சர்வோதயம் மலர்கிறது இதழின் ஆசிரியராகவும் மதுரை காந்தி நினைவகத்தின் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிய க.மு.நடராஜன் அண்ணாச்சி 24.05.2021 அன்று இயற்கையெய்தினார். நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்பதை நம்பவே முடியவில்லை. இன்றும் நண்பர்களோடு உரையாடும் சமயத்தில் அவர் தொடர்பான சில செய்திகளும் அடிக்கடி இடம்பெற்று வருவதால், அவருடைய மறைவு மனத்தில் பதியவே இல்லை.
இன்றும்
ஒவ்வொரு மாதமும் வெளிவரும் சர்வோதயம் மலர்கிறது இதழைப் பிரித்துப் படிக்கும்போதெல்லாம்
அவருடைய நினைவு ஒரு கணம் வந்து போகிறது. அவ்விதழில் என்னைத் தொடர்ச்சியாக எழுதவைத்தது
அவர்தான். அவினாசிலிங்கம் அவர்களை முன்வைத்து எழுதிய முதல் கட்டுரையைத் தொடர்ந்து ஏறத்தாழ
எழுபது கட்டுரைகளுக்கும் மேலாக வெளிவந்துவிட்டன. ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்கிக் கொடுத்த
அவர் எப்போதும் என் நன்றிக்குரியவர்.
மரணமடைவதற்கு
இரண்டுமூன்று வாரங்களுக்கு முன்பாக, க.மு.ந. என்கிற நடராஜன் என்னிடம் தொலைபேசியில்
உரையாடிய தருணம் என் நெஞ்சில் இன்னும் பசுமையாகப் பதிந்திருக்கிறது. அப்போது சர்வோதயம் மலர்கிறது இதழில் கதர் கிருஷ்ணன்
என்பவரை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். அந்தக் கிருஷ்ணன் தனக்கு நன்கு
தெரிந்தவர் என்றும் பழகுவதற்கு இனியவர் என்றும் திருச்செங்கோடு ஆசிரமத்தில் அவரைப்
பலமுறை சந்தித்திருப்பதாகவும் நடராஜன் குறிப்பிட்டார். அவருடைய வீட்டுக்குச் சென்றுவந்த
பழைய அனுபவங்களையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டு சொன்னார்.
அதற்கு
முன்பு கிருஷ்ணம்மாள், ஜெகந்நாதன், கெய்த்தான் போன்றோரைப்பற்றி எழுதிய கட்டுரைகளைப்
படித்தபோதும் அதேபோன்ற துண்டுதுண்டான நினைவுப்பதிவுகளை நடராஜன் அவர்கள் சொன்னதுண்டு.
அந்த அனுபவக்குறிப்புகள் அனைத்தும் எழுதிவைக்கத் தக்கவை என்பதால் ”எழுதுங்கள், எழுதுங்கள்”
என்று தொடர்ந்து அவரிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
இப்படி
பல பேர் அவரிடம் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவற்றின் வழியாகப் பெற்ற
ஏதோ ஓர் உத்வேகத்தில் ஒரு நாள் தன் நினைவுப்பதிவுகளை தன் உதவியாளரிடம் சொல்லத் தொடங்கிவிட்டார்.
சிறுகச்சிறுக அவர் சொன்னவற்றையெல்லாம் அந்த உதவியாளரும் குறிப்பெடுக்கத் தொடங்கிவிட்டார். முதலில் நினைவுக்கு
வருவதை முதலில் சொல்லிவிடலாம் என்ற எண்ணத்தில் அவர் அப்பதிவுகளைத் தொடங்கியிருக்கவேண்டும்.
மொத்தாமாக எழுதித் தொகுத்த பிறகு, கால வரிசையில் நிதானமாகப் பகுத்து நூலாக்கலாம் என
அவர் நினைத்திருப்பார் என்று தோன்றுகிறது. அதனால் காலவரிசை எதையும் அவர் பின்பற்றாமல்
சொல்லிக்கொண்டே சென்றிருக்கிறார். துரதிருஷ்டவசமாக,
வாழ்க்கை அந்த வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை.
