“அழுவுணி ஆட்டம் ஆடியது அவர்கள்தான்” என்றேன் நான்.
நான்தான்
என்றார்கள் அவர்கள். ஏற்கனவே
நாய்த்தோல் பந்தால்
முதுகு சிவக்க அடிவாங்கிய வேதனை எனக்கு. பட்டாளமாய்
எல்லாரும்
சேர்ந்துகொண்டு குற்றம் சாட்டியபோது அவமானத்தில்
அழுதுவிடுவேன் போலிருந்தது. ஒரு கணத்தில் கேலிச்சொற்களின்
கனம் தாங்காமல் பதிலளிக்க இயலாமல் நின்றதும் மிகுந்த
எக்காளத்துடன் அத்தனை பேரும் சிரித்தபடி என்னையே சுற்றி
வந்து ‘தோத்தாங்குளி’ பாட்டுப் பாடிவிட்டு ஓடினார்கள்.
இன்னும் சிறிது நேரத்துக்குள் பந்தாட்டத்தை விடவும் அதிக சந்தோஷம்
ஊட்டத்தக்க
விஷயம் எதிலாவது என்னை ஈடுபடுத்தி ஜெயித்துவிட
வேண்டும்
என்ற வேகம் மூளவே, கண்களை அங்குமிங்கும்
படரவிட்ட
போதுதான் ஆலமரத்தின் பக்கத்தில் வசீகரமான
அக்கூடாரங்களைக் கண்டேன். உடனே என் முகத்தில் ஆனந்தம்
படர்ந்தது.
இரைக்கஇரைக்க பந்தைத் துரத்திக் கொண்டோடும்
அவர்கள்
பக்கம் அலட்சியமான பார்வையொன்றை உதிர்த்தபடி
கூடாரங்களை
நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
கூடாரங்களைக் கண்டுபிடித்ததில் பெருமையாய் இருந்தது. போன
வாரம்கூட
ஆட வந்திருந்தேன். அப்போது இவை இல்லை என்பதே
என் ஞாபகத்திலிருந்தது. இந்த வாரம்தான் அமைக்கப்பட்டிருக்க
வேண்டும்
என்று நினைத்துக்கொண்டதுமே
அவற்றின் அமைப்பு
விதத்தை
மனசில் பதித்துக்கொள்ள விரும்பினேன். ஒரே
விஷயத்தையே
மீண்டும் மீண்டும் பேசி அலுப்புண்டாக்குகிற
சிநேகிதர்கள் மத்தியில் புதுமையான ஒரு விஷயமாக கூடாரங்களைப்
பற்றிப்
பேச முடியும் என்றும் ஒரு எண்ணம்.
குட்டையான
அமைப்பு. மோசமாய் அழுக்கேறிய முரட்டுத்
துணிகள்.
அங்கங்கே இருந்த பொத்தல்களுக்குள் இரும்புத்துண்டோ
மூங்கில்
கழியோ செருகி இறுக்கப்பட்டு கூம்பு வடிவத்தில் இருந்தன.
உறுதிக்காக
நாலுபக்கமும் இழுத்து முளைக்குச்சியடித்துக் கட்டி
இருந்தார்கள். தள்ளித்தள்ளி இதேபோலவே ஏழெட்டுக் கூடாரங்கள்.
ரொம்பவும்
பக்கத்தில் போனதும்தான் மாமிச நாற்றத்தையுணர்ந்தேன்.
குமட்டலாய்
இருந்தது. நாற்றம் பெரிய விஷயமே இல்லை என்கிற
மாதிரி,
அங்கேயே மூன்று ஆட்கள் படுத்திருப்பது ஆச்சரியமாய்
இருந்தது.
