரம் டெலிபோன்ல மட்டும் பேசியிருக்காரு. அவரையும் நான் கண்காட்சியிலதான் முதன்முதலா பார்த்தேன். அவரோடு பேசிட்டிருந்த சமயத்துல, ஒரு காலத்துல சென்னையில பல இடங்கள்ல செல்வாக்கோடு இருந்த பழைய புத்தகக்கடைகள் பத்தி ஒரு பேச்சு வந்தது. அதைப்பத்தி அவரு நிறைய கேள்வி கேட்டாரு”

“அதைப்பத்தித்தான் நீங்க உங்க வாழ்விலே சில உன்னதங்கள் புத்தகத்துல ஏற்கனவே நிறைய எழுதியிருக்கீங்களே சார்”

”ஆமாமாம். அந்தப் புத்தகத்துல அந்த மாதிரியான கடைகளைப் பத்தி ஏராளமா எழுதியிருக்கேன். நானும் அதைத்தான் அந்தத் தம்பிகிட்ட சொன்னேன்.  அவரும் அந்தப் புத்தகத்தைப் படிச்சதா சொன்னாரு. அதுல இடம்பெறாத கடைகளைப் பத்தி சொல்லுங்க சார்னு கேட்டாரு. அவ்ளோ சுலபமா அவரு என்னை விடறதா தெரியலை. பொழுது போகறதே தெரியாம நெறய நேரம் அதைப்பத்தியே பேசிட்டிருந்தோம். அந்த நேரத்துல ஞாபகத்துக்கு வந்த ஒரு பழைய புத்தகக்கடையைப் பத்தி நான் சொன்னேன். புத்தகத்துல சொல்லாத ஒரு கடை. அவரும் எல்லாத்தையும் பொறுமையா கேட்டுகிட்டாரு. கடைசியா கெளம்பற சமயத்துல இப்ப நீங்க சொன்னதையெல்லாம் ஒரு கட்டுரையா எழுதிக் கொடுக்கமுடியுமான்னு கேட்டாரு. சின்ன வயசுப்புள்ள ஆசைப்பட்டுக் கேட்கும்போது என்னால மறுக்கமுடியலை.”

“புத்தகத்துல சொல்லாத கடையா? அப்ப எனக்கும் தெரியாத கடையாதான் இருக்கும். சொல்லுங்க சொல்லுங்க. நானும் கேட்டுக்கறேன்”

“அந்தக் கடையை சிவா புத்தகக்கடைன்னு நாங்க சொல்வோம்.  மவுண்ட்ரோடுல கீதா ஓட்டலை ஒட்டி ஒரு சின்ன அறைக்குள்ள புத்தகங்களை வச்சிகிட்டு ஒருத்தர் கடை நடத்திட்டிருந்தார். அவரு பேரு சிவா. அதனால அந்தக் கடைக்கு சிவா புத்தகக்கடைன்னு பேரு. பொதுவா அந்த மாதிரியான கடைங்களுக்கு போர்டு இருக்காது”

“சரி”

”ரொம்ப அபூர்வமான புத்தகங்கள்லாம் சிவா பழைய புத்தகக்கடையில கிடைக்கும். நான் அந்தக் கடையில பல முறை பல புத்தகங்கள் வாங்கியிருக்கேன். அந்த அனுபவங்களைத்தான் அருண்பிரசாத்கிட்ட சொன்னேன். அதையே ஒரு கட்டுரையாகவும் எழுதிக் கொடுத்தேன். அருண்பிரசாத்துக்கும் அந்தக் கட்டுரை ரொம்ப பிடிச்சிருந்தது. பத்திரிகையிலயும் அந்தக் கட்டுரை உடனடியா வந்துடுச்சி.”

“அந்தக் கட்டுரையை படிச்சவருதான் இப்ப பேசினாரா?”

“படிச்சவர் இல்லை. சிவா புத்தகக்கக்கடையை இப்ப நடத்திட்டிருக்கிறவரு. சிவாவிடைய மனைவி.”

ஒருகணம் திகைப்போடு நான் அவரையே பார்த்தேன். இப்படியும் நடக்கும் என்றெல்லாம் என்னால் யோசித்துக்கூட பார்க்கமுடியவில்லை. i“என்ன சார் சொல்றீங்க?” என்று மெதுவாகக் கேட்டேன்.

“ஆமாம் பாவண்ணன். சிவா மனைவிதான் பேசினாங்க. ரெண்டுமூனு நாளா கடைக்கு நிறைய புது கஸ்டமர்ஸ் வந்திருக்காங்க போல. அந்தப் புத்தகம் இருக்குதா, இந்தப் புத்தகம் இருக்குதான்னு புத்தகத்துடைய பேரைச் சொல்லி  கேட்டு வாங்கிட்டு போயிருக்காங்க. ஆரம்பத்துல இது எல்லாமே வியாபாரத்துல இயற்கைன்னு நெனைச்சிருக்காங்க. ஆனா வரக்கூடிய ஆட்கள் எல்லாருமே புதுசா இருந்ததாலும் அவுங்க கேட்டு வாங்கிட்டு போன புத்தகங்கள் எல்லாமே ஆர்ட் அன்ட் கல்ச்சர் சம்பந்தப்பட்டதா இருந்ததாலும்  அவுங்களுக்கு ஏதோ ஒரு சந்தேகம் வந்திருக்கு.”