பதிவுகள்
முழுமையடையும் முன்பாகவே அவர் மண்ணுலகைவிட்டு மறைந்துவிட்டார். க.மு.நடராஜன் அண்ணாச்சி
சொன்ன எல்லாக் குறிப்புகளும் விரித்தெழுதித் தொகுக்கப்பட்டிருக்கும் இன்று, முழுமையடையாமல் இடைவெளிகளோடு கூடிய இப்பிரதியையே
நாம் அவருடைய வாழ்க்கைப்பதிவாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவரே இந்தத்
தன்வரலாற்றை மீண்டுமொருமுறை வாசித்து முழுமை செய்யும் வாய்ப்பு அமைந்தால், இன்னும்
பல செய்திகள் நமக்குக் கிடைக்கக்கூடும்.
தொடக்கப்பகுதியாக
அமைந்திருக்கும் க.மு.நடராஜன் அவர்களின் பள்ளிப்பருவ அனுபவங்கள் படிப்பதற்கு சுவாரசியமாக
உள்ளன. அருப்புக்கோட்டையில் சத்திரிய நாடார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில்
விடுமுறை நாட்களில் வீட்டுக்குத் திரும்புவது வழக்கமாக இருந்திருக்கிறது. அருப்புக்கோட்டையிலிருந்து
வண்டிப்பேட்டைக்கு வந்துவிட்டால் போதும், வண்டிப்பேட்டை சந்தைக்கு கிராமத்திலிருந்து
வந்திருக்கும் ஏதாவது ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றுவிடலாம் என்பதுதான்
திட்டம். அந்த அளவுக்கு எளிதான பயணம்தான் அது.
ஆனால்,
நினைத்திருந்த அளவுக்கு எளிமையற்றதாக ஒருநாள் அமைந்துவிடுகிறது. குறிப்பிட்ட தினத்தில்
கிராமத்திலிருந்து ஒரு வண்டியும் வரவில்லை. அருப்புக்கோட்டைக்குத் திரும்பிச் செல்லவும்
அச்சிறுவனுக்கு மனமில்லை. விடுமுறை நாட்களின் ஆனந்தத்தை இழக்கவும் மனமில்லை. வேறு வழியில்லாமல்
ஒன்பது வயதுச் சிறுவன் தன்னந்தனியாக இருள் நிறைந்த காட்டுப்பாதையில் நடந்து செல்கிறான்.
முன்னால் உயர்ந்ததொரு உருவம் செல்வதைப் பார்க்கிறான். அந்த உருவம் அவனோடு உரையாடுகிறது.
பயண விவரத்தை விசாரித்துத் தெரிந்துகொள்கிறது. அஞ்ச வேண்டாம் என்றும் தன் பின்னாலேயே
வருமாறும் சொல்லிவிட்டு முன்னால் நடக்கிறது. ஊர் எல்லை வரைக்கும் வந்த அந்த உருவம்
சட்டென மறைந்துவிடுகிறது. இருளில் தன்னந்தனியாக வீட்டுக்கு வந்து சேர்ந்த மகனைப் பார்த்த
தாய் பதற்றத்தோடு எப்படி வந்தாய் என்று கேட்டபோது சிறுவன் எல்லாவற்றையும் விரிவாகச்
சொல்கிறான். தான் வணங்கும் காவல் தெய்வமே துணையாக வந்தது என்று சொல்லிக்கொண்டே சிறுவனை
வாரியணைத்துக்கொள்கிறாள் தாய். உணர்ச்சிமயமான அத்தருணத்தை அழகாகச் சித்தரித்திருக்கிறார்
நடராஜன்.
அவருடைய
எழுத்தாளுமைக்குச் சான்றாக இன்னொரு தருணத்தையும் குறிப்பிடலாம். ஒருமுறை மாணவர் விடுதியில்
சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய பிறந்த நாளை அனைவரும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். அப்போது
அவருடைய உருவப்படத்தைத் திறந்துவைத்து பேசும் வாய்ப்பு மாணவரான நடராஜனைத் தேடி வருகிறது.