குண்டுகுண்டான உடம்பு அவர்களுக்கு. கலைந்த தலை,
பெரிய மீசை, கழுத்தில் நிறைய வர்ணமணிகள், சுருண்டு சுருண்டு
மார்பில்
அடர்ந்த மயிர். இடுப்பில் அடர் சிவப்பில் இறகுகள்
சிதறிக்
கிடந்தன. சிப்பிபோல ஒன்றிரண்டு கண்ணில் தட்டுப்பட
கையில் எடுத்து, அதன்மேல் மொய்த்திருந்த எறும்புகளை உதறிவிட்டு
ஆச்சரியத்தோடு நோக்கினேன். சில நொடிகளுக்குள் ஏதோ
ஒரு பறவையின் அலகுகள் அவை என்று கண்டுகொண்டதும்
மனசில் பயமும், கலவரமும் உண்டானது. பீதியோடு படுத்துக்
கிடந்தவர்களைப் பார்த்தேன். முதலில் தோன்றாத அச்சம்
இப்போது
பரவியது. பின்னால் திரும்பிச் சென்று பந்தாட்டத்தில்
சேர்த்துக்கொள்ளவும் பிடிக்கவில்லை. அவர்களை விட்டால் எனக்கு
வேறு கதியோ துணையோ இல்லை என அவர்கள் நினைத்துப்
பழிக்கக்கூடும் என யோசித்தேன்.
‘யாரது?’ என்கிற குரல் என்னைத் திகிலடையச் செய்தது.
-தூங்கியவர்கள் எழுந்துவிட்டார்களோ என்று நடுங்கினேன்.
அப்படி இல்லை. குரல் இன்னொரு திசையில் ஒரு மரத்தடியில்
உட்கார்ந்திருக்கிற கிழவியிடமிருந்து வந்தது. குரல் வந்த இடத்தை
நான் கண்டுபிடிப்பதற்குள் நான்கைந்து முறை கூப்பிட்டுவிட்டாள்
அவள். தளர்ந்த அவள் கழுத்திலும் வர்ணமணிகள் தொங்கின.
தாங்கமுடியாத கனத்தாலேயே அவள் கழுத்து வளைந்திருக்க
வேண்டும்போல் தோன்றியது. சந்தேகத்தோடு கண்களை
இடுக்கிக்கொண்டு அவள் என்னைப் பார்த்தாள். விளையாட
வந்தவன்
என்று என்னைப் பற்றிச் சொல்லிக்கொண்டேன். இந்த
உலகத்துப்
பிறவியே இல்லை என்கிற மாதிரி அவள் கோலம்
விசித்திரமாய் இருந்தது. என் பத்து வயசில் இதற்கு முன்பு அப்படி
ஒருத்தியைப் பார்த்ததே இல்லை நான்.
‘அந்தக் கோல எடுத்துக் குடுக்கறியா?’
கிழவி சுட்டிக்காட்டிய திசையில் கிழிந்த சாக்கின்மேல் மீன்கள்
உலர்ந்து
கிடந்தன. கொஞ்சம் தாண்டி ஒரு மூலையில் பிரம்பு
கிடந்தது.
பிரம்பை எடுக்கக் குனிந்தபோது மீன் கவிச்சை முகத்தில்
அறைந்தது.
சட்டன வயிறு குழம்பி வாந்தி வரும்போல இருந்தது.
‘இந்தக் காக்காய்ங்கள சுட்டுத்தான் பொசுக்கணும். சூசூன்னா
போவுதா.
அதுக்குத்தா -தூக்கிப் போட்டன்...’
அப்போதுதான் அவள் கால்களைக் கவனித்தேன். இரண்டு
கால்களுக்கும் வித்தியாசமிருந்தது. என் காலை விடவும் மெலிந்திருந்தது
ஒன்று. அநேகமாய் அவள் எல்லா இடங்களுக்கும் இடுப்பால்தான்
நகர்ந்து
போகவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
கைநீட்டிப்
பிரம்பை என்னிடமிருந்து வாங்கும்போது
அவள் மடியில் நிறைய குச்சிகளைக் கண்டேன். கத்தி ஒன்றை
வைத்துக்கொண்டு அளவு பார்த்துக் கிழித்து வகைவகையாய்
அடுக்கியிருந்தாள்.
‘எதுக்கு இதுலாம்?’
‘கூண்டு செய்ய.’
மரத்துக்குப் பின்னாலிருந்த இரண்டு வேறு கூண்டுகளைக்
காட்டினாள்.
அவற்றை உடனே தொட்டுப் பார்க்கவேண்டும்போல
ஆசையாய்
இருந்தது. நகர்ந்து -தூக்கித் திருப்பித்திருப்பிப்
பார்த்தேன்.