“வரத்தானே செய்யும். அதுதானே இயற்கை”

“ஆமாம். அதுக்கப்புறம் ஆர்ட் சம்பந்தமா புத்தகம் கேட்டு வந்த ஒரு கஸ்டமர்கிட்ட நேரிடையாவே இந்தப் புத்தகம் இந்தக் கடையில  கிடைக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சிதுன்னு கேட்டிருக்காங்க. அப்ப அவரு உடனே இந்த மாதிரி இந்து பத்திரிகையில இந்தப் புத்தகக்கடையைப் பத்தி விட்டல்ராவ்னு ஒருத்தரு கட்டுரை எழுதியிருக்காரு. அவர் அந்தக் காலத்துல என்னென்ன புத்தகங்களை இந்தக் கடையில வாங்கினாருங்கற விவரத்தையெல்லாம் அந்தக் கட்டுரையில எழுதியிருக்காரு. அதைப் பார்த்த பிறகுதான் இப்படிப்பட்ட ஆர்ட் அண்ட் கல்ச்சர், போட்டோக்ராபி தொடர்பான புத்தகங்களை இங்க வாங்கலாம்ன்னு தெரிஞ்சிகிட்டு வந்தேன்னு சொன்னாராம். அந்த அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். சந்தோஷம். நம்ம கடையைப்பத்தி யாரு எழுதியிருக்காங்க, என்ன எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆர்வம் வந்துடுச்சி.  அக்கம்பக்கம் பேப்பர் வாங்கற ஆளுங்ககிட்ட கேட்டு எப்படியோ அந்தப் பத்திரிகையில வந்த கட்டுரையை கண்டுபிடிச்சி படிச்சிட்டாங்க. அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அதுக்கப்புறம் பத்திரிகை ஆபீஸ்க்கு போன் போட்டு எப்படியோ என்னுடைய போன் நெம்பரயும் கேட்டு வாங்கிட்டாங்க.”

”அவுங்கதான் இவ்ளோ நேரமா பேசிட்டிருந்தாங்களா?”.

“ஆமாமாம். சிவாவை எப்படி தெரியும், அவருக்கும்  எனக்கும் எப்படிப்பட்ட தொடர்புன்னு ஏதேதோ கேட்டாங்க. சிவா இப்ப இல்லையாம். செத்துப்போயிட்டாராம்,  கேக்கறதுக்கு எனக்கே சங்கடமா இருந்தது. செத்துப்போன கணவரைப்பத்தி தெரிஞ்சிக்கணும்ங்கற ஆசை அவுங்களுக்கு. அவுங்க மனசு நெறயறமாதிரி நாலு வார்த்தை பேசினேன். நான் சொன்னதைக் கேட்டு அந்த அம்மாவுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். சென்னைக்கு வரும்போது அவசியம் ஒருமுறை நம்ம கடைக்கு வரணும் சார்னு சொன்னாங்க.. நானும் சரினு சொல்லியிருக்கேன். ஒரே ஒரு சின்ன செய்தி, அதனோடு சம்பந்தப்பட்டவங்களுக்கு எவ்ளோ சந்தோஷத்தைக் கொடுக்குது பார்த்தீங்களா? இப்படிப்பட்ட சந்தோஷத்தை கண் நிறைய பார்த்துப் பார்த்து மனசை நிறைச்சிக்கறதுலதான் எழுத்தாளனுடைய சந்தோஷம் இருக்குது உண்மையிலயே இன்னைய நாள், என்னுடைய சிறந்த நாட்கள்ல ஒன்னுன்னு சொல்லலாம்.”

அந்த நிறைவில் அவர் முகம் கனிந்திருந்தது. மனிதர்களை மிக எளிதாக நெருக்கமாக இணைத்துவிடும் எழுத்தின் ஆற்றலை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. அப்படிப்பட்ட எழுத்தோடு நாமும் ஏதோ ஒரு வகையில் தொடர்புகொண்டிருக்கிறோம் என்னும் எண்ணமே பெருமையாக உணரச் செய்தது.

சூழல் மெளனத்தை நோக்கிக் குவிவதைத் தடுக்கும் விதமாக “சரி சார், இப்ப எனக்குச் சொல்லுங்க. அந்தச் சிவா யாரு? சிவாவை நீங்க எப்படி தெரிஞ்சிகிட்டீங்க? அவருடைய பழைய புத்தகக் கடையில இப்படிப்பட்ட புத்தகங்களை வாங்கலாம்ன்னு உங்களுக்கு எப்படி தெரிய வந்திச்சி?” என்று கேள்விகளை அடுக்கினேன்.

“இருங்க இருங்க. கேள்விகளை மொத்தமா அடுக்காதீங்க. ஒவ்வொரு பதிலா சொல்றேன்” என்று புன்னகைத்தபடி கையை உயர்த்தினார் விட்டல்ராவ். நானும் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தேன்.

“சிவா யாருன்னு சொல்றதுக்கு முன்னால நான் ஹரின்னு ஒருத்தரைப்பத்தி சொல்லணும். அதுக்கப்புறம்தான் சிவாவைப் பத்தி சொல்லமுடியும். ஹரி இல்லாம சிவா கிடையாது”

“நீங்க சொல்றது ரொம்ப இன்டரிஸ்டிங்கா இருக்குது சார். அது யாரு ஹரி? இதுவரைக்கும் கேக்காத பெயரா இருக்குது. சொல்லுங்க”

“சொல்றேன் சொல்றேன்” என்றபடி அணிந்திருந்த கண்ணாடியை எடுத்து அருகில் இருந்த ஒரு துணியால் அழுத்தித் துடைத்தார். விழியோரங்களில் கசிந்து ஒட்டிக்கொண்டிருந்த நீர்த்துளிகளையும் துடைத்துவிட்டு தொண்டையைச் செருமி குரலைச் சரிசெய்துகொண்டார்.

“ஆதம்பாக்கத்துல நாங்க இருந்த சமயத்துல வழக்கமா ஒரு சூப்பர் மார்க்கெட்லதான் எங்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்குவோம். பொருள் ரொம்ப தரமானதா இருக்கும். நம்பி வாங்கலாம். விலையும் ரொம்ப நியாயமா இருக்கும். அதனால அந்தக் கடையிலயே வாடிக்கையா வாங்கிட்டிருந்தோம். ஒரு இளைஞர்தான் அந்தக் கடையை நடத்திட்டிருந்தார். அவரு வயசு இருபத்தஞ்சிலேர்ந்து முப்பதுக்குள்ளதான் இருக்கும். அந்தக் காலத்துல என் வயசுல பாதி இருக்கும்ன்னு வச்சிக்குங்களேன்.”

“எந்த வருஷம் சார்?”

“அப்ப ரெண்டாயிரம்  இன்னும் தொடங்கலை. இன்னும் ஆறேழு மாசம் பாக்கி இருந்திச்சி. அந்த மாதிரியான காலகட்டம்”

“அப்படின்னா, நீங்க வேலையிலேர்ந்து ரிட்டயராகறதுக்கு ரெண்டுமூனு வருஷங்களுக்கு முந்தைய சமயம்னு சொல்லலாமா?”