நடராஜன் படத்தைத் திறந்துவைத்து, ஏதோ ஒரு மன எழுச்சியில் விரலைக் கீறி சுபாஷ் சந்திரபோஸின்
படத்துக்கு ரத்தத்திலகமிட்டு உரையாற்றத் தொடங்கினார். அவருடைய செய்கை அங்கிருந்த மாணவர்களிடையில்
பெரிய எழுச்சியை உருவாக்குகிறது.
மக்களுக்குச்
சேவை செய்யும் விருப்பம் நடராஜனின் நெஞ்சில் மாணவப்பருவத்திலேயே வேர்விட்டு வளரத் தொடங்கிவிட்டது
என்பதை உணரமுடிகிறது. இளம்பருவத்தில் விடுமுறை நாட்களை சகசிறுவர்களோடு குளக்கரையிலும்
தோப்புகளிலும் விளையாடி மகிழ்வதற்காக ஊருக்கு வர விருப்பம் கொண்டிருந்த சிறுவன் பள்ளி
இறுதித்தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில் சேர்வதற்கு முன் கிடைத்த விடுமுறைப் பொழுதுகளை
விளையாட்டில் மூழ்கி வீணடிக்க விரும்பவில்லை. அதற்கு மாறாக, பொதுச்சேவை செய்வதில் செலவழிக்க
விருப்பம் கொள்கிறார் அவர். இந்த மனமாற்றம் இளம்பருவத்திலேயே நடராஜன் அண்ணாச்சியின்
மனத்தில் சமூக சேவை வேர்விடத் தொடங்கிவிட்டது என்பதற்கான தொடக்கப்புள்ளி.
ஆர்வத்தின்
காரணமாக காந்தி கிராம ஊழியரகத்தில் நடைபெற்ற மாணவர் பயிற்சிமுகாமில் சேர்ந்தாலும் ஒவ்வொருவருடைய
உரையையும் ஆழ்ந்து கவனிக்கிறார் நடராஜன். அங்கே
மாணவர்களுக்கு வகுப்பெடுத்தவர்கள் ஜே.சி.குமரப்பா, செளந்திரம் அம்மாள், ஜி.இராமச்சந்திரன்
போன்றவர்கள். அந்தப் பயிற்சி அவரை சிறந்த சமூக சேவகராக வடிவெடுக்க உதவியது. அடுத்த
ஆண்டில் அவர் கல்லூரியில் இண்டர்மீடியட் படிக்கத் தொடங்கினார். அந்த ஆண்டு இறுதியிலும்
சமூகசேவை வகுப்புகள் நடைபெற்றன. அந்தப் பயிற்சியிலும் நடராஜன் பங்கேற்றார். அப்போதும்
ஜே.சி.குமரப்பா மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வந்தார். அத்தகு பயிற்சிகள் அவர் நெஞ்சில்
ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
இளம்வயதிலேயே
மாபெரும் ஆளுமைகளோடு பேசிப் பழக கிடைத்த வாய்ப்பின் விளைவாக அவர் நெஞ்சில் ஏற்கனவே
அரும்பியிருந்த சேவை ஆர்வம் மரமாக வேரூன்றி வளரத் தொடங்கிவிட்டது. அதன் காரணமாக பிரதான
தேர்வுகளை எழுதாமலேயே கல்லூரிப்படிப்பை அவர் முடிக்கவேண்டியிருந்தது. அதன் பிறகு பாடுபட்டு
படித்து எழுதி சர்வீஸ் கமிஷன் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், கிடைத்த வேலையை உதறிவிட்டு
சேவையின் பாதையில் நடக்கத் தொடங்கினார். அந்தப் பயணம் அவருடைய இறுதிமூச்சு வரை ஓயவே
இல்லை.
பயிற்சிக்காலத்தில்
வகுப்புகள் இல்லாத சமயங்களில் புத்தக விற்பனைக்கு உதவி செய்பவராக நடராஜன் பணிபுரிகிறார்.