கச்சிதமான
கூண்டு. நடுவில் சின்ன அளவுக்குச்சியால் ஒரு
கதவு. மூடவும், திறக்கவும் கம்பிக் கொக்கி. எடுத்துக்கொண்டு
ஓடிவிடவேண்டும்போலத் தோன்றிற்று.
‘நல்லா இருக்கா?’
‘ம்.’
‘ஒன்னு அஞ்சி ரூபா.’
என் உற்சாகமும் கவனமும் கூண்டின் மேலேயே குவிந்து
கிடந்தன.
நான் வளர்க்கும் கிளியின் பொருட்டு இப்படி ஒரு
கூண்டுக்காக நான் காலமெல்லாம் ஏங்கிக் கிடந்தேன். உண்மையைச்
சொல்லப்
போனால் ஒரு கூண்டு வாங்கித்தரக் கேட்டு அம்மாவிடம்
பலதரம் வசைகளும் உதைகளும் பட்டிருந்தேன். யாருமற்ற
தருணம் வெங்காயம், தக்காளி, வைத்திருக்கிற கம்பிவலைக்
கூண்டைக்
காலிசெய்துவிட்டு கிளியை அதற்குள் பேசச் சொல்லித்
தருவதும்,
கழுத்தைத் தடவிக் கொடுப்பதும் எப்போதும் சந்தோஷம்
தரக்கூடியவை. ஒரு தக்காளியைத் துணுக்குகளாய் நறுக்கிக்கொண்டு
ஒவ்வொன்றையும் கம்பிகளிடையே கொடுத்ததும், அலகை
நுழைத்து
லாவகமாய் அது வாங்கித் தின்னும் பக்குவம் என்
சந்தோஷத்தை
அளவற்றதாக்கியிருந்த சமயத்தில் தடதடவென்று
அம்மா நுழைந்து முதுகில் அறைந்து விட்டாள். ‘தொடுவியா...
தொடுவியா?’
என்று சொல்லிச்சொல்லி அடி விழுந்தது. கிளியை
எடுத்துவிட்டதும் அம்மா திட்டிக் கொண்டே தண்ணீரால்
கூண்டைக்
கழுவினாள். ‘ஒன்னு ஒன் கிளி கழுத்த முறிக்கணும்;
இல்ல ஒன் கைகால முறிக்கணும். அப்பதான் எனக்கு நிம்மதி’
என்பதுதான்
அம்மாவின் தீர்மானமான வசை. அவள் குரலில்
இருந்த உக்கிரம், சொல்வதுபோல கண்டிப்பாக செய்துவிடுவாள்
என்பதுபோல
இருந்தது. பீதி காரணமாகவே கூண்டைத்
தொடுவதையோ,
கூண்டு வேண்டும் என கேட்பதையோ அறவே
விட்டுவிட்டேன். மனசுக்குள் மாத்திரம் என் கிளிக்காக செய்யப்
போகிற கூண்டு பற்றிய கனவுகளை வளர்த்துக்கொண்டிருந்தேன்.
சன்னல் கம்பிகளில் தொற்றித் தொற்றி ஏறி கால் இளைப்பாறும்
கிளியைப்
பார்க்கப்பார்க்கப் பரிதாபமாயிருந்தது. திடுமென
கூண்டைப்
பார்த்ததும் கிளியின் கஷ்டமும் என் கஷ்டமும்
விடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்.
‘ரொம்ப நல்லா
இருக்குது’
என அடக்க முடியாத சந்தோஷத்தில் பிதற்றியது என்
வாய்.
‘ஒன்னு அஞ்சி ரூபா.’
திரும்பத்திரும்ப கிழவி அதையே சொன்னது வேதனையாகவும்
கவனத்தைச்
சிதைப்பதாயும் இருந்தது. சட்டென வைத்து விட்டு
திரும்பினேன்.
‘வேணாமா ஒனக்கு?’
‘«ஷீணும்.’
‘எடுத்துக்கோ. ஒண்ணு அஞ்சி ரூபா.’
‘எங்கிட்ட காசி இல்ல.’
‘ஊட்ல கேட்டு வாங்கியா, போ.’
தலைகுனிந்தபடி நடந்தேன். இதற்குள் தூக்கத்தில் இருந்து
விழித்தவன்,
கிழவியிடம் என்னமோ கேட்டான். அது ஏதோ வேறு
பாஷை போல இருந்தது. ஒன்றும் புரியவில்லை.