“தாராளமா சொல்லலாம். அந்தக் காலத்துல எப்பவும் நானும் என் மனைவியும் சேர்ந்துதான் அந்த மார்க்கெட்டுக்குப் போவோம். பல நேரங்கள்ல அந்த இளைஞர்தான் பணம் வாங்கற இடத்துல இருப்பாரு. பொருளை வாங்கிட்டு அவருகிட்ட பணத்தை எண்ணிக் குடுத்துட்டு வந்துடுவோம். அந்த இளைஞர் எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பார்.  புன்னகையோடு பணத்தை வாங்கிட்டு சில்லறை கொடுப்பாரு. தொடர்ச்சியா நான் அந்தக் கடைக்கு வர்ரதை கவனிச்சிட்டு ஒரு தரம் எந்த டிப்பார்ட்மென்ட்ல சார் வேலை செய்றீங்கன்னு கேட்டாரு. நானும் டெலிபோன்ஸ்ல இருக்கேன்னு பதில் சொன்னேன். சிரிச்சிகிட்டே தலையை ஆட்டிகிட்டாரு. அவ்ளோதான். அதுக்கு மேல எதுவும் பேசலை. அந்த அளவுக்குத்தான் எங்க பழக்கம் அந்தக் காலத்துல இருந்தது. அவரு பேரைக்கூட நான் தெரிஞ்சிகிட்டதில்லை.”

“சரி”

“ஒருநாள் ஆபீஸ்க்கு லீவ் போட்டுகிட்டு நான் திடீர்னு கேமிராவை தூக்கிகிட்டு கல்பாக்கத்துக்குப் பக்கத்துல சட்ராஸ்க்குக் கெளம்பி போயிட்டேன். அந்தக் காலத்துல அப்பப்ப அப்படி பித்து பிடிச்சிடும்”

“சட்ராஸா?”

“ஆமாம். மெட்ராஸ் மாதிரி சட்ராஸ். அந்தக் காலத்துல வெளிநாட்டுக்காரன் வச்ச பேரு”

“ரொம்ப விசித்திரமா இருக்குதே? நான் கேள்விப்பட்டதே இல்லை. என்ன சார் பேரு இது?”

“கல்பாக்கத்துக்குப் பக்கத்துல கடற்கரையை ஒட்டி சதுரங்கப்பட்டனம்னு ஒரு இடம் இருக்குது பாவண்ணன். பதினேழாம் நூற்றாண்டுல அந்த இடம் டச்சுக்காரங்ககிட்ட ஒரு துறைமுகமா இருந்திருக்குது. அவுங்க அந்த இடத்துல செங்கல்லால ஒரு பெரிய கோட்டை கட்டினாங்க. டேனிஷ்கோட்டைன்னு சொல்வாங்க. அந்தக் கோட்டைக்குள்ள அவுங்க விக்கறதுக்காக கொண்டுவந்த பொருட்களையும் வாங்கிய பொருட்களையும் பாதுகாப்பா வச்சிக்க ஒரு பெரிய கிடங்கு கட்டி வச்சிகிட்டாங்க. ஒரு நூறு வருஷ காலம் அவுங்க பயன்பாட்டுல அந்தக் கோட்டை இருந்திருக்குது. பத்தொன்பதாம் நூறாண்டு தொடக்கத்துல இங்கிலீஷ்காரங்களுக்கும் டச்சுக்காரங்களுக்கும் நடுவுல ஒரு சண்டை நடந்திச்சி. அப்ப கோட்டை இங்கிலீஷ்காரங்க கைக்கு போயிடுச்சி. சண்டையில இடிஞ்சது கொஞ்சம். கால ஓட்டத்துல இடிஞ்சது கொஞ்சம். அதுபோக, மிச்சம் இருக்கிற கோட்டைப் பகுதிகள் இப்ப சுதந்திர இந்தியாவில தொல்லியல் துறையுடைய கட்டுப்பாட்டுல இருக்குது. தானியக்கிடங்கு, பார்வையாளர் மாடம், நடனக்கூடம், நுழைவாயில் பீரங்கி, சுற்றுச்சுவர் எல்லாம் அப்படி அப்படியே இருக்குது. அதனுடைய பழைய அழகு இன்னும் போகலை. ஒரு நாள் முழுக்க அந்த இடத்தை சுத்திச்சுத்தி பார்த்தேன். என்கிட்ட அப்ப ஆஷிகா 2000னு ஒரு கேமிரா இருந்தது. ஜூம் அட்டாச்சிடு கேமிரா. வளைச்சி வளைச்சி எல்லா இடங்களையும் பல கோணங்கள்ல படம் எடுத்தேன்.”

“சரி”

“ட்ரிப் முடிஞ்சி திரும்பி வந்த பிறகு எனக்குத் தெரிஞ்ச ஸ்டுடியோவுல கேமிராவைக் கொடுத்து க்வாலிட்டியோட இருக்கிற படங்களை ப்ரிண்ட் போட்டுத்தரச் சொன்னேன். அந்த ஸ்டுடியோகாரர் ரொம்ப கலைரசனை உள்ளவர். அவரே அழகான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ப்ரிண்ட் போட்டு புதுசா ஒரு ஆல்பத்துக்குள்ள அடுக்கிவச்சி குடுத்தாரு.”

“சரி”

“அந்த ஆல்பத்தை வாங்கி பைக்குள்ள வச்சிகிட்டு, அப்படியே வீட்டுக்கு சில சாமான்களை வாங்கறதுக்காக அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தேன். என் கையில போட்டோ ஆல்பத்தைப் பார்த்துட்டு, அந்தக் கடைக்காரர் தம்பி என்ன சார் ஆல்பம் இது? ஏதாவது வீட்டு விசேஷமான்னு  கேட்டுகிட்டே ஆல்பத்தைப் பார்க்க கை நீட்டுனாரு. வீட்டு விசேஷம்லாம் இல்லை. சும்மா ஒரு சுற்றுலா போய்வந்தேன். அங்க எடுத்த படங்கள்னு சொல்லிகிட்டே தயக்கத்தோடு ஆல்பத்தை அவருகிட்ட கொடுத்தேன்.”

“என்ன சொன்னாரு?”