அப்புத்தகங்களைக் கொண்டு வந்தவர் ஜே.சி.குமரப்பா. விற்பனையான புத்தகங்களுக்கு உரிய
பணத்தை குமரப்பாவிடம் ஒப்படைப்பதற்காகச் சென்றார் நடராஜன். ஆனால் அந்தப் பணத்தை அப்படி
நேரிடையாக வாங்க குமரப்பா தயாராக இல்லை. எத்தனை புத்தகங்கள் விற்றன, எந்தெந்த புத்தகங்கள்
விற்றன. அவற்றின் விற்பனை விலை என்ன என கணக்கிட்டு தனித்தாளில் எழுதி ஒப்படைக்குமாறு
கேட்கிறார் குமரப்பா. ஒருகணம் அதைக் கேட்டு ஆடிப் போய்விடுகிறார் நடராஜன். ஒரு பைசா
கூட வீண்செலவாகவில்லை என்றபோதும் ஒவ்வொன்றையும் நினைவுபடுத்தி கணக்கெழுதுவது எளிதான
செயலாக இல்லை. எப்படியோ ஒரு வழியாக எல்லாவற்றையும் எழுதி கணக்கையும் பணத்தையும் ஒப்படைத்துவிட்டு
வெளியே வருகிறார் நடராஜன். அக்கணத்தில் அது சங்கடமளிப்பதாக இருந்தாலும், அந்த எச்சரிக்கை
உணர்வு வாழ்க்கைமுழுவதும் உதவியாகவே இருந்தது என்று குறிப்பிடுகிறார்.
அத்தருணத்தில்
காந்தியடிகளுக்கும் குமரப்பாவுக்கும் தொடர்புடைய ஒரு செய்தியை தன் ஞாபகத்திலிருந்து
பதிவு செய்கிறார் நடராஜன். பீகாரில் நிவாரணப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில்
நடைபெற்ற நிகழ்ச்சி அது. ஜமுனாலால் பஜாஜ் நிவாரணக்குழுவின் பொருளாளராக இருந்தார். கணக்குவழக்குகளைக்
கவனிக்கும் பொறுப்பில் இருந்தவர் குமரப்பா. நிவாரணப்பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்று
பார்ப்பதற்காக காந்தியடிகள் ஒருநாள் அந்த இடத்துக்குச் சென்றார். அப்போது அவருடைய குழு
உணவுச்செலவுக்கான பில்லை குமரப்பாவிடம் கொடுத்தனர். ஆனால் குமரப்பா அதை அங்கீகரிக்கவில்லை.
நிவாரணப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய படித்தொகையாக ஆறணா என முடிவெடுக்கப்
பட்டிருப்பதாகவும் காந்தியடிகளின் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட பில் அதைவிட அதிகமாக
இருப்பதால் கொடுக்கமுடியாது என மறுத்துவிட்டார்
குமரப்பா. விவாதம் செய்ய விரும்பாமல், நமது செலவை நம் கணக்கிலேயே வைத்துக்கொள்வோம்
என்று காந்தியடிகளும் அந்தப் பிரச்சினையை அத்தோடு விட்டுவிட்டார். காந்தியடிகளிடமே
கறாராக இருந்த குமரப்பா தன்னிடம் கறாராக கேள்வி கேட்டதில் தப்பே இல்லை என நினைத்து
அமைதியடைகிறார் நடராஜன்.
அருப்புக்கோட்டையில்
தங்கியிருக்கும்போதுதான் நடராஜன் முதமுதலாக பூமிதான யாத்திரையில் பங்கேற்கிறார். அந்த
யாத்திரையின் வழியாக வினோபா, ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாள், அருணாசலம், கோ.வேங்கடாசலபதி,
கெய்த்தான், செல்வராஜ், திருமலை என பல ஆளுமைகளோடு பழகும் வாய்ப்பை அவர் அடைகிறார்.