பாதையருகில் வந்ததும் பந்தாடிக் கொண்டிருந்தவர்கள்
உட்கார்ந்து கதை பேசுவது தெரிந்தது. கம்பீரமாய் நான் கூடாரங்கள்
இருக்கிற
திசையையும், அங்கு பார்த்ததையும் சாகசச் செயல்போல
பெருமையுடன் விவரித்தேன். ஆட்டத்தில் சேராததால் எனக்கு
ஒன்றும்
நஷ்டமில்லை என்பது போலப் பேசினேன். அதற்குள்
கும்பலில்
மூத்தவன் ‘ஐயய்ய... அவுங்க நாடோடிக் கூட்டமாச்சே’
என்று அருவருப்பான குரலில் என்னைப் பார்த்துச் சொன்னான். ‘ஏ,
கட்ட வெரல மூடிக்குங்க. அவனத் தொடாதீங்க. அவன் தீட்டு. பச்ச
இருக்கா
ஒங்கிட்ட. பச்ச இல்லாதவங்க எலய பறிச்சு வச்சிக்குங்க’
என்று மடமடவென்று மற்றவர்களுக்கு அவன் கட்டளையிட்டதும்
எல்லாரும்
அப்படியே செய்து மீண்டும் என்னைக் கேலி செய்ய
ஆரம்பித்தார்கள். எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
துக்கத்தோடு ஒதுங்கி ஏரிப்பக்கம் நடக்க ஆரம்பித்தேன். கூண்டு
பற்றிய ஏக்கம் வேறு மனசை அரித்தது.
சாப்பாட்டுக்கு வீடு திரும்பியதும் அம்மா என்னைப்
பார்த்து
அதட்டினாள். யாரோ கோள் சொல்லி இருக்கக்கூடும்
என்று அப்போதே புரிந்துவிட்டது. சொன்னவனை மனசுக்குள்
திட்டினேன்.
‘பள்ளிக்கூடம் லீவு உட்டாலே இது பெரிய ரோதன’
என்று ஆரம்பித்து பெரிசாய் திட்டினாள் அம்மா. கடைசியில்
நாடோடிகளோடு சேரக்கூடாது என்று கறாராய்ப் புத்தி சொல்லி
முடித்தார்கள். எல்லாவற்றுக்கும் தலையாட்டும் நிலையில்தான்
இருந்தேன்.
பசி அப்படி!
சாப்பாடு
முடிந்து கிளிக்குச் சோறு பிசைந்து ஊட்டத்
தொடங்கியதும் மீண்டும் கூண்டின் ஞாபகம் வந்தது. கூண்டு இருந்து
விட்டால்
பிரச்சினையே இல்லை. ஒரு சின்னத் தட்டில் உருட்டி
உள்ளே வைத்துவிட்டால் கிளியே சுயமாய்க் கொத்தித் தின்றுவிடும்
எனத் தோன்றியபோது கூண்டு பற்றிய சிந்தனை வளர்ந்தது.
கண்களை மூடிக்கொண்டு சுவரில் சாய்ந்துவிட்டேன்.
அடுத்தநாள்
பள்ளி விட்டு வந்ததும் கூடாரங்களை நோக்கி
ரகசியமாய்ப் போனேன். கால் சூம்பிய கிழவி அதே மரத்தடியில்தான்
இருந்தாள்.
ஆள் நடமாட்டம் அதிகமிருந்தது. என் வயசுப்
பிள்ளைகள்
முதற்கொண்டு பெரியபெரிய ஆள்கள் வரை வெறும்
கோவணத்தோடு
மாத்திரமே இருந்தார்கள். என்னைவிடச்
சிறியவர்கள் ஆடையின்றித் திரிந்தார்கள். ஆனால் எல்லாரும்
கழுத்தில்
பெரியபெரிய மணிகளை அணிந்திருந்தார்கள். அவர்கள்
பாஷை சுத்தமாய்ப் புரியவில்லை. நான் கிழவிக்குப் பக்கத்தில்
கூண்டைத்
தேடினேன். ஐந்து இருந்தன. மெல்ல நடந்து கூண்டின்
அருகில்
நின்றேன். என்னை உடனே அடையாளம் கண்டு
கொண்டாள்
கிழவி.