“டேனிஷ்கோட்டை படத்தைப் பார்த்ததுமே சட்டுனு ரெண்டடி முன்னால வந்து என் கையை புடிச்சிகிட்டாரு. அவர் முகம் திடீர்னு பளபளன்னு மலர்ந்துபோயிடுச்சி. சத்ராஸ்க்கு போயிருந்தீங்களா சார்னு கேட்டாரு. அவருக்கு எப்படி அந்தப் பேரு தெரிஞ்சதுன்னு நான் திகைச்சிபோய் நின்னுட்டேன். அதுக்குள்ள அவரு ஒவ்வொரு படத்தையும் தொட்டுத் தொட்டு அவருக்கு தெரிஞ்ச வரலாற்று விஷயங்களையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. நான் அப்படியே ஆச்சரியத்துல்ல உறைஞ்சிபோய் நின்னுட்டேன். ஒரு மார்க்கெட் நடத்தற இளைஞருக்கு இவ்வளவு வரலாற்றுஞானம் இருக்குதேனு நினைச்சி சந்தோஷப்பட்டேன்.”

“சரி”

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்னு நான் அவருகிட்ட மெதுவா பேச்சு கொடுத்தேன்.  அவரு சிரிச்சிகிட்டே எனக்கும் இந்த மாதிரி வரலாற்றுப்பெருமை உள்ள பழைய ஊர்களை, கோட்டைகளை தேடித்தேடிப் பார்க்கறதுல ஆர்வம் உண்டு சார். என்கிட்டயும் ஒரு கேமிரா இருக்குது 35எ.எம்.எஸ்.ஆல்.ஆர் கேமிரா. நானும் இப்படி கோட்டை கோட்டையா சுத்தி ஏராளம படம் எடுத்து ஆல்பம் போட்டு வச்சிருக்கேன்னு சொன்னாரு. அதுக்கு முன்னால நாங்க ரெண்டு பேரும் பல முறை பார்த்திருந்தாலும் அன்னைக்குத்தான் முறையா ஒருவருக்கொருத்தர் அறிமுகமானோம். அப்பதான் நானும் அவருகிட்ட எழுத்தாளர்னு சொல்லிகிட்டேன். அந்த இளைஞர் பேருதான் ஹரி.”

“நல்ல விஷயம் தெரிஞ்ச நண்பர்தான்”

“ஆமாம். அதுல சந்தேகமே இல்லை. அதுக்கப்புறம் நாங்க அடிக்கடி பார்த்துகிட்டோம். என்னுடைய புத்தகங்களையெல்லாம் அவரு கேட்டு வாங்கிப் படிச்சாரு. அவருடைய போட்டோ ஆல்பங்களையெல்லாம் நானும் வாங்கிப் பார்த்தேன். என்னுடைய ஆர்வமும் அவருடைய ஆர்வமும் ஒத்துப்போனதால, எங்களுக்கு நடுவுல ஒரு நல்ல புரிதல் உருவாச்சி. நாங்க ரெண்டு பேரும் ஒன்னா வெளியே போனா, அப்பாவும் புள்ளையும் போல இருக்குதுன்னு சொல்வாங்க. அதுக்கேத்த மாதிரி அவரு எப்பவும் என்னை நயினா நயினான்னுதான் கூப்புடுவாரு”

“அந்த அளவுக்கு ஆர்வம் இருக்கறவரு மார்க்கெட் வேலையில எப்படி இறங்கினாரு?”

“எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. ஆனா ஹரியே ஒருநாள் எல்லா விஷயங்களையும் தெளிவா சொன்னாரு. ஆந்திராவை பூர்வீகமா கொண்ட  குடும்பத்துல பொறந்தவரு அவரு. நிஜாம் காலத்துல ரொம்ப செல்வாக்கோடு வாழ்ந்த குடும்பம். அந்தக் குடும்பத்துக்கும் நிஜாம் அரசாங்கத்துக்கும் இடையில ஏதோ ஒரு பிரச்சினை. அதனால் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ரஷ்யாவுக்குப் போயிட்டாங்க. அண்ணன் பேரு சர்வேசம். தம்பி பேரு விஸ்வேசம். அந்தக் குடும்பத்துல அப்படி பேர் வைப்பாங்க போல. சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்கள் எல்லாம் இந்தியாவோடு இணைஞ்ச பிறகுதான் அவுங்க இந்தியாவுக்குத் திரும்பி வந்தாங்க. ஹரி அந்தக் குடும்பத்துல பொறந்தவரு. ஹரியுடைய அண்ணன்  ஆந்திராவுல பெரிய ஐபிஎஸ் ஆபீசர். ஹரி காலேஜ்ல ரெண்டு எம்.ஏ. டிகிரி வாங்கியவர். தெலுங்குல ஒரு எம்.ஏ., இங்கிலீஷ்ல ஒரு எம்.ஏ. அவருக்கு இருந்த தகுதிக்கு, அவரு நெனைச்சிருந்தா எங்கனா காலேஜ், யுனிவர்சிட்டின்னு வேலை தேடி போயிருக்கலாம். ஆனா அவருக்கு அதுல விருப்பமில்லை. அமைதியா சம்பாதிக்க ஒரு வழி கிடைச்சா போதும்னு நெனச்சி இந்த மார்க்கெட்ட தொடங்கி நடத்தினாரு. அவருடைய சொந்த தாய்மாமா கூட தமிழ்நாட்டுல கலெக்டரா இருந்தாரு. சந்திரமோகன்னு பேரு. ஜெயலலிதா சி.எம்.மா இருந்த சமயத்துல அவுங்களுடைய செயலாளரா வேதா இல்லத்துலயே சில காலம் தங்கியிருந்தவரு. அதுக்கப்புறம் திருவள்ளூர் கலெக்டரா மாற்றல் வாங்கிகிட்டு போயிட்டாரு.”