ஒவ்வொருவருடனான அனுபவமும் ஒரு பெரிய கட்டுரைக்கு நிகரான அளவுக்கு இருக்கக்கூடும் என்றபோதும்,
நிறைவுபெறாத இந்தத் தன்வரலாற்றில் சுருக்கமாகவேனும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தத்
தன்வரலாற்றில் ஒருசில குறிப்புகள் நகைச்சுவை ததும்ப குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக
ஒரே ஒரு நிகழ்ச்சியைப்பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். நடராஜன் அவர்களுடைய திருமணம் சர்வோதய சங்கத்திலேயே
மிக எளிமையான முறையில் நடைபெறுகிறது. இருபத்தைந்து ரூபாய்க்கு அவர் மணப்பெண்ணுக்கு
ஒரு கதர்ச்சேலை வாங்கிக் கொடுக்கிறார். திருமணத்தில் கலந்துகொண்ட சர்வோதயப் பிரதிநிதிகள்
வாழ்த்திப் பேசினர். அ.சுப்பராயர் என்ற தொண்டர் உணர்ச்சிவசப்பட்ட வேகத்தில் ’மாப்பிள்ளையும்
கதர் அன்பர், மாமனாரும் கதர் அன்பர். இப்படி ஒத்த கருத்துடைய இரு வீட்டாருக்கும் இடையில்
நல்ல சம்பந்தம் ஏற்பட்டதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று சொல்ல
நினைத்து பதற்றத்தின் காரணமாக ‘என் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்.
அனைவரும் அதைக் கேட்டு சிரிப்பதைப் பார்த்தபிறகே அவர் தன் பிழையை உணர்ந்துகொண்டார்.
அந்தச் சித்தரிப்பைப் படிக்கும்போது அப்பகுதி இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் நம்மையும்
சிரிக்கவைக்கிறது.
அருப்புக்கோட்டையில்
காந்தியக்கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியபோது கிடைத்த பல்வேறு அனுபவங்களையும்
இத்தாலி, ஐரோப்பா என அயல்நாடுகளுக்குச் சென்றபோது கிடைத்த அனுபவங்களையும் நடராஜன் விரிவாகவே
தனித்தனி அத்தியாயங்களாகப் பதிவு செய்திருக்கிறார். சிசிலி காந்தி என வரலாற்றாசிரியர்களால்
அழைக்கப்படுகிற டானிலோ டோக்சி அவர்களைச் சந்தித்த அனுபவம் பற்றிய குறிப்பும் அப்பதிவில்
உள்ளது.
ஒருவேளை,
க.மு.நடராஜன் அவர்கள் நேரிடையாகவே இந்தத் தன்வரலாற்றை முழுமை செய்திருந்தால், சர்வோதயம்
மலர்கிறது இதழின் உருவாக்கம் தொடர்பாகவும் அவ்விதழில் அவருடைய பங்களிப்பு தொடர்பாகவும்
இன்னும் பல வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிட்டிருக்கக்கூடும். அவருடைய எதிர்பாராத
மரணம் அந்த வாய்ப்பைத் தட்டிப் பறித்துவிட்டது.
136 பக்கங்களைக்
கொண்ட இத்தன்வரலாறு விளையாட்டு ஆர்வமும் வற்றாத உற்சாகமும் கொண்ட ஒரு கிராமத்துச் சிறுவன்
பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்வதில் தொடங்கி, வேலைக்குச் சென்று பணமீட்டுவதற்கு
மாறாக சமூகசேவையில் முழுமனத்தோடு ஈடுபட முடிவெடுப்பதைச் சுட்டிக்காட்டிவிட்டு, காலப்போக்கில்
சிறுகச்சிறுக ஒரு வரலாற்றுச் சித்திரமாக அவர் எப்படி வளர்ச்சியடைகிறார் என்பதையும்
நமக்கு உணர்த்துகிறது. மேலும், இன்றைய இளந்தலைமுறையிடம் இலட்சியவாதம் சார்ந்த நம்பிக்கையையும்
ஊட்டுகிறது.
(முனைவர் உ.முத்துஇலக்குமி, ந.இராமலிங்கம்
இருவரும் இணைந்து தொகுத்த ‘க.மு.ந.வின் நினைவலைகள்’ என்னும் நூலுக்கு எழுதிய முன்னுரை)