‘காசி வாங்கியாந்தியா?’
இல்லை என்பது போல தலையசைத்தேன்.
‘அஞ்சி ரூபா ஒன்னு... போய் வாங்கியா போ.’
பல பிள்ளைகள் அதற்குள் கிழவியைச் சூழ்ந்து தம் பாஷையில்
ஏதோ கேட்க, என்னமோ சொன்னாள் அவள். உடனே என் பக்கம்
திரும்பி
ஆளாளுக்குப் பணம் கேட்டார்கள் அவர்கள். அதற்குமேல்
அங்கு நிற்கமுடியாமல் திரும்பிவிட்டேன். கிளியை ஏந்திக்கொண்டு
என் துக்கத்தையெல்லாம் அதனிடம் சொல்லி ரகசியமாய்
உருகினேன்.
இரவில் வரும் கனவுகளில்கூட கூண்டு வாங்குவது
பற்றியே
நினைத்தேன். ஆனாலும், அம்மாவையோ அப்பாவையோ
இதுபற்றிக்
கேட்கத் துளியும் தைரியமில்லை.
கூடாரங்களுக்குப் பக்கத்தில் போவதும், நிற்பதும் நாளா
வட்டத்தில்
பயமற்ற விஷயங்களாகி விட்டன. சாயங்காலங்களில்
அங்கே இங்கே ஆடுகிற மாதிரி போக்குக் காட்டிவிட்டு ரகசியமாய்ப்
புறப்படுகிற வரைக்கும்தான் நெஞ்சில் பயம் திக்திக்கென்று அடித்துக்
கொண்டதே
தவிர மிச்ச நேரங்களில் தைரியமாய் இருந்தேன். எந்த
நேரம் பார்த்தாலும் ‘இன்னா காசி எடுத்தாந்தியா?’ என்று தினமும்
கேட்கிற
கிழவியையும் சிநேகிதம் பிடித்துவிட்டேன். இன்னும்
கொஞ்சம்
முன்னேற்றம் போல அவளிடமிருந்து கத்தியை வாங்கிக்
குச்சிகளை
அவளைப்போலவே அளவாய் நறுக்கிச் சீவிக் கொடுத்தேன்.
சந்தோஷத்தில் பற்களற்ற வாயால் அவள் சிரிக்கும்போது ஒருதரம்
என் கூண்டின் ஆசையைப் பிரஸ்தாபித்தேன். சட்டென்று அவள்
என் பொருட்டு ஒரு கூண்டு செய்துகொடுக்க ஒப்புக்கொண்டாள்.
அப்போது
என் மனத்தில் பொங்கிய ஆனந்தத்துக்கு அளவே
இல்லை.
‘எப்ப செஞ்சித் தருவ?’
‘இன்னம் ஒரு வாரம் போவட்டும். அதுக்கப்பறம் செஞ்சித்
தரேன்.’
மெல்ல நான் சந்தோஷத்தில் மிதக்கத் தொடங்கினேன். நேரம்,
பொழுதை மறந்தேன். நேர்த்தியாய் முடைந்த கூண்டு ஒன்றின்
பிம்பத்தை
மனசுக்குள் உருவாக்கிக்கொண்டேன்.
வீடு, கோயில், கடை,
தெரு, கூடாரம், பூமி எல்லாமே கூண்டுகள் மயமாய் மனசுக்குள்
தெரிந்தது.
அலைதலில் பொழுது சரிந்து இருட்டிவிட்டது. வாசலில்
அம்மாவைக்
கண்டதும் பயம் அப்பிக்கொண்டது.
‘நாடோடிக் கூட்டத்து ஆளுங்களோட ஆடாத ஆடாதன்னு
எத்தினி
தரம் சொல்றன், கேக்கறியா நீ? நாடோடிக் கும்பலோடு
அலயற புத்தி இருந்தா எதிர் காலத்தில் உருப்படுவியா நீ...?’
பளார்பளார்
என்று அடித்தாள் அம்மா. வலி பொறுக்காமல்
விம்மிவிம்மி அழுதேன். அம்மா என்னை மன்னிக்கத் தயாராயில்லை.