“ஹரியுடைய கதைக்குப் பின்னால இவ்வளவு பெரிய வரலாறா? ஆச்சரியமா இருக்குது சார்”

“இன்னும் ஆச்சரியப்பட நிறைய விஷயங்கள் இருக்குது பாவண்ணன். அவரும் நானும் பழக ஆரம்பிச்சதும், ஒவ்வொரு வார இறுதியிலயும் சுற்றுலா பொறப்பட்டு போகலாம்ன்னு புதுசு புதுசா திட்டம்  போட ஆரம்பிச்சிட்டோம். செஞ்சி, சந்திரகிரி, காஞ்சிபுரம், ஹம்ப்பின்னு மனம் போன போக்குல போய் ரெண்டு மூனு நாள் தங்கி, கேமிராவுல படம் புடிச்சிகிட்டு திரும்பி வந்தோம். அவரு சுட்டிக் காட்டுற படத்தை நான் எடுப்பேன். நான் சுட்டிக் காட்டுற படத்தை அவரு எடுப்பாரு. திரும்பி வந்ததும் உடனே ஸ்டுடியோவுக்கு போய் கேமிராவைக் கொடுத்துட்டு வந்திருவோம். நல்ல படங்களை ஸ்டுடியோகாரரே பிரிண்ட் போட்டு ஆல்பம் போட்டு வச்சிருப்பாரு.. நாங்க அதை வீட்டுல சேர்த்துவச்சிக்குவோம்.”

“சரி”

“ஒருமுறை நானும் அவரும் காஞ்சிபுரத்துல கோயில் சிற்பங்களைப் பார்க்கறதுக்காக பஸ்ல போயிருந்தோம். அன்னைக்குத்தான் ஜெயலலிதா ஆட்சியில கலைஞர் கைதான நாள். அது எதுவும் தெரியாமலேயே பஸ் ஏறிப் போயிட்டோம். நாங்க காஞ்சிபுரத்துக்கு போன பஸ்தான் கடைசி பஸ். எல்லா இடங்கள்லயும் கடையடைப்பு. ஊருக்குள்ள நடமாட்டமே இல்லை. எங்க பார்த்தாலும் மயான அமைதி. எப்படியோ ஒரு லாட்ஜ் கண்டுபிடிச்சி தங்கினோம். அவரே எங்கிருந்தோ எங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செஞ்சிக் குடுத்தாரு. ரெண்டுமூனு நாள் அங்கயே தங்கிட்டோம். அந்த ரெண்டு நாளும் சிற்பங்களைப் பார்த்து படம் எடுத்ததுதான்  நாங்க செஞ்ச ஒரே வேலை. ஹரிக்கும் எனக்கும் மறக்கமுடியாத அனுபவம் அது”

“சரி”

“ஒருநாள் நான் கடைக்கு போயிருந்த சமயத்துல ஹரி ஏதோ ஒரு புத்தகத்தை வச்சிகிட்டு படிச்சிட்டிருந்தாரு. கிட்ட போய் என்ன ஹரி படிக்கிறீங்கன்னு நான் கேட்டேன். உடனே அவரு இந்தா நயினா, நீங்களே பாருங்க நயினான்னு என்கிட்டயே அந்தப் புத்தகத்தைக் கொடுத்திட்டாரு. கையில வாங்கியதுமே தெரிஞ்சிட்டுது. பழைய தாஜ் மேகசைன். தாஜ் ஓட்டல்காரங்க அப்படி ஒரு பத்திரிகையை வழவழ தாள்ல அந்தக் காலத்துல கொண்டுவந்தாங்க. கலை, ஓவியம், சிற்பம் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்  அதுல ஏராளமா இருக்கும். பல முக்கியமான ஆய்வாளர்கள் எழுதுவாங்க. உலக வரலாற்றை தெரிஞ்சிக்கறதுக்கு வசதியா வெவ்வேறு பொருளடக்கம் சார்ந்து பலவேறு புகைப்படங்கள் கொண்ட சிறப்புப்பகுதியை அவுங்க கொண்டு வருவாங்க. நம்ம தமிழில காணக் கண்கோடி வேண்டும்னு  ஒரு சொல்லு உண்டு இல்லையா? உண்மையிலயே அப்படிப்பட்ட புத்தகங்களை பார்க்கறதுக்கு கண்கோடி வேண்டும்னுதான் சொல்லத் தோணுது”

“சரி”

“அந்தப் புத்தகம் புது புத்தகம் மாதிரியாவும் தெரியலை.. பழைய புத்தகம் மாதிரியாவும் தெரியலை. எங்க வாங்கினீங்க ஹரின்னு தயக்கத்தோடு கேட்டேன். அதுக்கு அவரு சண்டே மார்க்கெட்ல வாங்கனேன் நயினான்னு சொன்னாரு. சண்டே மார்க்கெட்னு பொதுவா சொன்னா எப்படி ஹரி? இடத்துடைய பேரைச் சொல்லுங்கன்னு கேட்டேன். அப்பதான் அவரு மவுண்ட் ரோடுல கீதா ஓட்டல் பக்கத்துல இந்தியா ஏர்லைன்ஸ் ஆபீஸ்க்குக் கீழ மூலையில இருக்கிற பழைய புத்தகக்கடையில வாங்கினேன்னு விவரம் சொன்னாரு. அங்க போய் சிவா பழைய புத்தகக்கடைன்னு யாரைக் கேட்டாலும் வழியைச் சொல்லிடுவாங்கன்னு சொன்னாரு.”

“துப்பறியும் கதை மாதிரி ஒவ்வொரு தகவலும் சுவாரசியமா இருக்குது சார்.”

“ஒருநாள் ஹரியும் நானும் ஒன்னா சேந்து அந்தக் கடைக்குப் போனோம். சின்ன கடைதான். அதுக்கு நடுவுல நிக்கறதுக்குக் கூட இடமில்லாம எல்லா இடங்கள்லயும் புத்தகங்களை கட்டு கட்டி வச்சிருந்தாரு. ஹரி என்னை சிவாகிட்ட அறிமுகப்படுத்தினாரு. சார் எழுத்தாளர், அவரும் இனிமேல இங்க புத்தகம் வாங்க வருவாங்கன்னு சொன்னாரு. நானும் சிவாவும் ஒருத்தருக்கொருத்தர் வணக்கம் சொல்லிகிட்டோம். சிவா அப்படித்தான் எனக்கு அறிமுகமானாரு”

“நல்ல நட்புகள் எல்லாம் அப்படித்தான் சார் அமையும்.”

