Home

Showing posts with label அரிஜன ஐயங்கார் கிருஷ்ணசாமி. Show all posts
Showing posts with label அரிஜன ஐயங்கார் கிருஷ்ணசாமி. Show all posts

Monday, 14 September 2020

அரிஜன ஐயங்கார் கிருஷ்ணசாமி : செயல்வீரரின் வெற்றி - கட்டுரை


07.09.1931 முதல் 01.12.1931 வரை இரண்டாவது வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது. இந்தியாவுக்கு முழு சுதந்திரம் அளிப்பதைப்பற்றிய விவாதத்துக்கான அழைப்பென ஆங்கில அரசு அறிவித்திருந்தது. காங்கிரஸ் சார்பாக காந்தியடிகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ள லண்டனுக்குச் சென்றார். மாநாட்டில் அரசு சார்பான பிரதிநிதிகள் மையமான கருத்திலிருந்து விலகி அரசியலமைப்பின் பிரச்சினைகளை நோக்கி விவாதங்களை திசைதிருப்பினார்கள். அதைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளுக்காக நடத்தப்படும் தேர்தலைப்பற்றியதாக பேச்சு மாறியது. சீக்கியர்கள், இஸ்லாமியர்கள் போல தாழ்த்தப்பட்டவர்களை சிறுபான்மையினர் என்னும் பிரிவில் அடக்கி விவாதிப்பது சரியல்ல என்று தொடக்கத்திலேயே தன் மறுப்பைத் தெரிவித்தார் காந்தியடிகள். தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்துக்குள்ளேயே இருக்கிற ஒரு பிரிவினர் என்றும் சிறுபான்மையினர் என அவர்களை அடையாளப்படுத்துவது இந்து மதத்தைப் பிளவுபடுத்தும் முயற்சியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.