கரடுமுரடான
வாசல் தரையில் முட்டிபோடச் சொன்னாள். நேரம்
கழிந்துகொண்டே இருந்தது. அம்மா என் பக்கமே வரவில்லை.
அழுதுஅழுது
என்று கண்கள் சிவந்தன. இதயம் வெடித்து விடும்போல
இருந்தது.
கால்கள் உடைந்தேவிட்டன என நினைத்தேன். கடைவேலை
முடிந்து
இரவு அப்பா திரும்பிய பிறகுத்£ன் சமாதானமாகி அம்மா
உள்ளே அழைத்தாள். அப்போதும் நூறு மிரட்டல்கள். ஒரு வாரமாய்
வெளியில்
எங்கும் போகவில்லை. உலகம் வெறுப்பாய் இருந்தது.
கிளிக்குப்
பக்கத்திலேயே உட்கார்ந்து என் வேதனையையெல்லாம்
சொல்லி அழுதேன். நெஞ்சே கரைந்து உருகியது. கிழவி எனக்காக
இலவசமாக
கூண்டைச் செய்துதர ஒத்துக்கொண்ட வேளையில்
இப்படி ஆகிவிட்டதை நினைத்துநினைத்துத் துக்கப்பட்டேன்.
அடுத்த நாள் மாலை வெளியே வந்தேன். வாசலில் உட்கார்ந்து
வேடிக்கை
பார்த்தேன். கால்கள் கிழவியிடம் சென்று கூண்டு
பற்றிக்
கேட்கத் துறுதுறுத்தன. திடுமென ஓர் எண்ணம்
உதித்தது.
உள்ளே போய் கணக்குப் புத்தகத்தையும் நோட்டையும்
எடுத்துக்கொண்டு வீட்டுக்கணக்குப் பாடத்தில் சந்தேகத்தைத்
தெளிவுபடுத்திக்கொள்வதற்காக பழனி வீட்டுக்குப் போவதாகச்
சொல்லி அம்மாவின் சம்மதம் வாங்கிக்கொண்டேன். தெருவைக்
கடக்கிற
வரைக்கும் மெல்ல நடந்து அப்புறம் வேறு முக்கில்
திரும்பி
பாய்ச்சலோடு நடந்தேன். குறுக்குச் சந்துகளில் புகுந்து
கூடாரங்களை
அடைந்ததும்தான் மனம் நிம்மதியானது. கிழவியை
அதே மரத்தடியில் பார்த்ததும் நெஞ்சு விம்மி வழிந்தது. என்
முகத்தில்
சிரிப்பு பொங்கியது.
‘இன்னா பையா... ஆளையே காணோம்?’
‘ஒடம்பு சரியில்ல.’
பொய் சொன்னேன்.
‘ஒனக்காக ஒன்னு செஞ்சி வச்சன். நீ வல்லியா... காலயிலதா
எம் பொண்ணு விக்கறதுக்கு எடுத்தும் போய்ட்டா.’
ஏமாற்றத்தில் முகம் சுண்டிவிட்டது எனக்கு. அமைதியாய்
அவரிடம்
கத்தி வாங்கி குச்சிகளைக் கிழித்துக் கொடுத்தேன்.
‘நாளக்கி
செஞ்சித் தரன்.’
‘நெஜமாவா?’
‘இந்தா கிழிக்கறியே, இந்தக் குச்சிங்கள வச்சியே செஞ்சித் தரன்
போதுமா?’
‘ம்.’
‘எத்தினி கிளி ஒங்கிட்ட இருக்குது?’
‘ஒன்னுதா.’
‘வேற இன்னான்னா இருக்குது?-’
‘இப்ப கிளி மட்டும்தா. மின்னால ஒரு மைனா குஞ்சி வச்சிருந்தேன்.
ஓடிப்போச்சி ஒரு நாளு. கூண்டு இருந்தா ஓடாதுல்ல?’
கிழவி சிரித்தாள். எனக்கு ஆறுதலாய் இருந்தது. நேரம் குறித்த
கவனத்தோடு
சீக்கிரமாக எழுந்துவிட்டேன். வந்த வழியே திரும்பி
வீட்டுக்குள் சேர்ந்தேன். அடுத்த நாள் அந்த நேரத்தில் என் கையில்
கூண்டு வந்துவிடும் என்ற நினைக்க நினைக்க ஏகப்பட்ட குதூகலமாய்
இருந்தது.