“எங்களுக்கு கலை, பண்பாடு, புகைப்படம், சிற்பங்கள் சார்ந்த புத்தகங்கள் மேல ஆர்வம் இருந்ததால, அப்படிப்பட்ட புத்தகங்களையே தேடித்தேடி பார்த்தோம். ஏராளமான தாஜ் மேகசைன்கள் கட்டுகட்டா வச்சிருந்தாரு. அந்தக் காலத்துல தாஜ் மாதிரியே பிரபலமான ஓட்டல்காரங்க SOMA, CHOLA MARATTAN, LIFE, NAMASKAR ன்னு  பல பத்திரிகைகளைக் கொண்டு வந்தாங்க. வெளி மார்க்கெட்ல அதெல்லாம் கிடைக்கவே கிடைக்காது. ஒவ்வொரு பத்திரிகையிலும் பிரமாதமான கட்டுரைகளும் புகைப்படங்களும் இருக்கும். ஒவ்வொரு பத்திரிகையையும் பார்க்கப் பார்க்க பொழுது போவதே தெரியாது. ஏதோ ஒரு இடத்துலேர்ந்து  சிவா அந்தப் பத்திரிகைகளை வாங்கி வந்து வித்தாரு. அதே மாதிரி INDIAN AIRLINES, AIR INDIA கூட அப்படிப்பட்ட பத்திரிகைகளை போட்டாங்க. என் மனைவியுடைய தங்கச்சி ஏர்லைன்ஸ்ல வேலை செஞ்சாங்க. அதனால நான் அந்தப் பத்திரிகைகளை ஏற்கனவே பார்த்திருந்தேன்.”

“அன்னையிலேர்ந்து சிவா கடைக்கு நீங்களும் வாடிக்கையாளரா மாறிட்டீங்களா?”

“ஆமாம். தாஜ் பத்திரிகை மேல எனக்கும் ஒரு மயக்கம் வந்துடிச்சி. நானும் பணம் இருக்கும்போதெல்லாம் ஒன்னொன்னா வாங்கி வாங்கி சேர்த்துவைக்க ஆரம்பிச்சேன். நான் ரெகுலரா வாங்கறேன்னு தெரிஞ்சதும் சிவா எனக்காகவே புதுசா வரக்கூடிய அந்தப் பத்திரிகைகள எடுத்து வச்சி கொடுக்க ஆரம்பிச்சாரு”

“அவரும் பெரிய ரசனைக்காரருதான் போல”

“நிச்சயமா. அதுல சந்தேகமே இல்லை. கல்கத்தா, டில்லி, பம்பாய், மெட்ராஸ்னு இந்தியாவுல பிரபலமான ஒவ்வொரு ஊருடைய வரலாற்றையும் புரிஞ்சிக்கிற மாதிரி  அற்புதமான படங்களோடும் கட்டுரைகளோடும் தாஜ் பத்திரிகை வந்தது. அதையெல்லாம் சிவாதான் எனக்காக எடுத்து வச்சிருந்து கொடுத்தாரு. ஹரியுடைய அறிமுகம் கிடைக்கலைன்னா, நான் சிவாவை பார்த்திருக்கவே முடியாது. சிவா இல்லைன்னா அந்தப் பத்திரிகைகளையும் நான் பார்த்திருக்க முடியாது.”

விட்டல்ராவ் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருந்தார். அவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை. எப்படி உரையாடலைத் தொடர்வது என்று புரியாமல் எனக்கும் தவிப்பாக இருந்தது. சில கணங்களுக்குப் பிறகு  பொதுவாக “எல்லாமே இயற்கையுடைய கருணைதான் சார். யாரை யாரோடு சேர்த்துவைக்கணும்ன்னு அதுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்குது சார்” என்றேன். எதையும் திட்டமிட்டு நான் அந்தச் சொற்களைச் சொல்லவில்லை. ஒரு வேகத்தில் இயல்பாகவே அவற்றைச் சொல்லிவிட்டேன். ஆனால் அச்சொற்கள் அவரை மீண்டும் சமநிலைக்குத் திரும்பிவரச் செய்துவிட்டன. “நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை பாவண்ணன்” என்றார்.

தொடர்ந்து “ஒருமுறை நான் தனியா சிவா கடைக்குப் போயிருந்தேன். அப்ப புதுசா வந்து எறங்குன ஒரு புத்தகக்கட்டை எனக்குக் காட்டினாரு சிவா. ஒரு பத்து புத்தகம் கொண்ட பெரிய கட்டு. ஒவ்வொன்னையும் அழகா பைண்டிங் செஞ்சி வச்சிருந்தாங்க. உங்களுக்குத் தேவைப்படுமா பாருங்கன்னு சொன்னாரு” என்றார்.

“என்ன பத்திரிகை?”

“அந்தக் கட்டுலேருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் பிரிச்சி பார்த்தேன். எல்லாமே லைஃப் பத்திரிகையுடைய ஸ்பெஷல் இஷ்யூஸ். அந்தக் காலத்துல நேஷனல் மேகஸைன் அவார்ட் வாங்கிய பத்திரிகை லைஃப். அந்தப் பத்திரிகையுடைய கொள்கையே புகைப்படம் வழியாக இருபதாம் நூற்றாண்டை ஆவணப்படுத்தறதுங்கறதுதான். அந்த மேகசைன், எழுபதுகள்ல த ஸ்பிரிட் ஆஃப் இஸ்ரேல் த இயர் இன் பிக்ச்சர்ஸ், ரிமார்க்கபள் அமெரிக்கன் வுமன், வேர்ல்ட்வார் த்ரூ போட்டோஸ்னு பலவிதமான தலைப்புகள்ல ஒரு பத்து ஸ்பெஷல் இஷ்யூஸ் போட்டாங்க. ஒவ்வொன்னும் தனித்தனியா பார்க்கறதுக்கு ஒரு பெரிய புத்தகம் மாதிரி இருக்கும். பைண்டிங் செய்யபப்ட்ட அந்த ஸ்பெஷல் இஷ்யூஸ்ங்களைத்தான் யாரோ கொண்டுவந்து அங்க போட்டுட்டு போயிருக்காங்க.”

“பத்தும் ஸ்பெஷல் இஷ்யூஸ்தானா?”

“மொத்தத்துல பத்து ஸ்பெஷல் இஷ்யூஸ்தான் வந்திருந்தது. அதை வாங்கிப் படிச்சவங்க பாதுகாப்பா வச்சிக்கணும்ங்கற எண்ணத்துலதான் பைண்டிங்லாம் செஞ்சிவச்சிருக்காங்க. என்ன காரணத்தாலோ, எல்லாம் பழைய புத்தகக்கடைக்கு வந்து சேர்ந்துட்டுது”

”சிவா என்ன சொன்னாரு?”

”புத்தகக்கட்டு முன்னால என்னை அழைச்சிம்போய் நிக்க வச்சிட்டு புடிச்சிருக்குதா பாரு சார்னு சொல்லிட்டாரு. ஒரு புத்தகத்தைப் பிரிச்சதுமே அதெல்லாம் ஸ்பெஷல் இஷ்யூஸ்னு எனக்குப் புரிஞ்சிட்டுது. ஒரே ஒரு புஸ்தகத்தை எடுத்துப் பிரிச்சிப் பார்க்க ஆரம்பிச்சேன். அதை மூடவே மனசில்லை. அவ்வளவு அற்புதமான படங்கள். ஆர்வத்துல ஒவ்வொரு புத்தகமா எடுத்து எடுத்து பிரிச்சி பார்த்தேன். எல்லாமே பொக்கிஷங்கள். முதல் உலகப்போர், இரண்டாவது உலகப்போர், ரஷ்யப்புரட்சி, பிரெஞ்சிப்புரட்சி தொடர்பான ஏராளமான படங்களும் கட்டுரைகளும் இருந்துச்சி. ஒவ்வொரு போட்டோவுக்குப் பின்னாலும் ஒரு வரலாறு.”

“என்ன முடிவெடுத்தீங்க?”

“எனக்கு எல்லா புத்தகங்களையும் எடுத்துக்கணும் போல இருந்தது. என்ன விலைக்கு கொடுப்பீங்க சிவான்னு கேட்டேன். ஒவ்வொரு பைண்டிங்கும் ஆயிரம் ரூபா. பத்து பைண்டிங்கும் சேர்த்து பத்தாயிரம் ரூபா கொடுத்துட்டு எடுத்துக்குங்க சார்னு சொன்னாரு சிவா. என்ன சிவா, பத்தாயிரம் ரூபா எனக்கு எப்படி கட்டுப்படியாகும் சிவான்னு கேட்டேன். சிவா சிரிச்சிகிட்டே அதுக்குக் கொறைஞ்சி கொடுத்தா, எனக்குக் கட்டுப்படியாவாது சார்னு சொல்லிட்டாரு சிவா.”

“வாங்கினீங்களா, இல்லையா?

“என்னால எப்படி வாங்கமுடியும்? அவ்ளோ பணம் எங்கிட்ட அப்ப கிடையாது. எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டமாதிரி ஒவ்வொரு புத்தகமா எடுத்து   எடுத்து பொரட்டிப் பார்த்துட்டு சரி, அப்புறமா வரேன் சிவான்னு சொல்லிட்டு வந்துட்டேன்.”

“அப்புறம்?”

“நான் எங்க போனாலும் அந்த லைஃப் ஸ்பெஷல் இஷ்யூஸ் ஞாபகமாவே இருந்தது. மறக்கவே முடியலை. அன்னைக்கு சாயங்காலம் சூப்பர் மார்க்கெட்டுக்குப் போன சமயத்துல ஹரிகிட்ட லைஃப் ஸ்பெஷல் இஷ்யூஸ் பார்த்த விஷயத்தைச் சொன்னேன். அவரு அந்த நிமிஷமே கல்லாவை விட்டு எழுந்து வந்துட்டாரு. அற்புதமான பொக்கிஷத்தை பார்த்துட்டு வாங்காத வந்துட்டீங்களே நயினா. இப்பவே கெளம்புங்க நயினா, வேற யாராவது வாங்கிட்டு போயிட்டாங்கன்னா, நமக்கு கிடைக்காம போயிடும். உடனடியா போய் வாங்கிட்டு வந்துடலாம்னு துடிச்சாரு ஹரி. என்ன ஹரி சொல்றீங்க, அவரு பத்தாயிரம் ரூபா சொல்றாரேன்னு சொன்னேன். புரியுது நயினா, ஒரு தங்க நகையையோ வைர நகையையோ பணம் போட்டு வாங்கமாட்டமா, அந்த மாதிரி நினைச்சிக்குவோம், கெளம்புங்கனு சிரிச்சிகிட்டே சொன்னாரு ஹரி. ஹரி வாங்கினாருன்னா அது நான் வாங்கினமாதிரிதான். அப்பப்ப வாங்கி நானும் படிக்கறதுக்கு வசதியா இருக்கும்னு தோணிச்சி. உடனே ஒரு ஆட்டோவை புடிச்சி சிவா கடைக்கு வந்துட்டோம். அந்த அளவுக்கு லைஃப் ஸ்பெஷல் இஷ்யூஸ் மேல ஹரிக்கு ஒரு ஆர்வம் இருந்தது.”

“நாம தேடறதன் வழியா நாம பெறுவது என்னங்கற அம்சம்தான் நம்முடைய ஆர்வத்துக்கான தூண்டுகோல்னு தோணுது சார். பணம்ங்கறது எப்பவும் ரெண்டாவது பட்சம்தான்”

“உண்மைதான் பாவண்ணன். ஹரிக்கு அந்த மாதிரியான நோக்கம்தான். இதுல என்ன பிரச்சினைன்னா, நாம நேரிடையா அந்தப் புத்தகங்களை சந்தா கட்டி வாங்கறது கஷ்டம். பல மடங்கு கூடுதலான பணம் கொடுத்தாதான் அது சாத்தியமாகும்.”