கூடவே புதிய கூண்டைப் பார்த்ததும் அம்மா தொடுக்கப்
போகிற கேள்விகளை எப்படி சமாளிப்பது என்று கொஞ்சம்
கொஞ்சமாய்
பயம் வரவும் செய்தது. கேள்விகளையும், பதில்களையும் நானே
மாற்றிமாற்றி மனசுக்குள் நிகழ்த்திப் பார்த்தேன். தலை குழம்பியது.
கூண்டு கையில் வந்ததும் அம்மாவை சமாளித்துவிட முடியும்
எனக் குருட்டுத்தனமாய் நம்பிக்கை வைத்துத் தற்காலிகமாய்ப்
பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டினேன்.
சாப்பாடு
முடிந்து படுக்கப் போகிற சமயம் கூடாரங்களிருக்கிற
திசையில்
இருந்து அதட்டலும், கூச்சலும், ஓலமும் கேட்டது.
உயிர் போகிற பயத்தில் எழுகிற அழுகைக் கலவையாய் இருந்தது
அது. தெளிவாய் எதுவும் காதில் விழவில்லை. ஆனால் சட்டென
பயம் கவ்வியது. அம்மாவை இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டேன்.
மீண்டும்
சத்தம் கேட்டது. ‘என்ன சத்தம் அது?’ என்று அப்பா
கேட்பதற்கு
அம்மா சொன்னாள்:
‘கொஞ்ச நஞ்ச அட்டகாசமா பண்ணிச்சி அந்த நாடோடிக்
கூட்டம்.
எடத்தக் குடுத்தா மடத்தப் புடுங்கற ஜனமாச்சே
அது. தெருவே சகிக்க முடியல, எப்படா ஒழியும்னு இருந்திச்சி,
போலீஸ்கிட்ட சொல்லி இருக்கம்னு கல்லு ஊட்டுல மத்யானமே
பேசிக்னிருந்தாங்க. அதான் இப்ப வந்து அடிச்சி ஓட்டறாங்கப்
பலக்குது...’
அம்மாவின்
பேச்சு பாதி புரிந்தும் பாதி புரியாமலும் இருந்தது.
மனசு துக்கத்தில் துடித்தது. பிரம்பு எடுக்கவே நகரமுடியாத
கிழவி இந்தக் கலவரத்தில் எப்படி நகர்வாள் என நினைக்க
வருத்தமாய்
இருந்தது. யோசனைகளில் இருந்து கரையேறமுடியாமல்
இரவெல்லாம்
தத்தளித்துக் கொண்டிருந்தேன்.
காலையில்
பள்ளிக்கூடம் புறப்பட்டேன். தெரு திரும்பியதும், கூட
நடந்த பிள்ளைகளிடம் ஏதோ பொய் சொல்லிவிட்டு மடமடவென
குறுக்குச்
சந்துகளில் புகுந்து ஆலமரத்தடிக்கு ஓடினேன். கூடாரம்
எதுவுமில்லை. மாமிச நாற்றம்தான் மிச்சம் என்கிற மாதிரி இருந்தது
இடம். என் முகம் வாடிவிட்டது. கண்களை மூடிக்கொண்டேன்.
அங்கங்கே
சிதறிக் கிடந்த அரைகுறை பண்டங்களும், கிழிந்த
துணிகளும்
பார்வையில் பட்டு வருத்தத்தைப் பெருக்கியது. ஒரு கல்
குவியலுக்கருகே ஒரு கூண்டு மிதிபட்டு சிதைந்திருந்தது. குனிந்து
எடுத்தேன்.
அந்தக் கணமே அது நொறுங்கித் துணுக்குத்துணுக்காய்
உதிர்ந்தது.
எனக்குச் செய்து கொடுப்பதாய் கிழவி வாக்களித்திருந்த
கூண்டாகத்தான் அது இருக்கவேண்டும் என நினைத்ததும்
அழவேண்டும்போல இருந்தது. கிளியையும் கிழவியையும் ஒரே
நேரத்தில்
மனசில் நினைத்துக்கொண்டேன்.
(அரங்கேற்றம் - 1991)