“ஆமாம் சார். நீங்க கடைக்குப் போய் சேருகிறவரைக்கும் அந்தப் புத்தகம் அங்கயே இருந்ததா? அதைச் சொல்லுங்க முதல்ல”

“அவசரப்படாதீங்க. இருங்க இருங்க. ஒவ்வொன்னா சொல்றேன். ஆட்டோவுல போவும்போதே ஹரிகிட்ட ஒரு வார்த்தை சொன்னேன். நீங்க போனதுமே பத்தாயிரம் ரூபாயை தூக்கி குடுத்துடாதீங்க ஹரி. கொஞ்சம் பேசிப் பார்த்து விலையை முடிஞ்சவரைக்கும் குறைச்சிப் பார்ப்போம். எந்த அளவுக்கு விலை குறையுதோ, அந்த அளவுக்கு நமக்கு நல்லதுன்னு சொன்னேன். சரி நயினா, அப்படியே செய்யுங்கன்னு சொல்லிட்டாரு ஹரி”

“அப்புறம்”

“சிவா கடைகிட்ட போய் ஆட்டோவுலேர்ந்து எறங்கி கடைக்குப் போனோம். நல்ல வேளையா சிவா கடையிலயே இருந்தாரு. அவருக்குப் பக்கத்துல அந்தப் பைண்டிங் கட்டும் இருந்தது. எங்களைப் பார்த்ததும் நீங்க திரும்பி வருவீங்கன்னு தெரியும் சார்னு அந்தக் கட்டை தூக்கி எங்க முன்னால வச்சாரு. சிவா ஒவ்வொரு பைண்டிங்கா எடுத்து பிரிச்சி பிரிச்சி பார்த்தாரு ஹரி. கொஞ்ச நேரம் கழிச்சி, வாங்கிக்கலாம் நயினான்னு சொல்ற மாதிரி தலையை அசைச்சாரு”

“சரி”

“இந்தப் புத்தகத்துமேல ஆசைப்பட்டுத்தான் இவரை அழைச்சிகிட்டு மறுபடியும் வந்திருக்கேன்.  எங்க ஆசை எப்படிப்பட்டதுன்னு நல்லா தெரிஞ்ச ஆளு நீங்க. வித்துக் கொடுக்கறேன்னு சொல்லித்தான் நீங்க யாரோ ஒருத்தவங்ககிட்டேர்ந்து இந்தப் புத்தகங்களை எடுத்து வந்திருப்பீங்கன்னு எங்களுக்கும் தெரியும். அவருக்கும் நீங்க பணம் கொடுக்கணும், அதுபோக உங்களுக்கும் கொஞ்சம் நிக்கணும். அதுதான் வியாபாரம். அதுவும் எங்களுக்கும் தெரியும். அதனால நாங்க வாங்கிக்கிற மாதிரி ஒரு நல்ல விலையைச் சொல்லுங்க. இப்பவே எடுத்துட்டு போயிடறோம். வெளியே ஆட்டோ கூட ரெடியா நிக்குதுன்னு சொன்னேன்”

“என்ன சொன்னாரு சிவா?”

“அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே சார். ஒரே விலைதான். பத்தாயிரம் ரூபாய் கொடுத்துட்டு எடுத்துக்குங்கன்னு மறுபடியும் சொன்னாரு. பழைய பாட்டையே பாடாதீங்க சிவா, நான் ஒரு விலை சொல்றேன். கேளுங்க. அதான் நியாயமான விலைன்னு சொன்னேன். சிவா என்னையே உத்துப் பார்த்தாரு. ஒரே விலைதான் சிவா. அஞ்சாயிரம் ரூபா. பத்து பைண்டிங்கையும் மொத்தமா எடுத்துக்கறோம்னு அடிச்சி சொன்னேன். என்ன சார் ஒரேடியா பாதிக்குப் பாதி கேக்கறீங்கன்னு குரலை இழுத்தாரு சிவா. அதான் விலை சிவா. எங்களுக்கு அதுதான் கட்டுப்படியாவும்னு தீர்மானமா சொன்னேன். ஒரு நிமிஷம் எதையோ யோசிச்சி பார்த்தாரு சிவா. அப்புறம் த்ச்னு நாக்கு சப்பு கொட்டிகினே சரி சார், உங்கள மாதிரியானவங்ககிட்ட எப்படி சார் பேரம் பேசறது, பணத்தைக் கொடுத்துட்டு எடுத்துட்டு போங்க சார்னு சொல்லிட்டாரு.”

“பரவாயில்லையே. பேரத்தை வெற்றிகரமா முடிச்சிட்டீங்க”

“ஆமா. ஹரிக்கு ஆனந்தமோ ஆனந்தம். அடுத்த நிமிஷமே பர்ஸ்லேர்ந்து அஞ்சாயிரம் ரூபாயை எடுத்து சிவாகிட்ட கொடுத்துட்டாரு. ஒரே நிமிஷம்தான். பிசினஸ் முடிஞ்சிட்டுது. பத்து பைண்டிங்குகளையும் அதே ஆட்டோவுல ஏத்திகிட்டு கடைக்கு வந்துட்டோம். நானும் ஹரியும் மாறிமாறி அந்தப் புத்தகங்களைப் படிச்சி முடிக்க ஆறு மாசமாச்சி. அதுல பார்த்த ஒவ்வொரு புகைப்படமும் அற்புதமான படம். இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்குது”

தொடர்ந்து சில கணங்கள் அமைதியாகவே நகர்ந்தன. ஒரு பெரிய புனைகதையை ஒருவர் சொன்னதைக் கேட்ட நிறைவு எனக்குள் ஏற்பட்டது. ஒவ்வொரு காட்சியையும் எனக்குள் நானே சித்தரித்துப் பார்த்துக்கொண்டேன்.

“சிவாவுடைய மனைவி ஏன் உங்ககிட்ட பேச ஆசைப்பட்டிருப்பாங்கன்னு இப்ப எனக்குப் புரியுது சார். உங்க கட்டுரை,  சிவா மறுபடியும் உயிரோடு எழுந்து நடமாடற மாதிரியான ஒரு உணர்வை அவுங்களுக்குக் கொடுத்திருக்கும் சார். அந்த வேகம்தான் அவுங்களை பேச வச்சிருக்குது” என்றேன்.

விட்டல்ராவ் புன்னகையுடன் தலையசைத்துக்கொண்டார்.  பிறகு “சென்னைக்குப் போகும்போது ஒரு முறை சிவா பழைய புத்தகக்கடைக்கு போய் வரணும் பாவணணன். அந்த அம்மாவையும் பார்த்துட்டு வரணும். ஹரியையும் பார்க்கணும்” என்று சொன்னார்.   

 

(அம்ருதா – ஜூன் 2025)